முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17.4.2024 நாளிட்ட ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ (The Times of India) ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு 17.4.2024 அன்று அளித்த பேட்டி வருமாறு:
கேள்வி 1 : நடைபெறவுள்ள மக்கள வைத் தேர்த லில் இந்தியா கூட்டணிக்கும் தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணிக் கும் உங்கள் கணிப்புப்படி வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
ஒன்றிய அரசில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இந்திய நாட்டு மக்கள் தயா ராகிவிட்டார்கள். பா.ஜ.க.வின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. மூன்றாவது முறையாக எனக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் என்று மோடி கேட்கிறார். இரண்டு முறை மோடியிடம் ஏமாந்த இந்திய மக்கள் இம்முறை மோடியை ஏமாற்றத் தயாராகி விட்டார்கள். ஒன்றிய அரசில் ஆட்சிய மைக்கும் வகையில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையான வெற்றியைப் பெறும்.
கேள்வி 2 : உங்களைப் பொறுத்த வரை இந்தியா கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலங்கள் என்ன? பலவீனங்கள் என்ன? கடந்த இரு தேர் தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்ட ணியின் வெற்றிக்கும் காங்கிரசின் தோல் விக்கும் முக்கியக் காரணங்கள் என்ன வென்று கருதுகிறீர்கள்?
அரசியல் களத்துக்குரிய ஏற்ற இறக்கங்கள் எல்லா அணியிலும் இருக்கும். முந்தைய இரண்டு தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மோடி என்ற பிம்பத்தைக் கட்ட மைத்து அதன் பெயரில் வெற்றி பெற்றது. புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைக்கூட தேர்தல் அரசியலுக்கு பா.ஜ.க. பயன்படுத்தியது. எனினும், கடந்த 2019 தேர்தலிலேயே மோடியையும் பா.ஜ.க.வையும் வீழ்த்துவதற்கான ஃபார்முலாவைத் தமிழ்நாடு தான் உரு வாக்கித் தந்தது. தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் மதவாத அரசியலுக்கு எதிரான ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஓரணியில் நின்று ஒரு கொள்கைக் கூட்டணி யாகத் தேர்தலை சந்தித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில், காங் கிரஸ் கட்சி 9 இடங்களில் வென்றது. பா.ஜ.க. வுக்கு ஓரிடம் கூட தமிழ்நாட்டில் கிடைக்க வில்லை. அந்த ஃபார்முலாவின் விரிவாக்கம் தான் தற்போதைய இந்தியா கூட்டணி.
கேள்வி 3 : கச்சத்தீவு பிரச்சினை மீண்டும் தலை தூக்கியுள்ளது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழ்நாட்டு மீனவர்களின் நலனைப் பாது காக்காத ஒன்றிய பா.ஜ.க. அரசு, மீனவர்களின் படகுகளும் வாழ்க்கையும் பறிபோகக் காரண மான பா.ஜ.க. அரசு தன் தவறுகளை மறைத்து திசைத் திருப்பிட, திடீரென்று கச்சத்தீவு பிரச்சினையைக் கிளறுகிறது. ஆனால், பிரதமர் முன்னிலையிலேயே பொது மேடையில் கச்சத்தீவை மீட்டுத் தரவேண்டும் என தமிழ் நாட்டு முதலமைச்சர் என்ற முறையில் நான் வைத்த கோரிக்கையை நிறைவேற்ற பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அண்மையில் இலங்கை அமைச்சர்கூட, கச்சத்தீவு விவகாரம் குறித்து என்னிடம் விவா தித்தது இல்லை என்று தெரிவித்திருப்பதி லிருந்தே பா.ஜ.க.வின் நாடகம் அம்பலமாகி விட்டது.
கேள்வி 4 : 2019ஆம் ஆண்டின் தேர்த லுக்கு முன் திரு.ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்திருந்தீர்கள். இந்த முறை அவருக்கு அந்தத் தகுதி இல்லையா? எந்த ஒரு மக்களவைத் தேர்தலாக இருந் தாலும் பிரதமர் வேட்பாளராக ஒருவர் அறி விக்கப்பட வேண்டியது அவசியமல்லவா?
இந்தியாவின் நம்பிக்கைக்குரிய இளம் தலைவராக ராகுல்காந்தி இருக்கிறார். தற்போது இந்தியா கூட்டணியின் வலிமையும் வெற்றி யும்தான் முதன்மையானது என்பதால் அவர் உள்பட கூட்டணியின் அனைத்துத் தலைவர் களுமே பா.ஜ.க.வை வீழ்த்தும் வியூகங்களில் தான் கவனம் செலுத்தி வருகின்றனர். 1977இல் மொரார்ஜி தேசாயும், 2004இல் டாக்டர் மன்மோகன்சிங்கும் பிரதமர் பதவிக்கு முன் னிறுத்தப்படாமலேயே அந்தப் பொறுப்புக்கு வர வில்லையா? இந்தத் தேர்தல் என்பது யார் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்பதை விட யார் பிரதமராகத் தொடரக்கூடாது என்பதற்கானத் தேர்தல்.
கேள்வி 5 : பிரதமர் வேட்பாளர் குறித்து இந்தியா கூட்டணியில் விவாதம் நடந்துள் ளதா? தேர்வு செய்வதில் உங்கள் பங்கும் இருக்க வேண்டாமா?
அதற்குரிய நேரம் வரும்போது, எனக்கு உரிய பங்கினை நான் ஆற்றுவேன்.
கேள்வி 6 :பிரதம மந்திரியாக உள்ள
திரு. மோடியைப் பற்றிய தங்கள் கணிப்பு?
இந்தியாவின் ஜனநாயகம், பன்முகத் தன்மை இவற் றுக்கு எதிரான ஆட்சியைப் பத்தாண்டு காலம் நடத்தி யிருக்கிறார் மோடி. அரசமைப்புச் சட்டத்தையும் பா.ஜ.க அரசு மதிக்கவில்லை. இந்தியாவின் தேர்தல் நடை முறையையே சிதைக்கின்ற போக்குதான் வெளிப்பட்டது. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட் சியில் தமிழ்நாடு மொத்தமாக வஞ்சிக் கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முகத்தைச் சிதைக்க நினைக்கும் மோடியை, அதிகாரத்தில் இருந்து இறக்காவிட்டால் இந்தியாவில் இன்று நம் கண் முன்னால் பார்க்கும் அனைத்துக்குமே ஆபத்து.
கேள்வி 7 : ஆட்சியாளரை தீர்மானிப் பதில் வல்லவராக தங்கள் தந்தை போற்றப் பட்டவர். நாட்டின் அடுத்த ஆட்சியாளரைத் தீர்மானித்தவராக நீங்களும் போற்றப்படு வீர்கள் என்று தோன்றுகிறதா?
என்னுடைய தந்தை- கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், ‘என் உயரம் எனக்குத் தெரியும்’.
கேள்வி 8 : இந்தியா கூட்டணியில் பல் வேறு கட்சிகளை ஒன்றிணைத்ததில் உங்கள் பங்கே அதிகமாக இருந்தது. ‘தெற்கிலிருந்து ஒரு குரல்’, ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ என்னும் தலைப்பில் தங்கள் உரை இவ் விரண்டைப் பற்றியும் விளக்க முடியுமா? அவற்றின் நோக் கம் என்ன? அவை ஏற்படுத்திய தாக்கம் என்ன?
இந்திய அரசியலில் தெற்கிலிருந்துதான் சமூக நீதியின் குரல் ஓங்கி ஒலித்தது. தெற்கிலிருந்துதான் சமத்துவத்தின் குரல் ஒலித்தது. மதவாத அரசியலுக்கு இடம்தராமல் மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான பகுதியாக தெற்கு இருக்கிறது. இந்த உணர்வு கொண்ட பல தலைவர்கள் வடமாநிலங்களில் இருக்கிறார்கள். இருதரப்பின் உணர் வையும் ஒருங்கிணைத்து இந்தியாவின் ஜனநாயகத் தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற தலைப்பில் பாட்காஸ்ட்டில் உரையாற்றினேன். பல மில்லியன் பேரை அது சென்று சேர்ந்து, தேர்தல் களத்திற்கான முன்னோட்டப்
பரப்புரையாக அமைந்தது. என்னுடையதமிழ் உரையை ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, வங்காளம், கன்னடம், மராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் மாற்றம் செய்து வெளியிட்டதால் நல்ல விளைவை ஏற்படுத்தியது.
கேள்வி 9 : தங்கள் உரையின் நோக்கம் இந்தியா கூட்டணிக்கு மேலும் அதிக வலிமை சேர்க்க வேண்டும் என்பதாக மட்டுமே இருந்ததா அல்லது தங்கள் பார்வை வருங்கால அரசியல் களத்தில் மிகப் பெரிய அளவில் அங்கம் வகிப்பதை நோக்கி இருந்ததா?
இந்தியா கூட்டணியைக் கட்டமைப்பதில் மேற் கொண்ட பணியே பெரிய பணிதான். தி.மு.க. என்பது மாநிலக் கட்சி. பல்வேறு மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காகப் போராடும் கட்சி. பல உரிமை களைப் பெற்றுத் தந்த கட்சி. அந்த அடிப்படையில்தான் தி.மு.க.வின் தலைவரான என்னுடைய செயல்பாடுகள் எப்போதும் இருக்கும்.
கேள்வி 10 : தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல் போர் எப்படி இருக்கப் போகிறதென்று யூகிக்கிறீர்கள்? கடுமையான போராக இருக்குமா அல்லது எளிதில் வென்றுவிடக் கூடியதாகவே இருக்குமா?
வெற்றி மீதான நம்பிக்கையுடன் தேர்தலை எதிர் கொள்கிறோம். காரணம், தி.மு.க. மீதும் அதன் கூட்டணி மீதும் தமிழ்நாட்டு மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக் கிறார்கள். கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத் திற்கும் ஏதேனும் ஒரு வகையில் பயன் தந்திருப்பதால் மக்களின் நம்பிக்கைக்குரியதாக தி.மு.க உள்ளது.
கேள்வி 11 : கடந்த முறை தாங்கள் வற்புறுத்தியதைப் போலவே விசிக, மதிமுக போன்ற சிறிய கூட்டணிக் கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்படி வலியுறுத்தவில்லையே இந்த முறை? என்ன காரணம்?
கடந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அவரது கட்சியினர் தனிச் சின்னத்தில் போட்டியிட்டனர். அதுபோல, ம.தி.மு.கவும் இம்முறை தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பியது. ஓர் அரசியல் கட்சி தனக்கான சின்னத்தைத் தேர்ந்தெடுத்துப் போட்டி யிடுவதோ,தோழமைக் கட்சியின் சின்னத்தில் போட்டி யிடுவதோ அந்தக் கட்சியின் உரிமை சார்ந்தது. அதை மதிப்பதுதான் ஜனநாயகப் பண்பு.
கேள்வி 12 : வாரிசு அரசியல் என்று குற்றம் சாட்டி எதிர்க் கட்சிகள் தங்களுக்கு எதிராக பரப்புரையாற்றி வருவதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
வாரிசு அரசியல் என்பது நாங்கள் கேட்டுக் கேட்டு புளித்துப் போன குற்றச்சாட்டு. வேறு குறை சொல்ல ஏதுமில்லாததால் இதைச் சொல்கிறார்கள். இதற்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எங்க ளுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்து வெற்றி பெற வைப்பது தான் அவர்களுக்கு மக்கள் சொல்லும் பதில் ஆகும்.
கேள்வி 13 : உங்கள் ஆட்சிக்கு எதிராக கூறப்பட்டு வரும் ஊழல் குற்றச் சாட்டுகள் பற்றி என்ன கூற விரும்பு கிறீர்கள்?
என்ன ஆதாரம் இருக்கிறது? ஆதாரம் இருந்தால் கொடுங்கள். ஊழல் வழக்கில் இரண்டு முறை நீதிமன்றத்தால் தண்டனை பெற்று பதவி இழந்தவர் ஜெயலலிதா. முதல மைச்சராக இருந்தபோதே ஊழல் வழக்கில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை பெற்று சிறைக்கு போனவர் ஜெயலலிதா.
அவரை அடையாளப்படுத்தும் போது, ஊழல் ராணி என்று ஊடகங்கள் சொல்லி இருக்கிறீர்களா? பாஜகவின் தேர்தல் பத்திர ஊழலை உச்சநீதிமன்றம் அம்பலப்பத்தி விட்டதே. மோடியை ஊழல் மோடி என்று சொல்லும் தைரியம் இந்த நாட்டில் ஊடகங்களுக்கு உண்டா?
கேள்வி 14 : காலத்தைச் சற்று பின்னோக்கிப் பார்க்கும்போது, திரு.உதயநிதி அவர்களும், திரு.ஆ.ராசா அவர்களும், ஸநாதனம் குறித்து எதுவும் பேசாமல் இருந்திருக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா?
எல்லா மதத்தினருக்குமான இயக்கம்தான் தி.மு.கழகம். அதே நேரத்தில், மனிதர்களிடையே பிறப்பால் பாகுபாடு கூடாது என்கிற சமூக நீதிக் கொள்கையை அடிப் படையாகக் கொண்டு தி.மு.க செயல்படுகிறது. சமூக நீதிக்கு எதிரான முறைகளைத்தான் அண்ணா, கலைஞர் தொடங்கி இன்றைய தி.மு.க.வினர் வரை சுட்டிக் காட்டி யிருக்கிறார்களே தவிர, தனிப்பட்ட எந்த மதத்தையும் பற்றி விமர்சிக்க வேண்டிய தேவை தி.மு.க.வுக்கு இல்லை. மதத்தை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்கள் தி.மு.கவினரின் பேச்சைத் திரித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால், மக்களுக்கு உண்மை தெரியும் என்பதால் திரிபுவாதிகளைப் பொருட்படுத்த வில்லை.
கேள்வி 15 : கடவுள் – மதம்; இவ்விரண்டையும் தி.மு.க. எப்படிப் பார்க்கிறது?
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பேரறிஞர் அண்ணா எங்களுக்கு வழிகாட்டியிருக்கிறார். கோயில் கூடாது என்பதல்ல – அது கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்று கலைஞர் எழுதியிருக்கிறார். அதுதான் தி.மு.கவின் கொள்கை.
கேள்வி 16 : அதிமுகவுக்கும் பாஜகவுக்குமிடையே ரகசிய உறவு / கூட்டணி இருப்பதாக தாங்கள் கூறி வருகிறீர்கள். திமுகவுக்கும் பாஜகவுக்குமிடையே ரகசிய உறவு இருப்பதாக அதிமுக குற்றம் சாட்டி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டிற்கு தங்களின் விளக்கம் என்ன?
மோடியை பழனிசாமி விமர்சிப்பது இல்லை, மோடி ஆட்சியை விமர்சிப்பது இல்லை, மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று பழனிசாமி சொல்வது இல்லை. இதை வைத்துதான் பாஜகவுடன் பழனிசாமி வைத்திருப்பது கள்ளக் கூட்டணி என்கிறேன். இதற்கு நேரடியாக அவரை பதில் தரச் சொல்லுங்கள்.
கேள்வி 17 : தமிழ்நாட்டிற்கும் ஒன்றிய அரசுக்கு மிடையே உள்ள உறவு கொந்தளிப்பு மிக்கதாகவே இருந்துள்ளது. எல்லாமே அரசியல் சார்ந்த மோதல்கள் மட்டும்தானா?
உறவுக்கு கைக் கொடுப்போம், . உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதுதான் தி.மு.க.வின் ஒன்றிய-மாநில அரசுகளின் உறவுக்கான இலக்கணம். இந்திராகாந்தி அம்மையார், ராஜீவ்காந்தி, வாஜ்பாய் என தி.மு.க. கூட்ட ணிக்கு மாற்றான அணியைச் சேர்ந்தவர்கள் பிரதமராக இருந்தபோதும் மாநில நலன் சார்ந்த செயல்பாடுகளில் தி.மு.க ஒருங்கிணைந்தே செயல்பட்டுள்ளது. உரிமைகளை வலியுறுத்திப் பெற்றுள்ளது. ஆனால், மோடி அரசு மாநி லங்களின் உரிமைகளை மதிக்கவில்லை. மாநிலத்திற்குத் தேவையான நிதியை வழங்கவில்லை. வெள்ளம் போன்ற பேரிடர் காலத்திலும் உதவவில்லை. நானே பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியும் நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே இது அரசியலா என்று கேட்க வேண்டியது முதலமைச்சரான என்னிடம் அல்ல, பிரதமரிடம் தான்.
கேள்வி 18 : ஆளுநர் திரு.ஆர்.என்.ரவியுடன் தற் போது தங்களுக்குள்ள உறவு நிலை குறித்து கூற முடியுமா?
தனிப்பட்ட முறையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர் களுடன் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. ராஜ்பவனில் அமைச்சர் பொன்முடி பதவியேற்பு நிகழ்வு முடிந்ததும், தேர்தல்பரப்புரைக்குச் செல்கிறேன் என்று ஆளுநர் ரவி அவர்களிடம் தெரிவித்து வாழ்த்துப் பெற்றுத்தான் புறப் பட்டேன். அந்தப் பதவிக்குரிய மாண்பினை தி.மு.க மதிக்கிறது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைவிட, நியமனப் பதவியான ஆளுநர் பதவிக்கு அதிகாரம் கிடையாது என்பதையும், ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதிலும் தி.மு.க எப்போதும் உறுதியாக இருக்கிறது.
கேள்வி 19 : நீதிமன்றத்தின் ஒரு உத்தரவைத் தொடர்ந்து தாங்கள் ஆளுநருடன் சேர்ந்து அமர்ந்து தேநீர் அருந்தியபடி உரையாடினீர்கள். எதைப் பற்றி இரு வரும் விவாதித்தீர்கள்? அந்த விவாதம் பயனளித்ததா?
உச்சநீதிமன்ற உத்தரவினால்தான் அமைச்சர் பொன் முடியின் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. தி.மு.க சட்டரீதியாக இதனை சாதித்தது. நீதிமன்ற உத்தரவை யேற்று ஆளுநரும் செயல்பட்டார். அந்த வகையில், அன்றைய நிகழ்வு சுமூகமாகவே இருந்தது. அதிகார வரம்பிற்குட்பட்டு சட்டரீதியாக செயல்படும் எந்த நிகழ்வும் சுமூகமாகத்தான் இருக்கும்.
கேள்வி 20 : இன்றைய தேர்தல் காலக்கட்டத்தில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருவது போலவே வாக்காளர் களுக்கு பணம் பொருள் வழங்குவது போன்ற முறை கேடுகளும் நடப்பது இயல்பாகிவிட்டது. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறவுள்ள தேர்தல் பற்றி தங்கள் கருத்து?
பாரபட்சம் அற்ற முறையில் தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்பதே எங்களது எண்ணம் ஆகும்.
கேள்வி 21 : பேனா வடிவில் கலைஞருக்கு கடலில் நினைவுச் சின்னம் அமைப்பது தங்கள் நீண்ட கால கனவாகவே இருந்தது. உயர்நீதிமன்றமும் ஒன்றிய சுற்றுச் சூழல் அமைச்சகமும் அனுமதியளித்து விட்ட நிலையில் அந்தத் திட்டத்தைக் கைவிட தாங்கள் முடிவெடுத்தது ஏன்?
கலைஞர் நூற்றாண்டு தொடங்கி ஏறத்தாழ இந்த ஓராண்டு காலத்தில் சென்னையில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், திருவாரூரில் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் கோட்டம் உள்ளிட்ட பல நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், மெரினா கடற் கரையில் அண்ணாவுக்குப் பக்கத்தில் கலைஞர் ஓய்வு கொள்ளும் இடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நினை விடத்தை அமைத்திருப்பதுடன் நவீனத் தொழில் நுட்பத்திலான கலைஞர் உலகமும் உருவாக்கப்பட்டுள்ளது. கலைஞரின் புகழைப் போற்றும் வகையில், மக்களுக்குப் பயன்படும் வகையிலும் உரிய நேரத்தில் கலைஞருக்கான நினைவுச் சின்னங்கள் ஒவ்வொன்றாக அமைக்கப்படும்.
கேள்வி 22 : பல முன்னோடியான மக்கள் நலத் திட்டங்களை அறிவித்துள்ளீர்கள். மக்கள் மனதில் காலத்தால் அழியாத நினைவாக நிலைத்திருக்கக் கூடிய திட்டமாக அவற்றுள் எதைக் குறிப்பிடுவீர்கள்? உங் களைப் பொறுத்தவரை நீங்கள் அறிவித்துள்ள திட்டங் களுள் மிகச் சிறப்பானது எது?
திராவிட மாடல் அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றுமே மக்களால் என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் திட்டங்கள்தான். காரணம், அந்தத் திட்டங்கள் மக்களுக்கு நேரடிப் பயன் தந்து, அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத் திற்குத் துணை நிற்கிறது. இந்தியாவுக்கே முன்னோடித் திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நகரப் பேருந்துகளில் மகளிருக்கான விடியல் பயணம், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்றவை முதன்மையானத் திட்டங்கள்.
கேள்வி 23 : மாறிவரும் தற்காலச் சூழ்நிலையில் கொள்கை அரசியல் நீடித்து நிலைக்கும் என்று நம்புகிறீர்களா? அதன் அவசியம் குறித்து தங்கள் கருத்து என்ன?
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான சமூக நீதி, சுயமரியாதை, மொழியுணர்வு உள்ளிட்டவை எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானவையே. அவற்றை நடைமுறைப்படுத்துவதில் காலத்திற்கேற்ற சில மாறுதல் கள் தேவைப்படுவதும், அதற்கேற்ப கொள்கைகளை வடிவமைப்பதும் கொள்கை சார்ந்த அரசியல் இயக்கங் களின் தேவையாக உள்ளது. எடுத்துக்காட்டாக, சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் அரசுப் பணிகளுக் காகக் கொண்டு வரப்பட்ட வகுப்புவாரி இடஒதுக்கீடு, காலத்திற்கேற்ப வளர்ந்து தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியில் 69% என நிலைப்பெற்றது.
அது போல ஒன்றிய அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்கள் ஆகியோருடன் ஓ.பி.சி.க்கான 27 விழுக்காடு இடஒதுக்கீடு பிரதமர் வி.பி.சிங் காலத்தில் கொண்டு வரப்பட்டது. இன்றைய சூழலில் தனியார் துறையில் அனைத்து சமுதாயத்தினருக்குமான சம வாய்ப்பை வலியுறுத்தி இடஒதுக்கீடு என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. ஆகவே அடிப்படைக் கொள்கை நிலையானது. அவசிய மானது. எந்தக் காலமாக இருந்தாலும் கொள்கை அரசியல் தான் நிலைக்கும், நீடிக்கும். மற்றவை தற்காலிகமானவையே.
கேள்வி 24 : இன்றைய புதிய தலைமுறை இளைஞர் களிடையே ஒரு குழப்பமான மனநிலையைக் காண முடிகிறது. வாக்களிக்கும் கடமை குறித்து ஒரு தெளிவான புரிதல் அவர்களிடம் இல்லை. அரசியல் களத்தில் புதிய இளைஞர்களான உதயநிதி, விஜய், அண்ணாமலை போன்றவர்களால் அவர்களைப் பக்குவப்படுத்த இய லாதா? சமுதாய விழிப்புணர்வை இவர்களால் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உண்டா?
தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரான உதயநிதி அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு திராவிட இயக்கக் கொள்கைப் பயிற்சிப் பாசறை நடத்தி அரசியல்-சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தி.மு.க. இதை ஒவ்வொரு தலைமுறையிலும் மேற்கொண்டு வருகிறது. இளை ஞரணிப் பொறுப்பை நான் ஏற்றிருந்த காலத்திலும் இது போன்ற பயிற்சி வகுப்புகள் பல மாவட்டங்களில் நடைபெற்றன. வரலாற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லித் தரவேண்டும். உண்மைகளைப் புரிய வைக்கவேண்டும். அதை தி.மு.க. எப்போதும் முன்னெடுக்கும். மற்ற கட்சிகள், இயக்கங்களின் செயல்பாடு பற்றி நான் சொல்வது சரியான தாக இருக்காது.
கேள்வி 25 : தமிழ்நாட்டின் முதலமைச்சராக உங்கள் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களாக எவற்றைக் குறிப்பிட விரும்புவீர்கள்?
காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த நாள், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின் அடிப்படையில் பணி ஆணைகளை வழங்கிய நாள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைத் தொடங்கி வைத்த நாள், நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்த நாள் – உள்ளிட்ட மறக்க முடியாத பல தருணங்கள் உள்ளன.
கேள்வி 26 : அனுசரித்துப் போகும் குணமும் பரந்த மனப்பான்மையும் கண்ணியமும் கொண்ட அரசியல் தலைவர்களுள் ஒருவராக விளங்குபவர் தாங்கள். தங் களை எதிரியாக கருதுபவர்களையும் சந்தித்து உரையாடத் தயங்காதவர். ஒரே மேடையில் அரசியல் எதிரிகளைச் சந்தித்து நேருக்கு நேர் விவாதிக்க அஞ்சாதவர். தாங்கள் கடைப்பிடித்து வரும் நற்பண்புகள் பயனளிக்கின்றனவா?
அரசியல் காரணங்களுக்காக மாறுபட்டிருக்கலாமே தவிர, எவர் மீதும் எப்போதும் எனக்குத் தனிப்பட்ட பகை கிடையாது. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் பதவி ஏற்ற போது சென்னை மேயராக இருந்த நான் அந்த நிகழ்வில் பங்கேற்றேன். சுனாமி நிவாரண நிதியை அவரிடம் நேரில் வழங்கினேன். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அங்கு சென்று உடல்நலன் குறித்து கேட்டறிந்தேன். அதுபோலவே எல்லா அரசியல் தலைவர்களிடமும் பழகுவதை வழக்கமாகக் கொண்டி ருக்கிறேன். பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிடத் தலைவர்கள் கடைப்பிடித்த பண்பைத்தான் நானும் கடைப்பிடிக்கிறேன்.
கேள்வி 27 : 2ஜி ஒளிக்கற்றை பற்றிய வதந்திகள் நிலவி வந்த சூழலிலும் முதலமைச்சர் வேட்பாளராக தாங்கள் அறிவிக்கப்பட்டிருந்தால் 2016இல் திமுக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம் என்று சிலர் கருதுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் ‘ஹாட்ரிக்’ என்ற பெருமை தங்களை வந்தடையு மல்லவா? 2026இல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்தும் தங்கள் எதிர்பார்ப்புகள் என்ன?
இப்படி இருந்திருந்தால், அப்படி இருந்திருந்தால் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. கடந்த 2019, 2021 நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றதுபோல இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று ஹாட்ரிக் எடுப்போம். நல்லாட்சியைத் தொடர்ந்து வழங்கி அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தல் களத்திலும் நிச்சயம் தி.மு.க. கூட்டணி வெல்லும்.