வல்லம், ஏப்.30. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்தும் பழகு முகாம் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றன.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பலகலைக் கழக வளாகத்தில் ஏப்ரல் 28 முதல் மே 2 வரையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற குழந்தைகளுக்கான பழகு முகாம் நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில், சுயமரியாதைச் சுடரொளி புலவர் இமயவரம்பன் தோட்டத்தில் அமைந்துள்ள சொர்ணா ரங்கநாதன் விடுதியிலிருந்து 29.04.2024 அன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, தஞ்சை கண்ணன் நகர் பகுதியில் உள்ள நுண் உரம் செயலாக்க மய்யம், ஸ்டெம் பூங்கா ஆகிய பகுதிகளுக்கு அறிவியல் சுற்றுலாவாக பிஞ்சுகள் அழைத்துச் செல்லப் பட்டனர். ஒருங்கிணைப்பாளர்கள் சிவ.வீரமணி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், முதுநிலை துணைப் பேராசிரியர் அனுசுயா, கட்டிடக் கலைத்துறை துணைப் பேராசிரியர் சித்ரா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
எந்த பொருளும் வீணாவதில்லை
வெளியில் அழைத்துச் செல்லப்படுவதை முன்னிட்டு வழமை போல் அவர்களுக்குப் பெரியார் பிஞ்சுகளுக்கான தனித்த சீருடை, தோள் பை, குறிப்பேடு, எழுதுகோல், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டிருந்தது. கண்ணகி நகர் நுண் உரம் செயலாக்க மய்யத்தின் சுகாதார அலுவலர் தங்கவேல் பிஞ்சுகள் அனைவரையும் வரவேற்று, பிஞ்சுகளுக்கு அந்த மய்யத்தின் செயல்பாடுகளைப் பற்றி விளக்கினார். ’எந்தப் பொருளும் வீணாவதில்லை. மக்கும் குப்பைகள் மறுசுழற்சி முறையில் பதப்படுத்தப்பட்டு சிமெண்ட் கம்பெனிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. மக்காத எரியும் தன்மையுள்ள குப்பைகள் மாற்று எரிபொருளாக டன் கணக்கில் அல்ட்ராடெக் சிமெண்ட் கம்பெனிக்கு அனுப்பப்படுகின்றன’ என்று நுண் உரம் செயலாக்க மய்யத்தின் பணிகளின் சாரத்தைப் பிஞ்சுகளுக்கு விளக்கியதோடு நேரடியாக அப்பணிகள் நடைபெறும் இடங்களையும் சுற்றிக் காண்பித்தார். நகர சுகாதார அலுவலர் சுரேஷ் காந்தி வருகை தந்து சிறப்பித்தார். சுகாதார மேற்பார்வையாளர் ராஜா மய்ய சுகாதார அலுவலர் தங்கவேல் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். இம்மய்யம் 42 ஆம் வார்டு முதல் 49 ஆம் வார்டு வரையிலான குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணிகளை மேற்கொள்கிறது. அரசு நிறுவனமான இம்மய்யம் தன்னை, “எங்கள் பணி தங்களுக்கே” என்று அறிவிப்பு பலகை மூலம் வெளிப்படுத்துகிறது.
உலகத் தமிழ் நாள்
அதைத் தொடர்ந்து நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் கூடுதலாக எவை எவை மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று பிஞ்சுகளிடம் கேள்விகள் கேட்டு பதில்களை பெற்றுக் கொண்டிருந்தார். பிஞ்சுகளின் 5 குழுக்களுக்கு எண்கள் மூலம் வைக்கப்பட்டிருந்த பெயரோடு, உலகத் தமிழ் நாளை முன்னிட்டு தமிழர்களின் திணைப்பெயர்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பெயர் சூட்டப்பட்டது. குறிஞ்சிக் குழுவுக்கு பயிற்சி ஆசிரியர்கள் பவதாரணி, பிரியதர்சினி, முல்லை குழுவுக்கு கவுசிகா, பிரசன்ன பாரதி, மருதம் குழுவுக்கு வித்யா, நெய்தல் குழுவுக்கு வைஷ்ணவி, பாலை குழுவுக்கு நூருல், ஆசிபா ஆகியோர் பொறுப்பாளர்களாவர்.
அங்கிருந்து பழகு முகாம் வளாகம் திரும்புகையில் நாஞ்சிக்கோட்டை பகுதியில் உள்ள FOOD CORPORATION OF INDIA அமைப்பின் சார்பில் நிறுவப்பட்டுள்ள உணவு அருங்காட்சியகத்தில் ஒளிப்படக் காட்சிகள் மூலமும், நிழற் படங்கள் மூலமும் உணவின் வரலாறு குறித்து விரிவாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அவற்றைப் பிஞ்சுகள் நிதானமாகப் பார்வையிட்டனர். அங்கேயே அவர்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது.
எப்படி முதல் உதவி செய்வது?
மதிய உணவுக்குப் பிறகு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிலிருந்து சிறப்பு நிலை அலுவலர் பொய்யாமொழி, நிலைய அலுவலர் கணேசன், தீயணைப்பு வீரர் பிரவீண்குமார், ஓட்டுநர் குணசேகரன் ஆகியோர் பல்வேறு ஆபத்துக் காலங்களில் மீட்புப் பணிகளில் செய்ய வேண்டிய முதல் கட்ட, இரண்டாம் கட்ட பணிகள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களை எப்படியெப்படி கையாள்வது என்பது குறித்தும், தீயணைப்புக் கருவியை இயக்குவது எப்படி என்பது குறித்தும் நேரிடையான பயிற்சியை வழங் கினர். அதைத் தொடர்ந்து துளசி. துரைமாணிக்கம் பல்வேறு விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி முதல் உதவி செய்வது என்பது குறித்து செய்முறை பயிற்சி மூலம் மாணவர்களை நேரிடையாக ஈடுபட வைத்து பிஞ்சுகளுக்கு கற்றுக்கொடுத்தார்.
அறிவியல் விளக்கங்களும்…
ஒரே நாளில் இரண்டாம் முறையாக வளாகத்தை விட்டு வெளியில் சென்று கற்றுக்கொள்ளக்கூடிய அறிவியலுடன் கூடிய ஒரு பொழுதுபோக்கு வகுப்பாக இது அமைக்கப்பட்டிருந்தது. தஞ்சை பரிசுத்தம் நகரில் உள்ள ஸ்டெம் அறிவியல் பூங்காவிற்குப் பிஞ்சுகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே டிஜிட்டல் கோளரங்கத்தில் விண்வெளி, விண்மீன்கள், பிரபஞ்சம் பற்றிய படக்காட்சி பிஞ்சுகளை மிகவும் கவர்ந்தது. அதே வளாகத்தில் பல்வேறு விளையாட்டுகளும், அதற்கான அறிவியல் விளக்கங்களும் வைக்கப்பட்டிருந்தன. பிஞ்சுகள் அனைத்தையும் பயன்படுத்தி, ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் தங்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்திக் கொண்டனர்.
தமிழுக்கும் அமுதென்று பேர்
மாலை சிற்றுண்டிக்குப் பிறகு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள், உலகத் தமிழ் நாள் ஆகியவற்றை முன்னிட்டு இந்த இரண்டையும் நினைவுகூரும் விதமாக, 76 பெரியார் பிஞ்சுகளைப் பயன்படுத்தி, மாபெரும் ‘தமிழ்’ எழுத்து வடிவில் நிற்கவைப்பட்டு, புரட்சிக்கவிஞரின் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்” பாடலைக் கற்றுக் கொடுத்து பாடச் சொல்லப்பட்டது. இது நேரலையாக பெரியார் பிஞ்சு யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் சமூகப்பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஞானராஜ் பிஞ்சுகளுக்கு அவர்களுடைய உரிமைகள் என்னென்ன என்பது பற்றியும், சரியான தொடுதல், தவறான தொடுதல் என்பது என்ன என்றும், குழந்தைகள் என்பதற்கான வரையறை எது என்பது பற்றியும், தவறான தொடுதல் என்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்று குழந்தைகள் புரிந்து கொள்ளும்படியும், எளிமையாகவும் விளக்கினார். தொடர்ந்து அதுபற்றிய காணொலிக் காட்சியும் பிஞ்சுகளுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. இந்நிகழ்வில் முகாமின் ஒருங்கிணைப்பு ஆலோசகரான பெரியார் நூற்றாண்டு பல்தொழில்நுட்பக் கல்லூரியின் மேனாள் முதல்வர் பேராசிரியர் பர்வீன் கலந்து கொண்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார். வழக்கம் போல, சிவ.வீரமணி அவர்கள் பிஞ்சுகள் உணவு உண்பதை சிரத்தையோடு பிஞ்சுகள் தங்கும் இடத்திற்கு அனைவரும் வந்து விட்டார்களா என்பது வரை கண்காணித்து சிறப்பித்தார்.
உற்சாகத்தை கட்டுப்படுத்துவது
தங்கும் அறைகளில் பிஞ்சுகள் அவரவர் பணிகளை அவர்களே செய்து கொண்டு, ஒருங்கிணைப்பாளர்களின் உதவியோடு பெற்றோரிடம் பேசி ஒரு நாளில் தான் பெற்ற அனுபவத்தை சொல்லி மகிழ்ந்தனர். பெற்றோர் கவலைப்பட்டது போல் இல்லாமல் பிஞ்சுகள் மிகவும் உற்சாகமாக பழகு முகாமை அனுபவித்துக் கொண்டிருந்தனர். காலையில் 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டுமே என்று தெரிந்தாலும் கூட, காலையிலிருந்து இரண்டு முறை சுற்றுலா சென்று திரும்பிய பிறகான அசதி இருந்தும் பெரும் பாலானவர்களின் அரட்டை ஓயவில்லை. அவர்களின் உற்சாகத்தை கட்டுப்படுத்துவது அவ்வளவு சுலபமாகவும் தெரியவில்லை. ஒருவழியாக இரவு 10 மணிக்கு மேல் அறை பாதுகாவலர் துணையோடு உறக்கத்தை தழுவினர். இப்படி இரண்டாம் நாள் காலை 5 மணிக்குத் தொடங்கி, இரவு 8:30 மணி வரையிலும் அடர்த்தியான வகுப்புகளோடு நிறை வடைந்தது.