உலகில் மிக உயர்ந்த நெறிகளைக் கொண்டவை தமிழ் நூல்கள் என்று கூறி அவற்றை உலகம் முழுக்க கொண்டு சென்றவர் ஜி.யு.போப்.
தமிழ் கூறும் நல்லுலகம் உள்ளவரை ஜி.யு.போப்பின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக பாடப் புத்தகங்களில் மட்டும் இருந்த ஜி.யு.போப் குறித்து விவாதத்திற்குரிய கருத்துகளை ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதால் மீண்டும் அவர் குறித்து தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக நூல் விற்பனை நிலையங்களில் ஜி.யு.போப் குறித்த நூல்கள் இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகம் விற்பனை ஆகியதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
அந்த வகையில் ஜி.யு.போப்பை மீண்டும் குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்ததில் ஆளுநரின் விசமத்தனமான பேச்சில் ஒரு நன்மை கிடைத்துள்ளது.
திருக்குறள் மொழிபெயர்ப்பு
திருக்குறளில் உள்ள 1,330 குறள்களையும் முழுமையாக ஆங்கிலத்தில் முதன்முதலாக மொழிபெயர்ப்பு செய்தார். 1886இல் இது வெளிவந்தது. ஆங்கில மொழிபெயர்ப்பின் முன்னுரையில் போப் எழுதியிருப்பதாவது:-
“தமிழ் மொழி பண்பட்ட மொழி. சொற்செல்வம் படைத்த தனிமொழி. தென்னிந்திய மொழிகளுக்கு எல்லாம் அது தாய் மொழி. தமிழ் மொழியின் இலக்கண நெறிகள் தத்துவ உண்மைகள் நிறைந்தன. தமிழில் இலக்கியங்கள் ஒழுக்கத்தையும், அறநெறிகளையும் ஊட்டுவதற்கு என்றே உருவானவை. உருவாகியவை. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு திருக்குறள்.
உயர்ந்த அறநெறியும், உயிரினும் சிறந்த ஒழுக்கமும் பேணப்பெறும் மக்கள் வாழும் நாட்டில்தான் திருக்குறள் போன்ற நீதிநூல் உருவாகும். உருவாகவும் இயலும். அழுக்கில்லாத தூய நீரூற்று போல திருக்குறள் தோற்றம் தருகிறது.”
ஜி.யு.போப் திருக்குறள் மட்டுமின்றி, நாலடியார், திருவாசகம் முதலிய நூல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
ஒழுக்க நெறி
திருக்குறள், நாலடியார், பழமொழி, இனியவை நாற்பது முதலிய நூல்களில் இருந்து ஒழுக்க நெறியை போதிக்கும் சிறந்த பாடல்களை தேர்ந்தெடுத்து “தனிச்செய்யுள் கலம்பகம்” என்ற பெயரில் தொகை நூல் ஒன்றை வெளியிட்டார்.
தமிழைக்கற்று உணர்ந்து தமிழ் தொண்டராகவே மாறிவிட்ட போப் தஞ்சாவூரில் இருந்து ஊட்டி சென்று வாழ்ந்தார்.
இந்திய வரலாறு குறித்து 2 நூல்களை வெளியிட்டார். 1871இல் பெங்களூரு சென்று பிஷப் கார்டன் ப்ள்ளியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ஏறத்தாழ 42 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்த போப் 1882ஆம் ஆண்டில் தன் 62ஆவது வயதில் இந்தியாவை விட்டு இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றார். 1885இல் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார்.
அங்கு மாணவர்களுக்கு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்றுக் கொடுத்தார்.
ஜி.யு. போப் 11.2.1908இல் மறைந்தார்.