கேரள மாநிலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற சமூகச் சீர்திருத்தவாதி ‘சகோதரன்’ அய்யப்பன் – பகுத்தறிவாளர், முற்போக்குச் சிந்தனையாளர்; ஜாதிப் பாகுபாடுகள் ஒழிய போராடியவர். 1917 மே 29ஆம் நாளன்று இவர் உயர் ஜாதியினரோடு தாழ்த்தப்பட்ட மக்களை சரிசமமாக உட்கார வைத்து சாப்பிட வைத்தார். இது “மிஷ்ரபோஜனம்” என்று அழைக்கப்பட்டது. அதன் பிறகு பல முறை இந்த உணவுத் திருவிழா நடந்தது.
வரலாற்றுப் புகழ்பெற்ற இந்த நிகழ்வின் நூற்றாண்டு விழா 2017, மே 27, 28, 29 ஆகிய மூன்று நாள்கள் கேரள மாநில கோழிக்கோட்டில் கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராகச் சென்றவர் நம் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு விமான நிலையத்திலேயே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்வில் உரையாற்றிய ஆசிரியர், தந்தை பெரியார் சமத்துவம் தழைக்கவும், ஜாதிகள் அழியவும் எப்படியெல்லாம் போராடினார் என்பதை வழக்கம்போல் பல சம்பவங்களை நினைவு கூர்ந்து விளக்கினார்.
குருகுலத்தில் பார்ப்பன மாணவர்களுக்கு மட்டும் தனியாக உணவு பரிமாறப்பட்ட கொடுமையை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களைப் போன்றதே இந்த கேரள ‘மிஷ்ரபோஜன்’ போராட்டம். இதைத் தொடர்ந்து பல நகரங்களில் அய்யப்பனைப் பின்பற்றி பல அமைப்புகள் இத்தகைய விழாக்களை நடத்தி சமத்துவம் தழைக்கப் பாடுபட்டன. மூத்த தலைமுறை ‘விடுதலை’ வாசகர்களுக்குத் தெரிந்த விவரங்கள்தான் இவை. இளைய தலைமுறை வாசகர்களுக்குத் தெரிய வேண்டமா?