நினைவு நாள் சிந்தனை (5-5-1914) இருளும் மருளும் நீக்கிய அருளாளர் – அயோத்திதாசர்

Viduthalai
6 Min Read

பேராசிரியர் கு.வெ.கி.ஆசான்

ஞாயிறு மலர்

உழைப்பாலும் அறிவாலும் பண்பாலும் பொதுப் பணியாலும் உயர்ந்த மக்களின் சிந்தனைகள் மக்களிடையே உலாவரும்வரை மக்கள் உயர்நிலை நோக்கிப் பயணிக்கவே செய்வார்கள். வள்ளுவரும் – புத்தரும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உழைப்பு, பகுத்தறிவு, சமனியம், மனித நேயம், மான வாழ்வு முதலிய விழுமிய பண்புகளை அருமையான சொற்களில் வடித்துக் கொடுத்தார்கள். ஆனால், அவர்களுடைய அறவுரைகள் இந்நாட்டுப் பாமர மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டன. அதற்கு மாறாக அவர்கள் பரப்பிய நெறிகளுக்கு முரண்பட்ட வகையில் ஜாதி ஏற்றத் தாழ்வு, தலைவிதித் தத்துவம், உழைப்பது இழிவு, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி, ‘அவன்’ அன்றி ஓர் அணுவும் அசையாது, மந்திரம்-மாயம், சடங்கு – சம்பிரதாயம், பிராயச் சித்தம், சோதிடம், தோஷம் என்ற முறையில் பலப்பல எண்ணங்களைத் தூவி, மன ஊக்கத் தையும், உழைப்பையும், உயர்வையும் கெடுக்கக்கூடிய கற்பனையான கட்டுக்கள் பலவற்றை ஏற்படுத்தி, சமுதாயத்தின் பெரும்பான்மையரை ‘அடித்தளத்திற்குத் தள்ளி அழுத்தி விட்டனர். இந்நிலையை உண்டாக்கிய, தங்களை ஆரியர் வழியினர் எனப் பெருமை கொண்டாடிய, பார்ப்பனிய மேல் ஜாதியாரின் வேத – புராண – இதிகாசக் கருத்துகள் தான் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தன. புத்தரும், வள்ளுவரும், மகாவீரரும் வாழ்ந்த வரலாறே பாமரருக்குத் தெரியாது. ஆகையால் அந்தப் பெரியோர்களை வழிகாட்டிகளாகக் கொள்ள இந்திய மக்களுக்கு 19 ஆம் நூற்றாண்டு வரை வாய்ப்பே இல்லாமல் போயிற்று.

தற்காலத்திலும்…
புத்தரும் வள்ளுவரும், பல நூற்றாண்டுக் காலம், 19ஆம் நூற்றாண்டு வரை, இந்நாட்டு மக்களுக்கு வழி காட்டிகளாக இல்லாமல் போயினரே என இப்பொழுது நாம் மனம் நொந்து ஏன் சுட்டிக் காட்டுகிறோம்? அந்நிலை தற்காலத்தில் வாழ்ந்த உண்மையான பெரியோர்கள் சிலருக்கு ஏற்பட்டதைக் கண்டுதான் அவ்வாறு சுட்டிக் காட்டுகிறோம். 19ஆம் நூற்றாண்டில், மராத்தியத்தின் மிகப் பெரிய சமூகப் புரட்சியாளராகத் திகழ்ந்த மகாத்மா ஜோதிபா ஃபுலே (1827-1890), அவருடைய மறைவுக்குப் பின்பு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக் காலம் இருட்டடிப்புச் செய்யப்பட்டார். இப் பொழுதுகூட அவருடைய பணிகள் மற்றும் கருத்துக்களின் சிறப்பை இந்தியாவில் உள்ளவர்கள் மிகச் சிறிய அளவில் அறிந்திருக்கிறார்கள். அதைப் போன்றே இராமலிங்க வள்ளலாரின் சமய – சமுதாயப் பணியின் புரட்சித் தன்மை அறிந்தவர் சிலரே. அயோத்திதாச பண்டிதரும் (1845-1914) அவருக்குப் பின்பு சுமார் முக்கால் நூற்றாண்டு அறியப்படாதவராகவே இருந்துவிட்டார்!

சிறந்த நூல்களின் இழப்பு
அயோத்திதாசரின் உயர்ந்த சிந்தனைகளை, புரட்சிகரமான புதிய எண்ணங்களை, அறியாதவரை இந்நாட்டு மக்களுக்கு, குறிப்பாகப் பாமரப் பாட்டாளிகளுக்குப் பெரிய இழப்பாகும். பொருள் இழப்பு ஒரு பெரிய இழப்பு அன்று; ஆனால் மன எழுச்சி தரும் கருத்துகளின் இழப்பு, பேரிழப்பு ஆகும். தமிழருக்கும் பெருமை தருவனவாகவும், அவர்களுடைய உள்ளத்திற்கு ஊட்ட உணவாகவும் பல பழைய படைப்புகள் இருந்தன. மதப் பண்டிகைகளுக்கான சடங்கு எனும் பெயரிலும், மூட நம்பிக்கையாலும் அவற்றை ஆற்று நீரிலும் நெருப்பிலும் தமிழர்களே போட்டு இழந்தனர். அத்தகைய கண் மூடி நடப்புகளை வைதீகர்கள் ஊக்குவித்தனர். தமிழர்களைத் தாழ்த்துவதற்கு அவர்கள் கையாண்ட தந்திரங்களில் அதுவும் ஒன்று!

மீண்டும் உலா வந்துவிட்டார்
ஆனால், மறைக்கப்பட்ட அல்லது தமிழர்களின் அக்கறை இல்லாமையால் அறியப்படாமல் இருந்த அயோத்திதாசரின் எழுத்துகள் மீண்டும் இப்பொழுது படிக்கக் கிடைக்கின்றன. புதைந்து போன கருவூலம் கிடைக்கப் பெற்றதாக உணர்கிறோம். மக்களைத் தாழ்த்தி, அவர்களைப் பிளவுபடுத்தி, பூசல்களிலும், பிணக்குகளிலும், மோதல்களிலும் அவர் களுடைய காலத்தையும், முயற்சியையும், சிந்தனையையும், பொருளையும், உணர்வுகளையும் வீணாக்கிய ஜாதி, மத அமைப்புகளைத் துணிவாக விமர்சிப்பது, என்றைக்குப் படித்தாலும் விழிப்புணர்ச்சியை ஊட்டு வனவாகும்.
சென்னையில் 1887இல் இந்திய தேசியக் காங்கிரசின் மூன்றாவது மாநாடு நடந்த பொழுது, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும், பிறரைப் போன்று, இந்துக் கோயில்களுக்குச் செல்லுவதற்கு அனுமதி வேண்டும் எனத் தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால், பார்ப்பனிய மேல்ஜாதியார் அதை ஏற்க மறுத்தனர். அதற்குப் பின்பு, அயோத்திதாசர் இந்துமத நடப்புகளையும், “புனித” நூல்களையும், சமநெறியின் அடிப்படையில் பகுத்தறிந்து திறனாய்வு செய்தார். சமுதாய ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் இந்து மதம் உதவாது என அறிந்தார்; பவுத்த மதத்தைத் தழுவினார் (1896). அதற்கு 60 ஆண்டுகளுக்குப் பின்பு அண்ணல் அம்பேத்கர் லட்சக்கணக்கானோருடன் பவுத்த மதத்தில் சேர்ந்தபொழுது, தந்தை பெரியார் அதை ஊக்குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொன்மைக் காலத்தில் திராவிடர் இடையில் ஜாதி இல்லை என்பது அயோத்திதாசரின் முடிவு. ஒரு காலத்தில் பெருமைக்குரிய தமிழ்க் குடிகளான பறையர், பவுத்த நெறியினராக இருந்தனர்; ஆனால், பார்ப்பன மேலாதிக்க இந்து மதக் கொடுமையால் இழிநிலைக்குத் தள்ளப்பட்டனர் என்று அவர் உறுதியாகச் சொன்னார்.

ஜாதி, மதம் ஒழிந்த மனித நேயம்
நாட்டின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத் திற்கும் செய்ய வேண்டுவன எவை என்பதை உருவக நடையில் 1907 ஜூன் 26ஆம் நாளிட்ட ‘தமிழன்’ இதழில் அயோத்திதாசர் இவ்வாறு எழுதுகிறார்:
“எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம்” – என்னும் பழமொழிக்கு இணங்க, சுதேசிகளாகிய நாம், நமது சுதேசத்தை எவ்வகையில் சிறப்படையச் செய்யலாம் என்னில், சீர்திருத்தம் என்னும் பூமியை ஒற்றுமை என்னும் கலப்பையால் உழுது, ஜாதிகள் என்னும் கல்லு கரடுகளையும், சமயம் என்னும் களைகளையும் பிடுங்கிச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டு, சகோதர அய்க்கியம் என்னும் நீரைப் பாய்ச்சி, ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கை என்னும் வரப்பை உயர்த்தி, ஊக்கம் விடாமுயற்சி என்னும் எருவிட்டு, சருவ ஜாதி சமரசம் என்னும் பரம் படித்து, இங்கிலீஷ் கல்வி, ஜப்பான் கைத் தொழில், அமெரிக்கன் அபிவிருத்தி பாவனை என்னும் விதைகளை ஊன்றி, அவன் சின்ன ஜாதி இவன் பெரிய ஜாதி எனக் குரோதம் ஊட்டும் சத்துருக்களாகிய பட்சிகள் நாடா வண்ணம், சகலரும் சுகம் அடைய வேண்டும் என்னும் கருணை என்போனைக் காவல் வைத்து, கல்வி, கைத்தொழில், யூகம் என்னும் கதிர்களை ஓங்கச் செய்யின், அதன் பலனால் நாமும் நமது குடும்பமும் நமது கிராம வாசிகளும் நமது தேசத்தாரும் சீர் பெறுவதுடன் தேசமும் சிறப்படையும்.”

மக்கள் முன்னேறி நலம் அடைய வேண்டும் எனில், ஜாதியும், மதமும் ஒழிய வேண்டும், சீர்திருத்தம், சமுதாய ஒற்றுமை, சமநிலை, மனித நேயம் ஆகியவை நடப்பிற்கு வரவேண்டும். கல்வி, தொழில், அறிவு வளர்ச்சி முதலியவை ஓங்க வேண்டும் என்ற வகையில் தந்தை பெரியாரைப் போன்றே அயோத்திதாசர் வலியுறுத்தியிருக்கிறார்.

மொழி வழித் தேசியம்
“நமது தேசத்தின் சீர்கோட்டிற்கும் சுகக்கேட்டிற்கும், ஒற்றுமைக் கேட்டிற்கும் இப் பொய்யாகிய ஜாதிக் கட்டுகளும் சமயக் கட்டுகளுமே மூலம் என்று உணர்ந்தும், அவைகளை மேலும் மேலும் பரவச் செய்தால் நமது தேசச் சிறப்பும் தேச சுகமும் நாளுக்கு நாள் தாழ்ந்து போம் என்பது திண்ணம். ஆதலின் நமது தேசத்தாரைச் சீர்திருத்த வெளி வந்துள்ள பத்திரிகை அபிமானிகள் ஒவ்வொருவரும் பூர்வ வழக்கம் போல், தமிழ் பாஷைக்கு உரியோர்கள் யாவரையும் தமிழ்சாதி என்றும், கன்னட. பாஷைக்கு உரியோர்கள் யாவரையும் கன்னட சாதி என்றும், மராஷ்டக பாஷைக்கு உரியோர் யாவரையும் தெலுகு சாதி என்னும் பத்திரிகைகளில் வரைந்து கொண்டு வருவதுடன் வார்த்தை களிலும் நிஹி சிக் கொண்டு வருவோமாயின், ஜாதிப் பிரிவினைகள் நாளுக்கு நாள் மறந்து பாஷைப் பிரிவினைகள் பெருகிக் கொண்டே வரும்.

“அத்தகைய பாஷைப் பிரிவினை களின் (மொழி இன உணர்வின்) பெருக்கத்தால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்னும் பொறாமைகள் அகன்று, தமிழ்ப் பாஷைக்காரர்கள் யாவருமேனும் ஒன்றுகூடி கல்வி விருத்தியிலும், கைத் தொழில் விருத்தியிலும் ஒற்றுமை அடைந்து தேசத்தை சீர்திருத்தாவிடினும் தாங்களேனும்.சீரடைவார்கள்.’
இவ்வாறு மத மறுப்பையும், ஜாதி ஒழிப்பையும், சமுதாய ஒற்றுமையையும், மொழி வழித் தேசிய இனவுணர்வையும் வலியுறுத்திய தொலை நோக்காளராக அயோத்திதாசர் திகழ்ந்தார். திலகரும் அரவிந்தரும் வலியுறுத்திய இந்துமத ஸநாதன தருமமும், பாரதமாதா வழிபாடும் தமிழ்நாட்டில் பரப்பப்பட்ட நேரத்தில், அதற்கு மாறாக மக்களின் நிலையான நலன் தரும் வழியைப் பெரியாரைப் போன்றே அவர் வலியுறுத்தியது எவ்வாறு எனின், ஒடுக்கப்பட்டோர் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற அருள் நோக்கே அதற்கு அடிப்படை என அறிக!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *