கொளுத்தும் கோடையினூடேயே தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தனது 91 ஆம் வயதில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையை, ஏப்ரல் 2ஆம் தேதி தென்காசியில் தொடங்கி, ஏப்ரல் 17 ஆம் தேதி தஞ்சையில் நிறைவு செய்திருக்கிறார்.
’இந்த வயதில் ஏன் இவ்வளவு அலைச்சல்? என்று பலரும் சுட்டிக்காட்டிய பின்னும், 16 நாட்களில் 24 நாடாளுமன்றத் தொகுதிகளில் 26 பொதுக் கூட்டங்கள், துறையூரில் வாகனத்தில் இருந்து கொண்டே ஒரு கூட்டம் என்று, மொத்தம் 27 இடங்களில் பேசியிருக்கிறார்.
அடேயப்பா… ஒரு நாளும் ஓய்வு எடுத்துக் கொள்ள வில்லை ஆசிரியர்! ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்? வேட்பாளர்களை விட இவருக்கென்ன இதில் இவ்வளவு அக்கறை? என்று யாரும் கேட்கத் தேவையில்லை.
”இதற்கு முன்பு வந்தது போல் அல்ல இந்தத் தேர்தல். பிரிட்டிஷார் ஆட்சியில் ஒரு தேர்தல் உள்பட விடுதலை பெற்ற பிறகு, 17 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இப்போது நடந்து கொண்டிருப்பது 18 ஆம் பொதுத் தேர்தல்! ஆக மொத்தம் 19 தேர்தல்களிலும் பரப்புரை செய்தவன் என்கிற முறையில், எனக்கேற்பட்டுள்ள அனுபவத்தில் நான் இதைச் சொல்கிறேன்” என்று அவரே, அழுத்தம் திருத்தமாகப் பதிலும் சொல்லியிருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக பாசிச பா.ஜ.க. அரசின் ஊழல் களை, தமிழ்நாட்டு மக்களின் இன, மொழி, மாநில உரிமைகள், பொருளாதார இழப்புகளை, பெண்கள் சந்தித்த வன் கொடுமைகளைப் பற்றி விளக்கிச் சொல்வதற்கு இமயமலை போல தகவல்கள் குவிந்து கிடக்கின்றன.
ஆனால், நேரம்? ஒரு நாளைக்கு இரண்டு கூட்டங்கள் பேசுகிற ஆசிரியர், ஒவ்வொரு கூட்டத்திலும் குறைந்தது 40 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை பேசினார். இதில் இரண்டு கூட்டங்களுக்கு இடையே இருக்கும் பயண நேரம் வேறு. ஆகவே, கிடைக்கின்ற குறுகிய நேரத்தில் எல்லா வற்றையும் சொல்லி விட முடியவில்லை.
ஆனாலும், நமது மக்கள் முழுமையான அரசியல், சமூக விழிப்புணர்வு பெற்றுவிட வேண்டும் என்கிற தாயுள்ளத் தோடு, மக்கள் பதிப்பில்; அடக்க விலையில் சின்னச் சின்ன தாக நான்கு புத்தகங்களை எழுதி, 16,000 பிரதிகள் தயார் செய்து கொடுத்திருந்தார்.
ஒன்று, ‘மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப் போம்’, இரண்டாவது, ‘பா.ஜ.க.வின் ப்ரீபெய்ட், போஸ்ட் பெய்டு ஊழல்கள்’, மூன்றாவது ‘பிரதமர் கோடிக்கு கருஞ்சட்டைக்காரனின் திறந்த மடல்’, நான்காவதாக, ‘மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை (தி.மு.க.அணியை) ஆதரிக்க வேண்டும் ஏன்?’ இந்த நான்கு புத்தகங்கள் தான் அது! ஆசிரியரின் உள்ளக்கிடக்கையை உணர்ந்து, அந் நான்கு புத்தகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை, தோழர்கள் சாந்தகுமார், அருண்குமார், ரகுராமன், ஆத்தூர் சுரேஷ், ஓட்டுநர் அருள்மணி, ஆகியோர் மிகச் சிறப்பாக செய்து முடித்தனர்.
சுற்றுப்பயணத்தில் ஆசிரியர் நாள்தோறும் ஆயிரக் கணக்கான மக்களிடம்; மோடி ஏன் மறுபடியும் பிரதமராக வரக்கூடாது?; பா.ஜ.க. மீண்டும் ஏன் ஆட்சி அமைத்து விடக்கூடாது? என்பதை நகைச்சுவை கலந்து பேசிக் காட்டி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
அது நல்ல அளவுக்கு மக்களிடம் சென்று சேர்ந்திருந்தது. இந்தியா கூட்டணிக் கட்சியின் பிரதிநிதிகள் புத்தகங்களை ஆசிரியரிடம் நேரிடையாகப் பெற்றுக்கொண்டனர். அப்படி வாங்கியவர்கள் சிலர் அங்கேயே கீழே அமர்ந் திருந்த மக்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். மக்களும் தாங் களாகவே ஆர்வத்துடன் புத்தகங்களை 70 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டனர்.
அதையும் தாண்டி பெண்கள் தேடி வந்து புத்தகங்களை வாங்கிய நிகழ்வுகளையும் காணவும், கேட்கவும் முடிந்தது. கோவை விவேகானந்தா நகரில் நீலகிரி தொகுதி வேட்பாளர் மாண்புமிகு, மானமிகு ஆ.ராசாவை ஆதரித்து ஆசிரியர் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு பெண், ஆசிரியர் குறிப்பிட்டுச் சொன்ன ரூபாய் 70 மதிப்புள்ள நான்கு புத்தகங்களை வாங்க வந்து, 180 ரூபாய் மதிப்புள்ள “அவர் தாம் பெரியார்” புத்தகத்தையும் வாங்கிச் சென்றார்.
ஆவடி கழக மாவட்டம் கொரட்டூரில் ஆசிரியர் பேச்சைக் கேட்ட ஒரு இளம் வயது பெண், தோழர் சாந்த குமாரிடம் ஆசிரியர் குறித்து நிறைய விசாரித்திருக்கிறார். “91 வயதில் இப்படிப் பேசுகிறாரே! எத்தனையோ புத்த கங்கள் எழுதி இருப்பதாக சொல்கிறீர்களே! இது எப்படி சாத்தியம்?!” என்று வியந்து புத்தகங்களை வாங்கிச் சென் றிருக்கிறார். இப்படித்தான் கொண்டு சென்ற புத்தகங்கள் அனைத்தும் 17 ஆம் தேதி பரப்புரை நிறைவதற்குள் மக்க ளிடம் சென்று சேர்ந்துவிட்டன.
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கிணங்க 17 ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே ஆசிரியரும் பேசி முடித்து விட்டார்.
ஆனாலும், அவர் மக்களிடம் பேசிக் கொண்டே… இருக்கப் போகிறார், அந்த 16,000 புத்தகங்கள் வாயிலாக!