வி.சி.வில்வம்
“குருக்கத்தி” நோக்கி நம் பயணம் இருந்தது! குருக்கத்தி என்றால் என்ன? என்று கேட்போருக்கு, பெயரே கேள்விப் படாத ஊரில் எல்லாம் நம் தோழர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்!
தோழர்கள் நிறைந்த தமிழ்நாடு!
இன்னும் சொன்னால் குருக்கத்தி கிராமம் முழுக்கவே நம் தோழர்கள் இருந்திருக்கிறார்கள்! அந்தக் காலத்தில் அவ்வளவு பேர் இருந்தார்கள், இவ்வளவு பேர் இருந்தார்கள் என்பதை எல்லாம் பல ஊர்களிலும் நாம் சொல்லக் கேட்டிருப்போம்!
ஏராளமான அரசியல் கட்சிகள் வந்த பின்னர் அங்கு சிலர் சென்றனர். உயர்கல்வி முடித்து வெளியூர் மற்றும் வெளி நாடுகளுக்குப் பலர் பணிக்குச் சென்றனர். ஆக ஒரே இடத்தில் வசித்தவர்கள் உலகம் முழுவதும் பரவிப் போனார்கள்! காரணம் கல்வி வளர்ச்சி!
இயக்கம் தடம் பதிக்காத இடமில்லை!
கொள்கைகளில் கூடுதல், குறைவு இருந்தாலும் பகுத்தறிவுச் சிந்தனையும், சுயமரியாதை உணர்வும் நிறைந்த மண் தமிழ்நாடு! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒரு கருத்தை அடிக்கடி வலியுறுத்துவார்கள்! பெரியாரைப் பின்பற்றுவோர் கருப்புச் சட்டை மட்டும் இருக்க மாட்டார்கள்; கலர் சட்டையிலும் இருப்பார்கள்!
அப்படி தோழர்கள் நிறைந்திருந்த குருக்கத்தி கிராமத்திற்குச் செல்கிறோம்! முதலில் திருவாரூர், பிறகு கீழ்வேளூர், பின்னர் கூத்தூர், இறுதியிலே குருக்கத்தி. அதாவது நகரம், சிற்றூர், கிராமம், குக் கிராமம். பெரியார் கொள்கைகள் கால் தடம் பதிக்காத இடமில்லை என்பதற்கு இது ஓர் சான்று!
வரவேற்ற பெரியார்!
அப்படியான குக்கிராமத்தின் குறுகிய சாலை ஒன்றில் நுழைகிறோம்! பெரியார் தான் அங்கேயும் வரவேற்கிறார்!
அங்கு தான் 50 ஆண்டு காலமாக இயங்கி வரும “குருக்கத்தி கமலம்” அவர் களும் வசித்து வருகிறார்! இப்போது அவருக்கு 60 வயதாகிறது! பெற்றோர் கிருஷ்ணமூர்த்தி, துளசி அம்மாள்.
திருமணத்திற்கு முன்பே புத்தகரம் ஜெயராமன் அவர்கள் மூலம் கொள்கை அறிமுகம் இருந்தது. ஆனால் பின்பற்றும் நிலைக்கு வரவில்லை. இந்நிலையில் 1971 ஆம் ஆண்டு நடராஜன் அவர்களை இணையராக ஏற்ற பின்னரே, கொள்கையும் கூட வந்துள்ளது!
தாத்தா, அப்பா, மகன் – பெரியாரிஸ்ட்!
இதில் சிறப்பு என்னவென்றால் இணை யர் நடராஜன் அவர்கள் பெரியாரிஸ்ட்! அவரின் தந்தையார் சொக்கலிங்கம் அவர்களும் பெரியாரிஸ்ட்! தாத்தா மாரிமுத்து அவர்களும் பெரியாரிஸ்ட். அவ்வகையில் அவ்வீட்டிற்கு வந்த அஞ்சம்மாள், குஞ்சம்மாள், கமலம் மூன்று மருமகள்களுமே பெரியார் இயக்கத்தில் உழைத்தவர்கள்!
எனினும் கமலம் அவர்களின் சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்தது. ஆம்! கமலம் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தது. அதில் இருவர் பிறந்ததும் இறந்துவிட, ஒரு குழந்தை ஒன்பது வயதில் இறந்துள்ளது! எனினும் சுயமரியாதை வாழ்வை அவர் விடவில்லை! நடராஜன் – கமலம் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இயக்கப் பணிகளைச் செய்துள்ளனர்! தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக கமலம் அவர்கள் ஒரே இயக்கம், ஒரே தத்துவம், ஒரே கொடி, ஒரே தலைவர் எனத் தனது சாதனை வாழ்க்கையைத் தொடர்ந்து வருகிறார்!
இயக்கமே வாழ்வும்! சிறையும்!!
திருமணம் முடித்த மறு ஆண்டிலேயே வட்டார மகளிர் தலைவர் பொறுப்பை ஏற்று, 3 ஆண்டுகள் சிறப்பாகச் செயல் பட்டார்! அதனைத் தொடர்ந்து கீழ் வேளூர் ஒன்றிய மகளிரணி தலைவராக 2 ஆண்டுகள் பணி. குறிப்பாக நாகை மாவட்ட மகளிரணி செயலாளராக 5 ஆண் டுகள் பணியாற்றியவர்!
பொதுக் கூட்டங்கள், மறியல்கள், காவிரி நீர் போராட்டங்கள் என எந்த ஒன்றிலும் முன்னிலையில் இருந்தவர் கமலம் அவர்கள்! நாகை மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமமும் இவருக்கு அத்துப்படி! காலை 9 மணிக்கு இயக்க வேலையாய் சென்றால், இரவு 9 மணி என்பதெல்லாம் சர்வ சாதா ரணம்! ஏராளமான போராட்டங்களில் பங்கேற்றுச் சிறைக்கும் சென்றுள்ளார்!
மதுரை சிறையில் 15 நாள்கள், கடலூர் சிறையில் 10 நாள்கள், வேலூர் சிறையில் 6 நாள்கள், பாளையங்கோட்டை சிறையில் 5 நாள்கள் என இவரின் சிறை வரலாறு பெரியது. தவிர காலையில் கைதாகி மாலையில் விடுவிக்கும் பல போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்!
தெருமுனைக் கூட்டங்கள் தொடங்கி மாநாடுகள் வரையிலும் இவர் பேசியிருக்கிறார்!
இரவு இரண்டு மணிக்குப் பேசிய ஆசிரியர்!
இவரின் இணையர் நடராஜன் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இறந்து போகிறார். இரவு வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கூடிவிட்டனர். இறுதி நிகழ்வு எப்படி நடத்துவது எனப் பேச்சு வருகிற போது சடங்குகள் ஏது மின்றி, இயக்க வழியிலே அடக்கம் செய்ய வேண்டும் என்றும், அதுவே இணை யருக்கு நான் செய்யும் மரியாதை என்றும் உறுதியாகச் சாதித்துக் காட்டியவர் கமலம் அவர்கள்!
நடராஜன் அவர்கள் மறைவை அறிந்த ஆசிரியர், நள்ளிரவு 2 மணிக்குத் தொலைப்பேசி செய்து கமலம் அவர்களுடன் பேசி இருக்கிறார். அது மட்டுமின்றி காலை 6 மணிக்கு மீண்டும் ஒருமுறை பேசி ஏற்பாடுகள் குறித்துக் கேட்டறிந்துள்ளார். உறவினர்கள், நண்பர்கள் கூடியிருந்த அந்த நள்ளிரவு வேளையில் ஆசிரியர் பேசி ஆறுதல் கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல காலையில் பேசியதும் அனைவரின் பேசு பொருள் ஆகியிருக்கிறது. என் வாழ்நாளில் இந்த ஆறுதலை, இந்த அன்பை எப்படி மறப் பேன் என்று கேட்கிறார் கமலம்!
இறுதி நிகழ்வில்
பேபி, சரசு, மகேஸ்வரி, சைனம்பூ ஆகிய பெண் தோழர்களே இணையரைத் தூக்கிச் சென்றனர் என்பதையும் நினைவு கூர்கிறார்
கொள்கைத் தடயங்கள்!
குக்கிராமம் என்று சொன்னாலும், கொள்கைத் தடயங்கள் நிறைய காட்சி தருகின்றன! குக்கத்தி கிராமத்தில் ஏராள மான சுயமரியாதைத் திருமணங்கள் நடை பெற்றுள்ளன! அதேபோல ஊருக்குள் நுழைகிற போதே கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார் பெரியார். அந்தப் பெரியார் சிலையைக் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் திறந்து வைத்துள்ளார். மட்டுமின்றி அந்தப் பகுதியின் பெயரே பெரியார் நகர் என்று சூட்டப்பட்டுள்ளது! இப்படியான பல பெருமைகளைப் பெற்ற குக்கத்தி கிரா மத்தின் அடையாளமாகக் கமலம் அவர்கள் திகழ்கிறார். இயக்கத்தின் பொதுக்குழு உறுப்பினராகத் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கிறார்!
எங்கள் வாழ்நாள் நம்பிக்கை!
“எந்த நிகழ்ச்சியில் சந்தித்தாலும், ஆசிரியர் அவர்கள் நலம் விசாரிக்கும் தன்மையே தனிரகம் தான்! அதுவும் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு ஆசிரியர் காட்டும் அன்பு, எங்களின் வாழ்நாள் நம்பிக்கை”, என்கிறார் கமலம்!
எத்தனையோ முறை எங்கள் பகுதிக்கு ஆசிரியர் வந்திருக்கிறார். தம் உடல் நிலையைக் கூட பொருட்படுத்தாமல், உலகம் முழுவதும் வலம் வருகிறார்! மேடையில் அமர்ந்திருக்கும் போது, இரண்டு கைகளையும் கண்களுக்கு மேல் வைத்துக் கொண்டு யார், யார் இருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாகக் கவனிப்பவர் எங்கள் ஆசிரியர்! அவரின் கண் அசைவில் தான் இயக்கத் தோழர்கள் செயல்பட்டு வருகிறோம்”, என முத்தாய்ப்பாய் கூறுகிறார் கமலம் அவர்கள்!