தமிழ்நாட்டில் நவம்பர் 24 வரை பரவலாக மழை பொழியும்

Viduthalai
2 Min Read

சென்னை, நவ. 21- தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும். சில மாவட்டங் களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று (20.11.2023) கூறியதாவது: 

குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதி களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாகவும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. வரும் 24ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று (நவ. 21) திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 23ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட் டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். வரும் 24ஆம் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின்சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும். அதிக பட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். கடந்த அக்.1 முதல் நவ.20-ம் தேதி வரையிலான வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 25 செ.மீ.மழை கிடைத்துள்ளது. இந்த கால கட்டத்தில் வழக்கமாக 30 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *