அரசியல் பிரமுகர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு தமிழ்நாட்டின் சாலைகளைப் போன்று போலியான பின்னணிகளை உருவாக்கி பீகார் மற்றும் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் கலவரத்தை தூண்ட முயற்சி செய்து பின்னர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு மதுரையில் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்ட மணீஷ் காஷ்யப் என்ற சமூகவிரோதி பாஜகவில் இணைந்தார்.
பா.ஜ.க.வும் கட்டித் தழுவி வரவேற்றுள்ளது.
தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற ‘வீடியோ’ காட்சிகள் கடந்த ஆண்டு (2023) மார்ச் மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில வடமாநிலத்தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டு, தலைகீழாக சாலை ஓரத்தில் உடலைதொங்கவிடுவது போலவும், சாலையில் சென்றுகொண்டு இருக்கும் வடமாநில தொழிலாளிகளை தமிழர்கள் தமிழில் பேசச் சொல்லி அவர்களை அடித்துக் கொலை செய்வது போலவும் காட்சிப் பதிவுகள் வெளியானது. இது தொடர்பாக அவதூறாக வீடியோ பரப்பியதாக பீகாரைச் சேர்ந்த பல்வேறு நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த யூடியூப் பிரபலமான மணீஷ் காஷ்யப் என்பவர் சினிமா படப்பிடிப்பு போல் படப்பிடிப்பு தளத்தை உருவாக்கி, அதில் சிலரை நடிக்க வைத்து வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற காட்சிகளைப் படம் பிடித்து, அதனை பரப்பியது தெரிய வந்தது. இதற்கு சில தமிழர்களும் பணத்திற்காக உடந்தையாக இருந்தது வெட்கக்கேடு!
இதையடுத்து, மணீஷ் காஷ்யப் உள்ளிட்ட பலரை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்தனர்; பின்னர் நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, தேசிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியதற்காக மணீஷ் காஷ்யப் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்,
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அப்போது துணை முதலமைச்சராக பீகாரில் இருந்த தேஜஸ்வியின் உடனடி நட வடிக்கையால் பெரும் கலவரம் மூளுவது துவக்க கட்டத்திலேயே முறியடிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு பீகாரில் நிதீஷ்குமார் ராஷ்டிரிய ஜனதாதளத்தின் ஆதரவை முறித்துக்கொண்டு மீண்டும் பாஜகவின் துணையோடு முதலமைச்சர் ஆனார்.
இதனை அடுத்து சில நாட்களிலேயே மணீஷ் காஷ்யப் பிணையில் விடுதலை ஆனார். அதன் பிறகு அவர் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாட்டின் காவல்துறையினர் குறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மோசமான வகையில் பேசி வந்தார்.
அடுத்து மணீஷ் காஷ்யப் டில்லியில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். பாஜக தலைமையகத்தில் பாஜக எம்.பி. மனோஜ் திவாரி முன்னிலையில் மணீஷ் காஷ்யப் பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு பேசிய அவர் தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆகட்டும், உதயநிதி மு.க.ஸ்டாலின் ஆகட்டும், பீகாரில் லாலுவாகட்டும், தேஜஸ்வியாகட்டும். இவர்களால் நான் நிறைய பிரச்னைகளை சந்தித்துள்ளேன்.
“ஏழைக் குடும்பத்தின் மகனுக்கு பா.ஜ.க. பேருதவி புரியமுடியும் ஏழைகள், பெண்கள், செய்தியாளர்கள் தாய்மார்கள் ஆகியோரை பா.ஜ.க. மதிக்கிறது. நான் எப்போதும் போல தேசியவாதத்திற்காக தொடர்ந்து பாடுபடுவேன். நான் முன்பு எனது மக்களின் உரிமைக்காக குறிப்பாக தமிழ்நாட்டில் வேலை செய்யும் பீகார் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தேன்; ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் அரசியல் கட்சி என்னைக் கைது செய்யவைத்து சிறையில் அடைத்தது.
இந்த நிலையில் பாஜக தலைவர்கள் என்னை ஆதரித்தனர்; இன்று நான் சிறையில் இருந்து பத்திரமாக வெளியே வந்திருக்கிறேன் என்றால் அதற்கு பாஜக தலைவர்களின் ஆதரவும் காரணம். ஆகவே நான் பாஜகவில் இணைந்துள்ளேன்” என தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு இவரை தமிழ்நாடு மற்றும் பீகார் காவல் துறையினர் கைதுசெய்த போது அவரது வங்கிக்கணக்கில் ரூ.40 லட்சம் வரவு வைக்கப்பட்டது தெரியவந்தது.
எந்த ஒரு வேலையும் இல்லாமல் பத்திரிகைக்காரர் என்று போலியாக அடையாள அட்டை வைத்துக்கொண்டு வீடியோ எடுத்து மிரட்டி ரூ.500, ரூ.1000 என்று வசூலித்துக் கொண்டு இருந்த இந்த மணீஷ் காஷ்யப் வங்கிக்கணக்கில் 40 லட்சம் ரூபாயை யார் கொடுத்தார்கள் என்று விசாரணை நடந்துகொண்டு இருக்கும் போதே பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்ட நிலையில் அவர் பாஜகவில் இணைந்து கொண்டுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது.
எதற்கெடுத்தாலும் தார்மீகம் பேசும் பிஜேபி யோக்கியதை எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். குற்றவாளிகளின் சரணாலயத்திற்குப் பெயர்தான் பிஜேபி என்பதைத் தெரிந்து கொள்வீர்!
குற்றவாளிகளை சலவை செய்யும் வாசிங் மெஷின் பிஜேபி என்ற பிரச்சாரம் நடைபெறுவது நூற்றுக்கு நூறு உண்மையே!