பி.ஜே.பி. வெற்றி பெற்றால் ஜனநாயகம் இருக்காது
நாடே சிறைச்சாலையாக மாறும்!
இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது
மாலை மலருக்கு தமிழர் தலைவர் பேட்டி
பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது – நாடே சிறைச்சாலையாக மாறி விடும் என்று “மாலை மலர்” ஏட்டுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி (15.4.2024) வருமாறு:
தமிழ்நாட்டில் அதிக தேர்தலை பார்த்தவர் என்ற சிறப்பு திராவிடர் கழக தலைவர்
கி.வீரமணிக்கு மட்டுமே உண்டு. 1952-ஆம் ஆண்டு தேர்தல் முதல் தற்போதைய தேர்தல் வரை கடந்த 72 ஆண்டுகளாக அவர் 18-ஆவது முறையாக நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கிறார்.
இந்த 18 தேர்தல்களில் அவருக்கு கிடைத்துள்ள அனுபவங்கள் ஏராளம். கட்சிகளின் தனித்துவம், கூட்டணிகள் உருவான விதம், கூட்டணிகளால் ஒவ்வொரு கட்சிக்கும் ஏற்பட்ட லாப-நஷ்டங்கள், கட்சிகள் சந்தித்த எதிர்பாராத தோல்விகள், புயல் வேகத்தில் வந்துவிட்டு மாயமான கட்சிகள் என்று அத்தனை விஷயங்களையும் தனது கைவிரல் நுனியில் வைத்திருக்கிறார்.
இந்த தேர்தல் எப்படி இருக்கும் என்று அவர் “மாலைமலருக்கு” சிறப்பு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
39 தொகுதிகளிலும்
தி.மு.க. கூட்டணி வெல்லுமா?
கேள்வி:- தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி வலுவாக இருந்தபோதும், 39 தொகுதிகளைக் கைப் பற்ற இயலாது என்று கருத்துக் கணிப்பு வருகிறதே, இது பா.ஜ.க.வின் வளர்ச்சியைக் காட்டுகிறதா?
பதில்:- பொதுவாக கருத்துக் கணிப்புகளை நான் எப்பொழுதும் நம்புவதில்லை, நமக்கு சாத கமாக வருகின்ற கருத்துக் கணிப்புகளாக இருந் தாலும். அது சரியான முறையல்ல. ஏனென்றால், அது கருத்துக் கணிப்பு அல்ல. கருத்துத் திணிப்புதான். கருத்துத் திணிப்பு என்ற சொல்லை நான்தான் முதன் முதலாகப் பயன்படுத்தினேன்.
நான் இதுவரை 17 தேர்தல் களைப் பார்த்திருக்கின்றேன். கருத்துக் கணிப்பு என்பது சில ஆண்டுகளுக்கு முன்புதான் உரு வான ஒன்றாகும். அந்தக் கருத்துக் கணிப்பை எதை வைத்து செய் கிறார்கள் என்றால், ஒரு குறிப்பிட்ட சில பகுதிகளில் எடுத்துச் செய்கிறார்கள். அது ஒன்றும், அறிவியல் பூர்வமான முழுவாய்ப்பு என்றும் சொல்ல முடியாது.
இரண்டும் இரண்டும் நான்குதான் என்று எல்லா இடங்களிலும் தெளிவாகச் சொல்லக்கூடிய கருத்துக் கணிப்பு கிடையாது.
ஒவ்வொருவரும், அவரவருக்குச் சாதகமாக, உளவியல் தாக்குதலுக்கு ஓர் உபாயமாக, ஒரு கருவியாக அதனைப் பயன்படுத்துகிறார்கள். மக்கள் கணிப்புதான் மிகவும் முக்கியமானதாகும். அப்படிப் பார்க்கின்றபோது, 2014-ஆம் ஆண்டில், இளைஞர்களுக்கு மத்தியில், மோடிக்கு இருந்த மவுசு, இப்போது இருக்கிறதா? என்றால், இல்லை என்பதுதான் பதில். அதுமட்டுமல்ல, ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசின் பல்வேறு செயல்பாடு களைப் பற்றி மக்கள் தெளிவாக இன்றைக்கு உணர்ந்திருக்கிறார்கள்.
இவை எல்லாவற்றையும்விட, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் நடைபெறு கின்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினுடைய சாதனைகள், இந்திய அளவிலும், உலக அளவிலும் பாராட்டப்படக் கூடிய அளவில் இருப்பதால், பா.ஜ.க.வைத் தவிர, மற்றவர்களால் அது குறை சொல்லப்பட முடியாத அளவிற்கு இருக்கிறது. நிச்சயமாக மக்களைப் பார்த்து, மக்கள் நாடியைப் பிடித்துப் பார்க்கக் கூடிய அளவில் இருக்கக்கூடியவர்கள் நாங்கள். எங்களைப் பொறுத்தவரையில், இது கருத்துத் திணிப்புகள் அல்ல. மக்கள் கணிப்பு என்பதுதான் மிகவும் முக்கியமானது.
யார் வரக் கூடாது என்பது தான் முக்கியம்!
கேள்வி:- இந்தியா கூட்டணி முறையாக ஒருங் கிணைக்கப்படாததால், மீண்டும் பா.ஜ.க.விற்கான சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கிறீர்களா?’
பதில்:- முதலாவதாக, இந்தக் கேள்வியின் முன் பகுதியே தவறாகும். இந்தியா கூட்டணி முறை யாகத்தான் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. பல கட்டத் தேர்தல் இருக்கின்ற காரணத்தாலும், பல்வேறு கட்சிகள் அந்தந்த மாநிலத்திற்கேற்ப சூழ்நிலை, மாநிலக் கட்சிகள், அகில இந்திய கட்சிகள் ஒருங்கிணைப்பு என்று வருகின்ற நேரத்தில், அதில் சில, பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும்.
ஆனால், அதையும் தாண்டி, அதற்குத்தான் ஆரம்பத்திலேயே நம்முடைய முதலமைச்சர் ஒரு பார்முலாவை அழகாகச் சொன்னார்.
“யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக் கூடாது என்பதுதான்” இதனுடைய அடிப்படைத் தத்துவமாகும்.
அந்தக் கோணத்தில் பார்க்கும் போது, உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 நாடாளுமன்றத் தொகு திகள். அந்த மாநிலத்தில் பா.ஜ.க. 80 தொகுதிகளில் வெற்றி பெற முடியாது. முன்பு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. எப்படி வெற்றி பெற்றது என்றால், காங்கிரஸ் கட்சி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, இன்னும் பிற ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரின் ஒற்றுமையின்மையால் வந்தது. இப்பொழுது அது தலைகீழாக மாறியிருக்கிறது. அங்கே சுமூகமான சூழல் நிலவுகிறது. அதே போன்றுதான், பீகாரிலும். குஜராத்தில்கூட பா.ஜ.க.விற்கு 26 இடங்கள் கிடைக்காது என்கிற நிலைதான். ஆகவே, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு சரியாகத்தான் இருக்கிறது.
வேண்டுமானால், கேரளாவைச் சொல்லலாம்; மேற்கு வங்காளத்தில் அப்படி இருக்கிறதே என்று நீங்கள் சொல்லலாம். அங்கே யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ, அவர்கள் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பதில்தான் போட்டி.
எங்களால் தோற்கடிக்க முடியும் என்று ஒருவர் சொல்கிறார்; உங்களோடு சேர்ந்தால், அது பாதிக் குமோ என்று அவருக்குச் சந்தேகம் இருக்கிறது. அதே போன்றுதான் இன்னொருவருக்கு அந்த சந்தேகம் இருக்கிறது. முதலில் சொன்ன பதிலிலேயே, இந்தக் கேள் விக்கும் பதில் அடங்கியிருக்கிறது. ஆகவேதான், பல கட்டங்களாக நாடாளு மன்றத் தேர்தலை. ஜூன் முதல் வாரம் வரைக்கும் இழுத்திருக் கிறார்கள். நிலைமை நிச்சயமாக மாறும்.
கடைசி நேரத்தில் பல வாய்ப்புகள் உண்டு. அந்த வாய்ப்புகள் எதிர்க் கட்சிகளுக்குப் பலனாக இருக்குமே தவிர, ஆளுங்கட்சியான பா.ஜ.க.விற்கு நிச்சயமாக இருக்காது.
பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருவதால் என்ன பலன்?
கேள்வி : தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அடிக்கடி வருவதன்மூலம் பா.ஜ.க.வால் கால்பதிக்க முடியுமா?
பதில்:- நல்ல கேள்வி. அடிக்கடி தமிழ் நாட்டிற்குப் பிரதமர் மோடி வருவதன் மூலமாக. எதிர்க்கட்சிகள் பலமாக காலூன்றும்.
கேள்வி:- பிரதமராக மோடி மீண்டும்வந்தால்…?
பதில்:- ஜனநாயகம் என்பது தேடப்பட வேண் டிய ஒன்றாகிவிடும். பெரும்பாலான எதிர்க்கட்சியினர் யாரும் வெளியே இருக்கமாட்டார்கள். தனித்தனி சிறைச்சாலைகளுக்குப் பதிலாக, நாட்டையே சிறைச் சாலையாக ஆக்கக் கூடிய நிலைமை – வரும். ஒரே தேர்தல். ஒரே நாடு என்று சொல்லக்கூடிய ஒற்றை அரசு இருக்கும். அதில் இவரே அதிபராக, ராஜாவாக எப்பொழுதும் இருக்கக் கூடிய அளவில் இருப்பார். எதிலுமே சட்டப் போர்வையைப் போர்த்திச் செய்வதுதான் மோடியினுடைய ஒரு புதிய டெக்னிக், அரசியலில் நான் எந்த ஆட்சியையும் கவிழ்க்கவில்லையே. நாங்கள் 356 பிரிவைப் பயன்படுத்தவில்லையே என்று சொல்வார். ஆனால், அதைவிட மோசமான செயலை செய்வார்.
அரசியல் சட்டத்துக்குப் பதில் மனுதர்மமே!
இந்தியாவில் ஒரே ஒரு கட்சிதான் இருக்கும். அது அவருடைய கட்சியாக இருக்கும். அவரே ஆளுங்கட்சி; அவரே எதிர்க்கட்சி. ஏற்கெனவே ஒரு பாணியை வைத்திருக்கிறார் அவர். தேர்தலில் வெற்றி பெற்றாலும் அமைச்சர்கள்.. தோற்றாலும் அமைச்சர்கள் என்கிற ஒரு புதிய தத்துவத்தை நாட்டிற்கே தந்தவர் மோடி.
ஆகவே, இந்த விளைவுகளை யெல்லாம் நாம் எதிர்பார்க்க வேண்டும் ஆனால், இந்தத் தேர்தலில் இந்தத் தொல்லைகள் எல்லாம் இருக்காது. ஏன்? எங்கு? என்று கேள்விகள் கேட்கக்கூடிய எதிர்க் கட்சிகள் இருக்காது; தேர்தல் செலவுகளும் இருக்காது! மோடி மீண்டும் பிரதமரானால், இந்திய அரசமைப்புச் சட்டம் இருக்கின்ற இடத்தில் மனு தர்மம் சட்டமாக ஆகும். அதன்படி ஆட்சி நடைபெறும்.
-இவ்வாறு கி.வீரமணி கூறினார்.
நன்றி: ‘மாலைமலர்’, 15.4.2024