எச்சரிக்கை ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர் தற்கொலை

viduthalai
1 Min Read

பூவிருந்தவல்லி, மே 15- காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, கணேஷ் அவென்யூ, சுபசிறீ நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன்(31). தனியார் நிதி நிறுவன ஊழியரான இவரது மனைவி பூஜாகுமாரி தனியார்மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவ்விணையருக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது.

பூஜாகுமாரி நேற்று முன் தினம் (13.5.2024) இரவு பணிமுடிந்து வீடுதிரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்ததால் கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக நினைத்து அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றார். தொடர்ந்து நேற்று காலை பூஜாகுமாரி வீட்டுக்குச் சென்றபோதும் வீட்டின் கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்தது. ஆகவே, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சீனிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து, தகவல் அறிந்தமாங்காடு காவல்துறையினர், சீனிவாசனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதல் கட்டவிசாரணையில் தெரிய வந்ததாவது:

சீனிவாசன் இணைய வழி சூதாட்டத்தில் பணத்தை இழந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், மொபைல் செயலி மூலம் பெற்ற கடனையும் இணைய வழி சூதாட்டத்தில் இழந்த சீனிவாசன், கடனை திரும்பச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். ஆகவே, சீனிவாசனை, தனியார் நிறுவன ஊழியர்கள் அவதூறாகப் பேசியுள்ளனர்.
மேலும், சீனிவாசனின் புகைப்படங்களை அவதூறாக சித்தரித்து அவரது நண்பர்களின் செல்பேசிகளுக்கு அனுப்பியதோடு, அடிக்கடி வீட்டுக்கு வந்து பணத்தைக் கேட்டு அவதூறாகப் பேசியுள்ளனர்.

இதனால், கடனை அடைப்பதற்காக தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து கடனை அடைத்த சீனிவாசன், மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு அந்த விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *