பெரியார் என்ற தத்துவஞானியின் பாடம் இதோ (1)
“பச்சை உண்மையானது மக்களுக்கு எப்போதும், கலப்பு உண்மையைவிட அதிகமான அதிருப்தியைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும். உண்மையை மறைத்துப் பேசுவது என்பது, எப்போதும் பேசுகின்றவனுக்கும், பேச்சைக் கேட்பவர்களுக்கும் திருப்தியைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும். திருப்தி உண்டாகும்படி செய்து கொள்ளலாம். ஆனால், உண்மை பேசுவதன் மூலம் அப்படிச் செய்ய முடியாது”
– தந்தை பெரியார் அவர்கள் சென்னையில் அன்றைய மவுண்ட்ரோடில் – இன்றைய அண்ணாசாலையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உரையின் ஒரு பகுதி – (22.3.1931).
தந்தை பெரியார் ஒரு தத்துவ ஞானி. சிந்தனை ஊற்று – இவற்றை பெரியார் அவர்கள் பல புத்தகங்களைப் படித்தோ அல்லது நூலகங்களுக்குச் சென்றோ அல்லது புத்தரின் வாழ்வில் வருவது போன்று ஒரு போதி மரம் தேடிச் சென்று அதனடியில் பல ஆண்டு காலம் இருந்து சிந்தித்து பிறகே சித்தார்த்தன் என்பவர் கவுதம புத்தனாகி அறிவு முதிர்ச்சி அடைந்தார் என்பன போன்றதல்ல.
தன்னைச் சுற்றிலும், தன் வீட்டிலும் மற்றும் சமூகத்திலும் நடைபெற்ற சம்பவங்களைக் கொண்டே சுயமாகச் சிந்தித்து சில கொள்கை களையும், அவற்றை அடைய போராட்ட வழி முறைகளையும் கண்டறிந்து வெற்றி பெற்றவர்.
“உண்மையை பேசு” என்று பள்ளிப் பருவம் முதற் கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
ஆனால் போதிக்கும் ஆசிரியர்களால்கூட கண்டிப்புடன் உண்மையை – பச்சை உண்மையை – எல்லாக் காலத்திலும் பேச முடிகிறதா என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டால் – கிடைக்கும் விடை எப்படியிருக்கும் என்பது தெரிந்ததுதானே!
நீதிமன்றங்களில் சாட்சிக் கூண்டில் ஏற்றி நிறுத்தி, வழக்குரைஞர்களின் மூலம் வாதுரை அம்சங்களுக்கான அடிப்படை, குறுக்கு விசா ரணைகளுக்குமுன் எல்லா இடங்களிலும் நடப்பது என்ன?
சாட்சி சொல்வோரின் உறுதிமொழி, தான் சொல்வது உண்மை; முழு உண்மை, உண் மையைத் தவிர வேறு ஏதுமில்லை – என்று மூன்று வரி (ஆங்கில உறுதிமொழி,) தமிழிலும் உறுதி மொழி!
‘பிராசிகியூஷன்’ என்ற தண்டனை வாங்கித் தர வாதாடும் கட்சிக்காரனுக்கான சாட்சியும் – வழக்கிலிருந்து விடுதலை பெற முயற்சிக்கும் கட்சிக்கான சாட்சிகளும் (இரண்டு சாராரும்) கூண்டில் ஏறி – ‘உண்மையைத் தவிர வேறில்லை’ என்று கூறுவதோடு கூடுதலாக – அதற்கு மேலும் வலுசேர்க்க கடவுள் பெயரால் சத்தியமும் செய்கின்றனர்.
இரண்டு பேர் கூறுவதும் எப்படி பச்சை உண்மையாக இருக்க முடியும்?
இந்த இரண்டு பேரில் யாரோ ஒருவர் பொய் சொல்கிறார் என்பதுதானே உண்மை?
அந்தப்படி இருக்கும்போது, கூண்டில் ஏற்றப் பட்டு கூறிய உறுதிமொழிக்கு என்ன மரியாதை?
அந்தந்த நேரங்களில் – பல்வேறு காரணங்களுக்காக – இப்படி பொய் சொல்லி – பச்சை உண்மையை மறைத்தும், திரித்தும் பேசுவதும், அதனால் பயனடைவதும், பரிசு போல கைமேல் பலன் பெறுவதும் அவ்வப்போது மகிழ்ச்சியைத் தந்தாலும், இரவில் தூங்கும் முன்போ அல்லது அடுத்த வாய்ப்பில் தன்னை அத்தகைய மனிதர்கள் சுயமாக பரிசோதனை செய்யும் வகையிலோ ஆற அமர சிந்திக்கும்போது தங்களது பொய் வாக்கு அவர்களது நெஞ்சத்தைத் தீபோல் சுட்டெரிக்காதா?
இல்லை சிலருக்கு அப்படி இல்லையே – மாறாக அவர்கள் இன்பத்தில் அல்லவா திளைத்து மகிழ்கிறார்கள் – என்று நீங்கள் என்னைப் பார்த்துக் கேட்கத் துடிப்பது எனக்குப் புரிகிறது.
இன்றில்லா விட்டால் நாளை – நாளை இல்லாவிட்டால் வேறு ஒரு நாள் – அது பொய் கூறியவரின் நெஞ்சத்தினை சுட்டெரிப்பது உறுதி!
ஆதலால் மற்றவர்களை திருப்தி செய்ய பொய் கூறி வாழ்வதைவிட, உங்களை – நம்மை நாமே – திருப்தியுடன் வாழ கூடுமானவரை உண்மையைப் பேசுவதே எப்போதும் நல்லது. இதில் பெரியாரைத் துணைக்கோடலும், பெரியாரைப் பிழையாமையும் சாலச் சிறந்தது – நம்மை எப்போதும் திறந்த மனதுடன் இருத்தி கனமில்லாத லேசான நெஞ்சத்தினை பகுத்தறிவுடன் தூக்கும் பளுவில்லா – கள்ளமில்லா உள்ளத்துடன் வாழுவோமா!
பெரியார் என்ற தத்துவ ஞானியின் முதலில் கசப்பான இந்தப் பாடம், இறுதியில் இனிப்பாகவே முடியும். எனவே அறிவை அகண்டமாக்கிட – நமக்குச் சொல்லிக் கொடுக்கும் அந்த அறிவாசானின் 145ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டிய பாடம் இது!
படிப்போம்; பயன் பெறுவோம்.
(நாளையும் வேறு வாழ்வியல் பாடம்)