எங்கள் புரட்சிக் கவிஞரை எப்போது மறந்தோம் இப்போது மட்டும் நினைக்க?

viduthalai
1 Min Read

இன்று – நம் புரட்சிக் கவிஞரின் நினைவு நாள் என்ற வரலாற்றுக் குறிப்பு நாள்!
‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’ என்றவர் அப்புரட்சிக் கவிஞர்; அவர் தமிழுக்கு செய்த தொண்டு காவல் அரண் அமைத்து, சுயமரியாதை சூட்டுக் கோல் மூலம் சொரணையற்ற சமூகத்தையே சொடுக்கு கள் மூலம் எழச் செய்த எம் பெருமான்!
அவரது கவிதைகள் வெறும் சுவைக் கல்ல;
அநீதிகளை எதிர்த்து சுழலும் போர் வாள்களாக வேண்டும்
என்பதை தனது
ஒவ்வொரு கவிதை வரியிலும்
கற்றுத்தந்த பாவியம் வரைந்த
ஒப்பற்ற காவியப் பெருங்கோ!
களைப்பின்றி, கடைசி வரை களமாடிய ‘பேசு சுயமரியாதை உலகு’க்கு வெற்றி முழக்க இலக்கியத்தைப் போர்க்கருவியாக்கிய புரட்சி எரிமலை நமது கவிஞர்!
சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்த கவிஞர் சுப்புரத்தினம்தான் பிறகு புரட்சிக் கவிஞர் என்ற சொக்கத் தங்கமானார்!
புரட்சி உலகின் சிங்கமானார்!
பெரியார் இயக்கத்தின் அங்கமானார்!
விசை ஒடிந்த தேகத்தில் வன்மையை ஏற்படுத்தியதோடு வீழ்ச்சியுற்றத் தமிழ் நாட்டில் எழுச்சி உருவாக்கினார்!
எனவே புரட்சிக் கவிஞரின் நினைவு நாளில் – பாதை மாறாது நமது சுயமரியாதை, பாலியல் நீதியை உள்ளடக்கிய சமூகநீதி; பகுத்தறிவுப் புது உலகம் அமைக்க சூளுரை ஏற்போம்!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் அந்த ‘சுழல் விளக்கு’ நமது பயண வாகனத்தின் வழிகாட்டி விழிகளுக்கு ஒளியூட்டட்டும்!
சமூக விடுதலை இல்லாத அரசியல்
வெறும் கானல் நீர்தான் என்பதை
நமக்கு உணர்த்திட ஓங்கிய குரல் எழுப்பிய
எம் புரட்சி கவிஞரே, உம்மை நாங்கள்
மறந்தால்தானே இன்று மட்டும் நினைக்க?
எனவே வரலாற்றுக் குறிப்புகளில் அவர்தம் பெருமையைக் கூறி நாம் நம்மை உயர்த்திக் கொள்ளுவோமாக!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
21.4.2024 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *