நரேந்திர மோடி ஆட்சியில் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளில் மோசடி நடைபெற்றுள்ளது. இதில் 53 ஆயிரம் கோடி ரூபாய்வரை ஏமாற்றிய 23 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட் டனர். அதில் நிரவ் மோடி, மேகுல் சோக்ஸி ஆகிய இருவரும் ஏறத்தாழ 23 ஆயிரம் கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டு ஓடிப்போனார்கள். இவர்கள் இருவரும் நரேந்திர மோடிக்கு மிக மிக நெருக்கமானவர்கள்.
கடந்த 30 அக்டோபர் 2023 கணக்கீட்டின்படி 2014 முதல் 2023 வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் – வாராக்கடன் என்று கணக்கு வைக்கப்பட்ட மொத்தத் தொகை ரூபாய் 66 லட்சத்து 50 ஆயிரம் கோடி. இதில் 14 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் பெரும் தொழில் அதிபர்கள் வாங்கிய கடன் ரூபாய் 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது மொத்த வாராக்கடனில் 48.36 சதவீதமாகும்.
இதன்மூலம் பாஜக ஆட்சியில் வங்கிகளிடமிருந்து கார்ப்பரேட் பெருமுதலாளிகள் வாங்கிய கடன் வாராக் கடனாகக் கருதப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது கார்ப்பரேட்டுகளுக்கு மோடி அரசு செய்த சலுகை. முதலீட்டு இழப்பை ஈடுகட்ட ஒன்றிய பாஜக அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூபாய் 3 லட்சம் கோடி நிதி வழங்கியிருக்கிறது. இத்தகைய சீர்கேடான நிர்வாகத்தின் காரணமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 27இல் இருந்து 12 ஆகக் குறைந்துவிட்டது பெரும் வேதனை.