பிரதமர் மோடியின் அரிதாரப் பேச்சு!

Viduthalai
3 Min Read

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டி யிடும் ராகுல் காந்தியை ஆதரித்து அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இவ்வாறு கூறினார்.
“ஜாதி, மதம், கோயில்-மசூதி இது மட்டுமே பாஜகவின் தேர்தல் பிரச்சார உத்தியாக உள்ளது. மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து அக்கட்சி பேசுவதில்லை.
ராகுல் காந்திக்கு எதிராக பொய்களைப் பரப்புவதையே ஒட்டுமொத்த பாஜகவும் முழு நேரப் பணியாகக் கொண்டுள்ளது. இதற்காக பாஜகவின் அனைத்துப் பிரிவுகளும் முழுவீச்சில் செயல்படுகின்றன.
மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்திக்க இருக்கிறது. இது தெரியாமல் அக்கட்சித் தலைவர்கள் அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவது குறித்து கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனைப் பயன்படுத்தாமல் அவர் களால் பிரச்சாரம் செய்ய இயவில்லை.

மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து அக்கட்சி பேசுவதில்லை. ஏனெனில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மக்களுக்கு புதிய பிரச்சினைகளைத்தான் அவர்கள் உருவாக்கியுள்ளனரே தவிர, மக்கள் நலன் சார்ந்த பெரிய திட்டங்கள் எதையும் செய்யவில்லை. தங்களுக்கு வேண்டப் பட்ட ஒரு சில பெரும் தொழிலதிபர்களுக்கான ஆட்சியையே பாஜக நடத்தி வந்துள்ளது” என்று பேசினார் பிரியங்கா காந்தி.
இந்தப் பேச்சில் அடங்கியுள்ள அம்சங்கள் அனைத்தும் அர்த்தமுள்ளவை.
ஜாதி, மதம், ராமன் இவற்றை விட்டால் சாதனைகளைப் பேசுவதற்குக் கைவசம் அவர்களிடம் ஏதுமில்லை.
எதை எடுத்தாலும் இந்து – முசுலிம் பார்வைதான். இங்குள்ள முசுலிம்கள் யாரும் அரேபியாவிலிருந்து வந்தவர்கள் இல்லை. கிறிஸ்தவர்களும் ஜெருசலத்திலிருந்து வந்தவர்கள் இல்லை.

இந்து மதத்தில் இருந்தவர்கள், இஸ்லாம், கிறிஸ்துவ மதங்களுக்கு மாறியது ஏன்?
இந்து மதத்தின் ஜாதிக் கொடுமையும், தீண்டாமை வெறியும்தானே அவர்களை மதம் மாறத் தூண்டியது.
அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்து வந்த விவேகானந்தரே இதனை ஒப்புக் கொண்டுள்ளாரே!
சி.ஏ.ஏ. சட்டம் ஒன்று போதாதா? மோடி அரசின் முஸ்லிம்கள் மீதான வெறுப்பின் ஆழம் எத்தகையது என்பதற்கு?
வெளிநாடுகளிலிருந்து இந்துக்கள் வந்தால் ஏற்றுக் கொள் வார்களாம்; குடி உரிமை வழங்குவார்களாம். பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் வந்தால் ஏற்க மாட்டார்களாம்.
மோடி அரசு வெளியிட்ட ஒரு விளம்பரம் என்ன சொல்லுகிறது?
மோடி ஒரு படகில் பயணம் செய்கிறார்; கடலில் தத்தளித்துக் கொண்டு இருக்கும் இந்துக்களை எல்லாம் வாருங்கள் என்று கூறி – இந்துக்களை கரை சேர்க்கிறாராம் மோடி.
இது ஒருபுறம் இருந்தாலும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் குறித்து பிஜேபியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸின் பார்வை என்ன?

“இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை அயல் நாட்டினராகக் கருதக் கூடாது – இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரித்துவாழ வேண்டும். எதையும் கேட்காமல் எந்த சலுகைகளையும் பெறாமல் எதற்கும் முன்னுரிமை பெறாமல் – குடி மக்கள் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும்.”
இவ்வாறு கூறி இருப்பவர் ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வால்கர். (ஆதாரம்: “தமிழில் வரையறுக்கப்பட்ட நமது தேசியம்” – ஆங்கிலத்தில் We or Our Nationhood Defined) முசுலிம்கள் குடியுரிமையின்றி வாழ வேண்டும் என்று கோல் வால்கர் எழுதியதைத்தான் இன்றைய பிஜேபி அரசு சட்ட ரீதியாக செய்கிறது.
இந்த அடிப்படைக் கண்ணோட்டத்தில் உள்ளவர்கள் இஸ்லாமியர்களைப்பற்றி எப்படி சிந்திப்பார்கள் – எப்படி நடத்துவார்கள்?
இப்பொழுது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி என்ன கூறுகிறார்?

“இந்து முஸ்லிம் பாகுபாடு பற்றிப் பேசி அரசியல் செய்தால், பொது வாழ்க்கைக்குத் தகுதியற்றவனாகி விடுவேன்” என்கிறார்.
பி.ஜே.பி.யின் கோட்பாட்டையும், கடந்த 10 ஆண்டு ஒன்றிய அரசின் செயல்முறையையும், அதற்கு முன் குஜராத் மாநில முதலமைச்சராக மோடி இருந்தபோது செயல்பட்ட முஸ்லீம் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் அறிந்தவர்களுக்கு – பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு அரிதாரம் பூசிய பச்சையான வாக்கு வங்கி நாடகம் என்பது நூறு விழுக்காடு விளங்கும்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணிப்பும் கருத்தும் மிக மிகச் சரியானதே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *