சென்னை, மே 8- பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வுக்கு வராதவர்களுக்காக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் துணைத் தேர்வு நடத்த தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதை எழுத விரும்புவோர் தேர்வுத்துறையின் இணைய தளத்தின் மூலம் விண்ணப் பிக்கலாம்.
பள்ளிகள் மூலம் பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்கள் இம்மாதம் 16ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை அதே பள்ளிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
தனித் தேர்வர்கள், 16ஆம் தேதி முதல் அந்தந்த கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மய்யங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வி மாவட்ட வாரியாக சேவை மய்யங்களின் விவரம், இணையத்தில் விண்ணப்பிக்கும் முறை, தனித் தேர்வர்களின் தகுதி குறித்து www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 கட்டணமும், இதர கட்டணம் ரூ.35ஆம் செலுத்த வேண்டும். இணைய பதிவுக் கட்டணம் ரூ.70 செலுத்த வேண்டும்.
பிளஸ் 2 தேர்வை முதன்முறையாக எழுதுபவர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.150, இதரக் கட்டணம் ரூ.35, இணைய பதிவுக் கட்டணம் ரூ.70 செலுத்த வேண்டும். சிறப்பு அனுமதி திட்டம்:
குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்கத் தவறும் மாணவர்கள் உரிய கட்டணத்துடன் ஜூன் 3, 4ஆம் தேதிகளில் இணையத்தில் சிறப்பு அனுமதி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.1000 செலுத்த வேண்டும்.
பொறியியல் படிப்பு: இரண்டே நாளில்
42 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்
சென்னை, மே 8- அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வு இணையவழியில் நடத்தப்பட உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 42,114 மாணவர்கள் (நேற்று மாலை 6 மணி நிலவரப்படி) பதிவு செய்துள்ளனர். அதில் 16,180 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் www.tneaonline.org வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இணைய வசதியில்லாதவர்கள் சிறப்பு சேவை மய்யங்கள் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 01800-425-0110, [email protected] மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.