தந்தை பெரியாரின் கருத்துரையை எடுத்துக்கூறி, படிப்பகத் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

Viduthalai
8 Min Read

படிப்பகங்களில் எல்லாக் கருத்துள்ளவர்களைக் கொண்டோரது அறிவு நூல்கள் – எல்லா கருத்துகளையும் கொண்ட பத்திரிகைகள் – எல்லா கருத்துகளையும் கொண்ட உலக செய்திகள் இருக்கும்!
சுருங்கச் சொன்னால், படிப்பகங்கள் ஒரு ‘‘சர்வகலா சாலை!’’
நாட்டில் அறிவு வளர்ந்ததற்குக் காரணமே, படிப்பகங்கள்தான்!

தஞ்சை, ஏப்.30 படிப்பகங்களில் எல்லாக் கருத்துள்ள வர்களைக் கொண்டோரது அறிவு நூல்கள் – எல்லா கருத்துகளையும் கொண்ட பத்திரிகைகள் – எல்லா கருத்துகளையும் கொண்ட உலக செய்திகள், அவரவருடைய கருத்துகள் தாராளமாக இருக்கும். அல்லது இருக்கவேண்டியது படிப்பகத்திற்கு மிக அவசியமாகும். சுருங்கச் சொன்னால், படிப்பகங்கள் ஒரு ‘‘சர்வகலா சாலை’’ என்றே கூறலாம் என்ற தந்தை பெரியாரின் கருத்துரையை எடுத்துக் கூறி விளக்க வுரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம் – தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி நூலகம் திறப்பு விழா
கடந்த 24.4.2024 அன்று மாலை 5 மணியளவில், தஞ்சாவூர், இராசாசி நகர், நீலகிரி ஊராட்சியில், குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகத் தைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

தந்தை பெரியாருக்குப் பிடித்த குறள்!
தந்தை பெரியார் அவர்களும், குன்றக்குடி அடிகளார் அவர்களும் சாத்தூருக்குக் காரில் சென்று கொண்டிருக்கும்பொழுது,
‘‘அய்யா, நீங்கள் திருக்குறளை விமர்சித்திருக்கிறீர்கள்; வள்ளுவரிடம் மாறுபட்ட கருத்துகளையும் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். 1330 குறள்களில், உங்களுக்கு மிகவும் பிடித்த குறள் எது?” என்று குன்றக்குடி அடிகளார் அவர்கள் கேட்டார்.
சிரித்துக்கொண்டே தந்தை பெரியார் அவர்கள், ‘‘ஒரு குறள்தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் அடிக்கடி பயன்படுத்துவேன்” என்று சொல்லிவிட்டு,
‘‘குடிசெய்வார்க்கில்லை பருவம் மடி செய்து
மானம் கருதக் கெடும்” என்றார்.

பொதுத் தொண்டாற்றக் கூடியவர்கள் நேரம், காலம்
பார்க்கக் கூடாது
பொதுத் தொண்டாற்றக் கூடியவர்கள் நேரம், காலம் பார்க்கக் கூடாது. நல்ல நேரம், கெட்ட நேரம், வாய்ப்பான நேரம் அல்லது இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும் என்றெல்லாம் பார்க்கக் கூடாது.
எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ, அப்பொழு தெல்லாம் இடையறாமல் தொண்டாற்றவேண்டும் என்பதுதான்.
வள்ளுவர் சொன்ன இன்னொன்றை, பெரியார் அவர்கள் பின்பற்றக்கூடியவர்.
பொதுத் தொண்டு செய்பவர்கள் மானம், அவ மானம் பார்க்கக் கூடாது. தனி வாழ்க்கையில் மானம் பார்க்கவேண்டும்; தன்மான உணர்ச்சி மிகவும் முக்கியம்.
ஆனால், பொதுவாழ்க்கையில் மானம் பார்ப்பதற்கு இடமே இல்லை.

தனிப்பட்ட முறையில் ஒருவரிடம் பணம் கேட்டால் அது நமக்குத் தாழ்மை!
அதனை விளக்குவதற்கு உதாரணம் சொல்லவேண்டு மானால், ‘‘நாம் வாழ்வதற்கு ஒரு ரூபாய் கொடுங்கள்” என்று ஒருவரிடம் கேட்டால், அது நமக்குத் தாழ்மை யாகும்.
அதுபோன்று நாம் யாரும் கேட்கமாட்டோம். அது பிச்சை, கேவலம் என்று கருதுவோம்.
ஆனால், நாங்கள் படிப்பகம் கட்டப் போகிறோம்; பள்ளிக்கூடம் கட்டப் போகிறோம்; மக்களுக்காக மருத் துவமனை கட்டப் போகிறோம் என்று சொல்லி பணம் கேட்டால், அது அவமானமல்ல.
‘‘அதெல்லாம் கிடையாது; போங்கள்” என்று ஒருவர் நம்மை எரிச்சலூட்டக் கூடிய அளவிற்குச் சொன்னாலும், அதை அவமானமாகக் கருதாமல், ‘‘ரொம்ப நன்றி” என்று சொல்லி கோபத்தைத் திருப்பிக் காட்டாமல், திரும்பி வருகிறோம் பாருங்கள், அதுதான் பண்பாடு!
ஆகவேதான், முழுக்க முழுக்க,
‘‘குடிசெய்வார்க்கில்லை பருவம் மடி செய்து
மானம் கருதக் கெடும்” என்பதாகும்.
அடுத்ததாக, படிப்பகங்கள் எப்படி பயன்படுகின்றன என்பதை நாம் சொல்வதைவிட, நேற்று ஒரு புத்தகத்தை நான் படித்தேன்.

படிப்பகங்கள் எதற்காக?
தந்தை பெரியாரின் விளக்கம்!
1960-களில், 64 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை மாவட்டம் சோழவந்தானில், பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசர் பெயரால் ஒரு படிப்பகத்தை, தந்தை பெரியார் அவர்கள் திறந்து வைக்கவேண்டும் என்று சொன்னார்கள். அதனை ஏற்பாடு செய்தவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர். அய்யா காங்கிரஸ் கட்சியில் இருந்தபொழுது, சிறைச்சாலைக்குப் போனவர். அய்யா வின் தொண்டராக இருந்தவர்; அவருடைய மகன் திருச் செங்கோ என்பவர்தான் படிப்பகத்தைத் திறப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர்.
அந்தப் படிப்பகத்தினைத் திறந்து வைத்து தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றும்பொழுது, ‘‘படிப்ப கங்கள் எதற்காக?” என்று சொன்னதை இங்கே உங் களுக்குச் சொல்கிறேன்.

நமது கருத்துக்கு, கொள்கைக்கு மாறுபட்டதாக ஆகிவிட முடியாது!
‘‘இம்மாதிரி படிப்பகங்களை ஒரு கருத்தினைக் கொண்டவர்கள் நடத்தினாலும், எல்லாவித கருத்துகள் கொண்ட பத்திரிகைகள், புத்தகங்கள் இடம்பெறலாம். இதனால், நமது கருத்துக்கு, கொள்கைக்கு மாறுபட்டதாக ஆகிவிட முடியாது. எல்லாக் கருத்துகளையும் படித்து, அவரவர் தங்களுக்கு உகந்ததை எடுத்துக் கொள்வார்கள். இம்மாதிரி படிப்பகங்களின் அன்றாடச் செய்திகள்மூல மாக முக்கியமானதை எடுத்துக்கொண்டு விவாதிக்கலாம்.
தோழர்களே, நம் நாட்டில் இப்பொழுதுதான் ஏராள மான படிப்பகங்கள் ஏற்படுகின்றன. அதற்குமுன், இவ் வளவு படிப்பகங்களைக் காண முடியாது. இப்பொழுது தான் ஏற்படுத்த முடியும். காரணம், இப்பொழுதுதான் நமது முதலமைச்சர் காமராசர் ஆட்சியின் பயனாக, மக்களுக்குப் படிக்கவேண்டும் என்கிற எண்ணம் உண்டாகியிருக்கின்றது.
படித்தவர்களுக்கும் அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளைக்காரன் நமது நாட்டை 200 ஆண்டுகளாக ஆண்டும், அந்தக் கல்வி அறிவில் மேம்பட்டவன், ஆட்சியை விட்டுப் போகும்போது, நூற்றுக்குக் குறை வான அளவில்தான் படித்தவர்கள் இருந்திருக்கின் றார்கள்” என்பதைச் சுட்டிக்காட்டிவிட்டு,
‘‘ஏன் இந்த நிகழ்ச்சிக்கு வந்தாய் என்று கேட்டால், தோழர்களே! நாட்டில் பள்ளிக்கூடங்கள், உயர்தரக் கலாசாலைகள் எவ்வளவு இருந்தாலும், ஓரளவிற்குத்தான் அவற்றின்மூலமாக அறிவு வளரும். யார் அவற்றை நடத்தினாலும், ஒரு கட்டுப்பாட்டுக்குள், ஒரு வரம்பிற்குள் அடங்கியது.
இன்னார், இன்னதைத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்; இன்ன, இன்னதுதான் பாடத் திட்டம்; இன்ன இன்னதெல்லாம் பாடத் திட்டங்களில் இருக்கக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு உண்டு.

படிப்பகங்கள் ஒரு ‘‘சர்வகலா சாலை!’’
இத்தகைய ஸ்தாபனங்கள்மூலம் படிப்பின் பயன் எல்லாம் ஏற்பட்டு விடாது. இந்தக் குறை பாட்டை நிறைவுபடுத்துவதற்குப் பயன்படுவது தான் இத்தகைய படிப்பகங்கள் ஆகும். இங்கு எல்லாக் கருத்துள்ளவர்களைக் கொண்டோரது அறிவு நூல்கள் – எல்லா கருத்துகளையும் கொண்ட பத்திரிகைகள் – எல்லா கருத்துகளையும் கொண்ட உலக செய்திகள் அவரவருடைய கருத்துகள் தாராளமாக இருக்கும். அல்லது இருக்க வேண்டியது படிப்பகத்திற்கு மிக அவசியமாகும்.
சுருங்கச் சொன்னால், படிப்பகங்கள் ஒரு ‘‘சர்வகலா சாலை” என்றே கூறலாம்.
படிப்பகத்தார்கள் அக்கறை எடுத்துக்கொண்டு, கவர்ச்சிகரமாய் செய்யவேண்டும். இப்படி இருக்குமே யானால், நம்முடைய காட்டுமிராண்டித்தனம், முரட்டுப் பிடிவாதம், நான்தான் உயர்வு என்ற ஆணவம் – இவை சீக்கிரம் மாற்றமடையும்.
இங்குள்ள நூல் நிலையங்கள் என்பவை பெரும் பாலும், அரசாங்கத்தின் பணத்தை எதிர்பார்த்து நடப் பவைகள். எனவே, அவைகள் அரசாங்கத்தின் ஆணை களுக்கு உட்பட்டு நடந்தாகவேண்டி இருக்கும்.
முனிசிபல், பஞ்சாயத்து இவற்றிற்கு உட்பட்ட நூல் நிலையங்களும்கூட இப்படித்தான்” என்றார் தந்தை பெரியார் அவர்கள்.

நாட்டில் அறிவு வளர்ந்ததற்குக் காரணமே, படிப்பகங்கள்தான்!
நாட்டில் அறிவு வளர்ந்ததற்குக் காரணமே, படிப் பகங்கள்தான். தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய தெளிவு இருக்கிறது; வடபுலத்தில் இதுபோன்ற நிலை இல்லை என்று சொன்னால், இங்கே கல்வி, அந்தக் கல்வியைப் பரப்பக்கூடிய படிப்பகங்கள்தான்.
அதனால்தான் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி அண்ணா அவர்கள், ‘‘பெரியார் நடத்துகின்ற பொதுக் கூட்டங்கள், மாலை நேர கல்லூரிகள்; தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார்தான்” என்றார்.
தந்தை பெரியார் அவர்கள், மூன்று நேரம் வகுப் பெடுப்பார். மக்களுக்கு எல்லாப் பிரச்சினைப்பற்றியும் எடுத்துச் சொல்வார்.
ஆகவே, இந்தப் பகுதியில் இவ்வளவு அற்புதமான, ஒரு சிறப்பான அறிவுச் சுடரை நீங்கள் ஏற்படுத்தி யிருக்கிறீர்கள்.
மனிதர்களுக்கு எவ்வளவோ செல்வங்கள் இருக் கலாம்; எவ்வளவோ சொத்துகளை சம்பாதித்திருக்கலாம்.
ஆனால், அதுகுறித்தும் அய்யா அவர்கள் சொல்லியிருக்கிறார்; ‘‘ஒருவர் வீடு, அவருடைய நினைவு நிரந்தரமாக இருக்கவேண்டுமானால், பொதுக்காரியம் செய்யவேண்டும்; பொதுப் பணி செய்யவேண்டும்” என்றார்.
ஒருவர், அவர் வீட்டை பொதுக் காரியத்திற்காகக் கொடுத்தால், அந்த வீடு அவருடைய வீடாகவே நூறாண்டாகவே இருக்கும். ஆனால், தனிப்பட்ட முறையில் எவ்வளவுதான் சம்பாதித்தாலும், எவ்வளவு தான் சொத்துகள் இருந்தாலும் என்னாகும் என்றால், நான் இருக்கும்வரை என் காலம்; எனக்குப் பிறகு என் பிள்ளையின் காலம்; அதற்குப் பிறகு, என்னுடைய பேரன் காலம்; அந்த சொத்தை அவர் வீணாக்கினார் என்றால், இன்னொருவருடைய வீடாகிவிடும்.

ஒவ்வொருவரும் பொதுப் பணியை மய்யப்படுத்தவேண்டும்!
ஆனால், ஒரு பொதுக் காரியம் என்று சொன்னால், அவருடைய பெயரில் அந்தப் பொதுக்காரியம் நடை பெறுகிறது என்று சொன்னால், அது நூறாண்டானாலும் அப்படியே இருக்கும்.
காந்தி படிப்பகம் என்றால், அது காந்தி படிப்பகமாகவே இருக்கும்; பெரியார் நினைவு என்றால், பெரியார் நினைவாகவே இருக்கும்; அண்ணா நினைவு என்றால், அண்ணா நினைவாகவே இருக்கும்.
ஆக, இப்படி ஒவ்வொரு துறையிலும் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை. ஆகவேதான், ஒவ்வொருவரும் பொதுப் பணியை மய்யப்படுத்தவேண்டும்.
மனிதன் வாழ்கிறான், தனக்காக அல்ல; பிறருக்காக.
எனவேதான், ஒருவர் தனக்காக வாழக்கூடாது; தானாகவும் அவன் பிறக்கவில்லை.

படிப்பகங்கள் மிகப்பெரிய
அறிவு ஊற்றுகள்!
எனவேதான், மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்று சொன்னால், அறிவின் அடிப்படை.
‘‘அறிவை விரிவு செய்து, அகண்டமாக்கு”வதற்கு இதுபோன்ற படிப்பகங்கள் மிகப்பெரிய அறிவு ஊற்றுகள்.
மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்ற அய்யா பரசுராமன் அவர்களு டைய பெயரால், இந்த வட்டாரத்தில் இந்தப் படிப்பகத்தைச் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். இந்தப் படிப்பகம் வாடகைக் கட்டடத்தில் நடை பெறுவதாகச் சொன்னார்கள். எந்த அளவிற்கு எங்களால் உறுதுணையாக இருக்க முடியுமோ, அந்த அளவிற்கு நாங்கள் இருப்போம்.
இந்தப் படிப்பகத்திற்கு முதல் புரவலர் அரு மைச் சகோதரியார் விஜயலட்சுமிதான். இரண் டாவது அய்யா அவர்கள்.

ஆல்போல் தழைத்து,
அருகுபோல் வேரோடி….
இந்தப் படிப்பகம் மேலும் மேலும் ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி இந்த மக்களுக் கெல்லாம் மிகப்பெரிய அறிவுத் தேக்கமாக, அறிவு ஊற்றாக என்றைக்கும் இருக்கவேண்டும்.
மீண்டும் வாழ்வியல் சிந்தனைகளைப்பற்றி தனியே ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவேன்.
வாழ்க பெரியார்!
வளர்க பரசுராமன் அவர்களுடைய தொண்டு!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *