சங்பரிவாரத்தின் முக்கிய பிரமுகரும், 4 முறை பாஜகவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான காகன் தற்போது மேற்குவங்கம் மால்தா வடக்கு தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இவர் தொகுதிக்குட்பட்ட ஹபிப்பூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு நின்றுகொண்டு இருந்த பெண் ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணும் இதை எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில் இவர் முத்தம் கொடுத்த ஒளிப்படம் நாளிதழ்களில் வெளியாகி உள்ளது.
இதனால் அந்தப்பெண் மிகுந்த மன உளைச் சலுக்கு ஆளாகி உள்ளார்.
இது தொடர்பாக உள்ளூர் வங்க மொழி நாளிதழுக்கு அப்பெண்ணின் உறவினர் ஒருவர் கொடுத்த பேட்டியில், “பொதுவாக பல கட்சி வேட்பாளர்கள் வாக்கு கேட்டு வரும் போது நாங்கள் அவர்கள் பேசுவதைக் கேட்க வீட்டின் முன்பு நிற்போம், அன்றும் அதே போல் தான் நின்றுகொண்டு இருந்தோம், பாஜகவின் காகன் எங்களிடம் வாக்கு கேட்டுக்கொண்டு இருந்தார்” திடீரென எனது உறவுக்காரப் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டார்! யாரும் அவர் இப்படிச் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. இதனால் அப்பெண் மிகவும் மன உளைச்சலில் உள்ளார்.
அப்பகுதி மக்கள் அந்தப் பெண்ணைக் கிண்டல் செய்யும் தோரணையில் பார்க்கின்றனர். இதனால் அவர் வெளியே வருவதற்கே மனமில்லாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்.
வேட்பாளரின் பாலியல் அத்துமீறலை எப்படி சொல்லி புகார் கொடுப்பது? இருப்பினும் நாங்கள் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று இருக்கிறோம், இது மிகவும் மோசமான நடத்தை ஆகும் – அந்தக் கட்சி இவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று தெரியவில்லை – காரணம் அவர் அக்கட்சியில் நீண்டகாலமாக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்” என்று தெரிவித்தார்.
சேலத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “திமுகவினர் பெண்களை மரி யாதையாக நடத்துவதில்லை. அவர்கள், தெய்வமாக மதிக்க வேண்டிய பெண்களை இழிவுபடுத்தும் வேலை களில் ஈடுபடுகின்றனர்.
ஹிந்துக்களை இழிவுபடுத்துவது சக்தியின் வடிவமான பெண்களை இழிவுபடுத்துவதற்குச் சமம்” என்று பேசியது மட்டுமல்லாமல் 10 இளம் பெண்களுக்கு மாரியம்மா வேடம் அணிந்து வரவழைத்து மேடையில் அவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டார்.
பிஜேபி மற்றும் சங்பரிவாரங்களின் உறுப்பினர்கள் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகள் குறித்து , பெரிய புராணமே எழுதலாம். அவ்வளவுக் கொடுமைகள் நடந்தும் எதுவுமே தெரியாதது போல் “நாரி சக்தி” குறித்து போலிவேடம் போட்டு நடிக்கிறார் மோடி
ஜம்மு மாநிலத்தில் கத்துவா பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஆசிபா என்ற சிறுமியை கோயில் அர்ச்சகர்கள் கடத்திச் சென்று, கோயில் கருவறையில் ஒருவாரம் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். குற்றவாளிகளைக் கைது செய்தபோது சங்பரிவார்கள், பிஜேபியினர் காவிக் கொடி ஏந்தி சென்றதும், அமைச்சர் ஒருவர் தேசியக் கொடியைக் கையில் ஏந்தி, குற்றவாளிகளைக் கைது செய்யக் கூடாது என்றும் முழக்கமிட்டுச் சென்றதும் எத்தகைய அவலம்!
இவர்கள்தான் பெண்களை “நாரிசக்தி” என்று சற்றும் கூச்சமில்லாமல் வருணனை செய்கின்றனர்.