சிகாகோ, மே 7- இரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக இன்று (7.5.2024) விண்ணை நோக்கி தனது புதிய பயணத்தை தொடங்க இருந்த நிலையில் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் உடனடியாக பயணம் நிறுத்தப்பட்டது.
இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்க கப்பல் படை விமானியான இவர் கடந்த 2006ஆம் ஆண்டில் நாசா மூலம் முதல்முறை தனது விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார்.
அதனை அடுத்து 2012ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக விண்ணைத் தொட்டார். இதுவரை 322 நாட்களை அவர் விண்ணில் கழித்திருக்கிறார். அது மட்டுமின்றி, விண்ணில் நெடுநேரம் நடைபயின்ற முதல் பெண் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். ஏழு முறை விண்வெளியில் நடைபயின்ற சுனிதா மொத்தம் 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் நடந்திருக்கிறார். சுனிதா வில்லியம்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறிய தாவது:
புதிய விண்கலத்தில் பயணம் மேற்கொண்டு அதனை சோதனைசெய்து தர சான்றிதழ் அளிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த பயணம் சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும்’’ என்றார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மய்யத்திலிருந்து இந்திய நேரப்படி இன்று (மே 7) காலை 8.04 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ் புறப்படுவதாகக் கூறப்பட்டது.
பயணம் ரத்து
கடைசியாக வந்த செய்தியின்படி, தொழில் நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் உடனடியாக பயணம் நிறுத்தப்பட்டது, இதனை அடுத்து வின்கலத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் பயணத் திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.