நாகம்மையாரின் வெள்ளி விரதம்

Viduthalai
1 Min Read

நாகம்மையார் வெள்ளிக்கிழமை தோறும் நோன்பிருந்து வந்தார். இது மாமியார் இட்ட பணி – பிள்ளை இல்லை என்பதற்காகவே இந்நோன்பு. என்றைக்கு விரத நாளோ, அன்று தான் தவறாமல் இராமசாமியார்க்குப் புலால் உணவு சமைக்க வேண்டும். நாகம்மாள்தான் பரிமாற வேண்டும். இது இராமசாமியாரின் பிடிவாதம்.
நாகம்மையாரும் கணவர் விரும்பும் உணவைச் சமைப்பார். பரிமாறுவார். உடனே நீராடச் சென்று விடுவார். இச்சமயத்தில் இராமசாமி சமையலறைக்குள் நுழைவார்.

அம்மையார் சாப்பிடுவதற்காக தனியாக மூடி வைத்திருக்கும் விரதச் சோற்றைத் திறப்பார். அதற்குள் எலும்புத் துண்டைப் புதைத்து விட்டுப் போய் விடுவார். அம்மையார் சாப்பிடப் புகும்போது சோற்றுக்குள்ளிருந்து எலும்புத் துண்டு தலை நீட்டும். இது இராமசாமியின் குறும்பென்பதை அவர் உணர்ந்து கொள்வார்; இவ்வளவுதான், நோன்பும் முடிந்துவிடும்.
இக்குறும்புத்தனம் ஈ.வெ.ரா.வின் பெற்றோர்களுக்குத் தெரிந்தது.

அவர்களும் கண்டித்தனர். ஆயினும் நிற்கவில்லை. இறுதியில் மருமகளை அழைத்து, “இந்தப் புருஷனைக் கட்டிக்கொண்டு நீ விரதமிருந்து வாழ்ந்தது போதும்; நிறுத்தி விடு!” என்று சொல்லி விட்டனர். இவ்வளவோடு நாகம்மையாரின் வெள்ளிக்கிழமை விரதம் ஒழிந்தது; மற்ற விரதங்களும் நாளடைவில் பறந்தன.
– ‘தமிழர் தலைவர்’ என்ற நூலில் இருந்து
சாமி சிதம்பரனார்.
– ‘உண்மை’ (14.5.1973)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *