பட்டியலின மக்களைத் தடுத்ததோடு அல்லாமல்
அவர்களைத் தாக்கியோர்மீது உடனடி நடவடிக்கை தேவை!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
சேலம் மாவட்டம் – ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி என்ற ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில், பட்டியலின மக்கள் கலந்துகொள்ளக் கூடாது என்று தடுத்ததும், தாக்கப்பட்டதும் கண்டிக்கத்தக்கது – குற்றவாளிகள்மீது காலந்தாழ்த்தாது நடவடிக் கையை உடனடியாக எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப் பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் விழாவில், பட்டியலின மக்கள் தாக்கப்பட்டனர் என்ற செய்தி அதிர்ச்சிக்குரியது.
சட்ட விரோதம் – மனித உரிமை மீறல்!
இக்கோவில் விழாவில் பட்டியலின மக்கள் பங் கேற்கக் கூடாது என்றும், கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று தடுப்பதும் பச்சையான சட்ட விரோதமும், மனித உரிமை மீறலுமாகும். இவ்வளவுக்கும் இந்தக் கோவில் இந்து அறநிலையத் துறையின் கீழ் வரக்கூடிய நிலையில், ஆதிக்கஜாதியினர் எந்த உரிமையின்கீழ் பட்டியலின மக்களைத் தடுக்கின்றனர் என்பது முக்கியமான கேள்வியாகும்.
குடிக்கும் நீரில் மலம், சாணம் கலந்ததெல்லாம் எவ்வளவுக் கேவலம்!
இதற்குமுன் சில இடங்களில் குடிக்கும் நீரில் மலத்தைக் கலப்பது, சாணத்தை அள்ளிப் போடுவது என்பதெல்லாம் எந்த வகையிலும் மன்னிக்கப்படவே முடியாத – சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய அநாகரிக செயல்!
‘பறையன்’ பட்டம் போகாமல், ‘சூத்திரன் பட்டம்’ போகாது என்றார் பகுத்தறிவுப் பகலவன் – சமூகநீதிப் பாதுகாவலர் தந்தை பெரியார்.
பார்ப்பனீயத்திற்குப் போடும் தீனி!
தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் மோதிக் கொள்வது – பார்ப்பனீயத்துக்குப் போடப்பட்ட சரியான தீனியாகும்.
ஹிந்து சமூக அமைப்பில் உள்ள பிறப்பின் அடிப்படையிலான, ஏணிப் படிக்கட்டு முறையான நிலையை – Graded In Equality என்று சரியாகப் படம் பிடித்துச் சொன்னவர் அண்ணல் அம்பேத்கர்.
சுதந்திரம் அடைந்து பவள விழா கொண்டாடப் பட்டுள்ள நிலையிலும், ஜாதி சட்ட ரீதியாகப் பாது காக்கப்படுகிறது.
ஜாதி ஒழிப்புக்காக சட்டத்தைக் கொளுத்திய இயக்கம் திராவிடர் கழகம்!
அதன் காரணமாகத்தான் தந்தை பெரியார் கட் டளைப்படி ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப் புச் சட்டப் பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தை நடத்தினார் தந்தை பெரியார் (26.11.1957).
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திராவிடர் கழகக் கருஞ்சட்டைத் தொண்டர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை ஏகினர். 3 ஆண்டுகள் தண்டனை என்று இந்தப் போராட்டத்துக்காகவே தமிழ்நாடு சட்டப்பேர வையில் தனி சட்டமே கொண்டுவரப்பட்டது.
தீண்டாமை என்பது நிழல் –
ஜாதி என்பதே நிஜம்!
வெறும் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது (அரசமைப்புச் சட்டம் 17 ஆம் பிரிவு) என்பது நிஜத்தை விட்டுவிட்டு நிழலோடு சண்டை போடுவதாகும்.
மூல பலம் – மூல வேர் என்பது ஜாதி அமைப்பே! அதனை சட்ட ரீதியாக ஒழிக்க முன்வரவேண்டாமா?
‘‘சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா?” என்ற தந்தை பெரியாரின் கேள்விக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக விடை கிடைக்காதது கெட்ட வாய்ப்பாகும்.
ஜாதி ஒழிப்புப் போரில் ஒன்றுபடுவோம்!
அரசியல் எப்படியோ இருக்கட்டும்; இந்த அடிப்படையான மானுட உரிமைப் போராட்டத்தில் கைகோத்து நின்று மனிதனை மனிதனாகப் பார்க்கும் மனித உரிமைப் போராட்டத்தில் ஈடுபட முன்வரவேண்டும் என்று அழைக்கிறோம்.
ஜாதியை முன்வைத்து வன்முறையை ஏவுவோர்மீது உடனடி நடவடிக்கை தேவை! தேவை!!
இதை நோக்கி நாம் பயணிக்கும் முன்பு, தீவட்டிப்பட்டி நிகழ்வுகளுக்குக் காரணமாணவர்களைக் காலம் தாழ்த் தாது, குற்றவாளிகள் எந்தப் பின்னணியில் இருந்தாலும் உரிய தண்டனைக்கு உட்படுத்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசை – காவல்துறையை வலியுறுத்து
கிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
8-5-2024