அண்ணாவின் எழுத்தோவியம்

viduthalai
30 Min Read

அண்ணாவின் எழுத்தோவியம்
ஜனநாயகச் சர்வாதிகாரி! : மேனாட்டுச் சர்வாதிகாரிகள் – ஏதென்ஸ் நகரில் ஒரு வழக்கு!

ஞாயிறு மலர்

தம்பி!
“சர்வாதிகார ஆட்சி’ என்று கூறினாலே எல்லோருக்கும் ஒரு வெறுப்பு, பயம், உடனடியாகத் தோன்றிவிடுகிறது. ஏன் வெறுப்பும் பயமும் இருக்க வேண்டும் என்று விளக்கிக் கூற, வாதாட, காரணம் காட்டக்கூடத் தெரியாமலிருக்கும். ஆனால் சர்வாதிகார ஆட்சி கூடாது என்று மட்டும் அனைவரும் கூறுவர். எதை எப்படி எப்போது செய்வது என்பதுபற்றி, மற்றவர்களிடம் கலந்து பேசவேண்டிய கட்டாயமின்றி, மாற்று யோசனைகளை அலசவேண்டிய அவசியமின்றி, ஒரு புதிய வரி போடுவதாயினும் சட்டம் இயற்றுவதாயினும், ஊர் அமைப்பதாயினும், படைதிரட்டுவதானாலும், போர் தொடுப்பதானாலும், தொழிற்கூடம் அமைப்பது என்றாலும், எந்தக் காரியம் செய்வதானாலும் தன் இச்சையாகச் செய்திடும் நிலையைப் பெற்று, அந்த நிலையினின்றும் தன்னை நீக்கத்தக்க சக்தி ஏதுமின்றி அழித்தொழித்து, கேட்பாரற்ற நிலையில் எல்லா நடவடிக்கைகளையும் செய்திடுபவராகிவிடும் நிலைதான் சர்வாதி காரம்; எல்லா அதிகாரமும் ஒரே இடத்தில் குவிந்திருக்கும் நிலை!

இது ஏன் ஒருவிதமான வெறுப்புணர்ச்சி யையும் அச்சத்தையும் மூட்டிவிடுகிறது?
ஒவ்வொருவருக்கும், குறிப்பிட்ட அளவில் அறிவாற்றலும் செயல் திறனும் உண்டு என்ற நம்பிக்கை இருக்கிறது.
எதையும் செய்திடாமல்கூட இருக்கக் கூடும் – வாய்ப்புத் தேடிக்கொள்ளாமலும் இருந்துவிடக்கூடும் – ஆனால் முடிவு, அதற்கேற்ற அறிவாற்றல் உண்டு என்ற நம்பிக்கை மட்டும் எவருக்கும் இருக்கத்தான் செய்கிறது.

எனவே, ஒருவன் கிளம்பி, உச்சியில் உட்கார்ந்து கொண்டு, நீவிர் ஏதும் செய்யத் தெரியாதவர்! என்ன செய்ய வேண்டும் என்பதும் அறியாதவர்! உமக்கானதனைத்தையும் நானே செய்வேன்; எனக்கே, தெரியும் உமக்காக என்னென்ன செய்யவேண்டும் என்பது…! என் அறிவாற்றல், உம்மில் எவருக்கும் இல்லை! எனவே, என்னிடம் விட்டுவிடுங்கள் எல்லா அலுவல்களையும்; நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறும்போது, தமது உரிமை பறிக்கப்படுகிறது என்ற எண்ணமும், தமது தன்மானம் அழிக்கப்படுகிறது என்ற எரிச்சலும், ஏற்பட்டுவிடுகிறது – என்ன தலைக்கனம் இவனுக்கு! எல்லாம் தெரியுமாம் இவனுக்கு – ஏதும் அறியோமாம் நாம்! நாமென்ன, இவன்போன்றே ஆறறிவுடையோரல்லவா! ஆற்றல் என்பது இவனொடு நின்றுவிடுவதோ! நாம், வெறும் மரக்கட்டைகளோ! நாம் வெறும் பிறவிகள்! இவன் ஆளப்பிறந்தவனோ!! – என்றெல்லாம் பேசிடத் தோன்றுகிறது.
அவன் வீரன்! – என்று கூறினால், நான் என்ன கோழையா? என்று கோபித்துக் கேட்டிடச் சொல்கிறது உணர்ச்சி.

அவன் அறிவாளி! – என்று கூறினால், நான் முட்டாள் அல்ல! என்று கொதித்தெழுந்து கூறத் தோன்றுகிறது.
அவ்விதமின்றி, உனக்காக அவன்! உனக்கு வேறு அலுவலிருப்பதால், அவன்! உன் அனுமதி பெற்று, அவன் உன் காரியத்தை, உன் விருப்பமறிந்து, உன் யோசனைப்படி செய்து கொடுக்க, அவன்! – என்று கூறினால், கேட்பதற்குக் களிப்பும் பெருமையும் ஏற்படுகிறது.

“எல்லாம் செய்திடுபவன்’ எதைச் செய்திடுவானோ! அவன் செய்திடுவதிலே, எதெது கேடு தருமோ என்று எண்ணும் போது, அச்சம் ஏற்படுகிறது. எதையும் செய்திடுவோனாகிவிட்ட பிறகு, கேடு பல செய்து, “இது ஆகுமோ’ என்று கேட்டிடின், “யார் நீ இதைக் கேட்க? நானன்றோ காரியமாற்ற வேண்டியவன்! காரணம் காட்டவா, இருக்கிறேன்!’’ என்று கொக்கரித்துக்கொடுமை செய்திடின், எதையும் செய்திடும் இடமேறிவிட்டவனிடமிருந்து, எப்படித் தப்பித்துக் கொள்வது? – என்று எண்ணும்போது, அச்சம் எழத்தானே செய்யும்.
அடுப்புக்குள் இடும் நெருப்புக்கும், அடுப்புக்குத் தேவை என்பதற்காக கூரையில் செருகிவைக்கும் கொள்ளிக் கட்டைக்கும், வித்தியாசம் இல்லையா?
சர்வாதிகாரம் – என்றவுடன் கொதித் தெழும் போக்கு எத்துணைப் பரவலாகச் சமுதாயத்திலே இருப்பினுங்கூட, இன்று உலகிலே, பல்வேறு நாடுகளிலே, சர்வாதி காரிகளின் அமுல் இருந்து வருகிறது.

சில சர்வாதிகாரிகள் பத்தாண்டு, இருபதாண்டுகளாகக் கூடப் பீடத்தில் உள்ளனர்.

நாட்டுக்கு வெளியிடத்திலிருந்தோ, உள்ளேயிருந்தோ பேராபத்து ஏற்பட்டு விடக்கூடும் என்று கிலி கொள்ளும்படி மக்களை ஆக்கிவைத்துவிட்டு, “எல்லா அதிகாரமும் என்னிடம் இருக்கட்டும், ஆபத்தைப் போக்க!’ என்று பேசிச் சர்வாதிகாரிகளானோர், “இனி ஆபத்து இல்லை! சர்வாதிகாரம் வேண்டாம்!’ ஜனநாயகம் மலரட்டும்! என்று அறிவிப்பது, மிகமிகக் கடினம்.
ஸ்பெயின் நாட்டிலேயும், போர்ச்சுகல் நாட்டிலேயும், சர்வாதிகாரிகளாகிவிட்ட பிரான்கோவும், சலாசரும் என்றென்றும் சர்வாதிகார முறைதான் இருந்திட வேண்டும் என்று அந்த நாட்டு மக்கள், எண்ணிக் கிடந்திடவேண்டிய முறையில், சூழ்நிலையை உண்டாக்கி வைத்துவிட்டனர்.
சர்வாதிகாரம் – ஜனநாயகம் சாதிக்கா தவைகளைச் சில வேளைகளில் சாதித்தளிக் கக்கூடும்.

வெளிநாட்டானை விரட்டியும், உள்நாட் டிலே கொடுமையாளரை அடக்கியும் பெரும் வெற்றி, புதிய சமுதாய அமைப்பு, தொழில் வளர்ச்சி, செல்வவளர்ச்சி என்பனபோன்ற வெற்றிகள், ஒளிவிடத்தக்க விதமான ஆட்சி நடத்திடக்கூடும்.

ஆனால், அங்கு ஒன்று அழிக்கப்பட்டு விடுகிறது – மனிதனின் சுய சிந்தனை. சிந்திக்கும் திறனை இழந்துவிட்ட பிறகு, எது வெற்றி, எது வேதனை? எது முற்போக்கு, எது பிற்போக்கு? என்பதைக் கண்டறியும் ஆற்றலும் அற்றுப் போய், அதை எடுத்துக்காட்டக்கூட, ஆட்சியினரை எதிர்பார்த்துக்கிடந்திட வேண்டியவராகின்றனர்.
இட்லரின் ஜெர்மனியில் இந்த நிலை தான் கப்பிக் கொண்டிருந்தது.

இட்லர் பார்த்து, இதுதான் இனிக்கும் என்றால், “ஆம்‘ என்று நாட்டினர் அனைவரும், கூறினர்; ஒரு சிலருக்கு, “கசப்பு’ தெரிந்தாலும், அது தமது குற்றம், பொருளின் குற்றமல்ல என்று கருதினர்.
அந்த அளவுக்கு மக்களின் எண்ணத் தைக் கட்டிப்போட்டு வைத்துவிட இட்லரின் முறைகள் மெத்தப் பயன்பட்டன.
இருபத்து நான்கு மனிநேரமும், இட்லரின் பிரச்சார இயந்திரம் – பேச்சாளர் – ரேடியோ – பத்திரிகை – கலைத்துறை மக்களுக்கு எண்ணங்களை உருவாக்கித் தந்துகொண்டிருந்தன.
தொடர்ந்து திறமையுடன் இந்த முறை கையாளப்பட்டு வந்ததால், மக்கள், எதைப் பற்றியும் தாமாக எண்ணிப் பார்த்திட முடியாத நிலையைக்கூடப் பெற்றுவிட்டனர்.
தம்பி! எண்ணிப் பார்ப்பது இயல்பு. அந்தத் திறம் வளரவும், தெளிவும் பயனும் ஏற்படவும், எண்ணத்திலே வளர்ச்சி காணவும், எண்ணிக் கொண்டு மட்டும் இருந்தால் போதாது!
தாயின் மடியிலே தவழும் குழந்தைக்குக் கூட, ஒரு பொருளைக் காணும்போது, எண்ணம் எழத்தான் செய்யும். பசிக்கிறது என்ற உணர்வு, புசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்காமலிராது! குழந்தையின் அழுகைதான் அதற்கான அறிவிப்பு.

ஏற்படும் எண்ணத்தை எடுத்துக்கூற வழி ஏற்பட வேண்டும், கூறுவதைக் கேட்டிடத் தன் போன்றோர் இருக்க வேண்டும், அவர்கள் அதைக் கேட்டுத், தமது கருத்தினைக் கூற வேண்டும். இரு கருத்துக்களும் ஒன்றோடொன்று தழுவியோ, மோதியோ, புதுப்புது பொலிவு பெறவேண்டும் – எண்ண வளர்ச்சி அப்போதுதான் ஏற்படும்.
கருத்து வளர்ச்சிக்கு, பேச்சு உரிமை இன்றியமையாததாகிறது.
சர்வாதிகார முறை, இந்த உரிமைகளை மறுத்துவிடுகிறது.

சமுதாயத்துக்கு இதன் பயனாக ஏற்படும் நஷ்டம் சர்வாதிகாரி பெற்றளிக்கும் எத்த கைய வெற்றியும் ஈடுசெய்ய முடியாததாகும்.
உள்ளத்தில் தோன்றுவதை எடுத் துரைப்பதும், உண்மை யைக் கண்டறிய ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்வதும், சர்வாதிகாரத்தை ஒழித்துக்கட்டும் அறிவாற்றலைக் கெடுத்துவிடும் என்ற அச்சம் சர்வாதிகாரிகளுக்கு.

எனவே, அவர்கள், தாக்கப்படுமுன் தாக்கிவிடவேண்டும் – முதல் தாக்குதல் நம்முடையதாக இருக்க வேண்டும் – கொடுக்கும் தாக்குதல், அவனைப் பிறகு எழுந்து நின்று, திருப்பித் தாக்கிடும் சக்தி யில்லாதவனாக்கிடத்தக்கதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுவிடுகின்றனர். கொடுமை புரியத் துளியும் கூசாத தன்மை சர்வாதிகாரிக்கு ஏற்பட்டு விடுகிறது.
தம்பி! சட்டம் வேண்டாம், என் சொல் போதும்! வழக்கு மன்றம் வேண்டாம், என்முன் கொண்டுவந்து நிறுத்துங்கள் போதும்! என்று கூறிக் கொடுமை அப்பட்டமாகத் தெரியும்படி நடந்துகொள்ளும் சர்வாதிகாரிகள் உண்டு.

சட்டம், வழக்குமன்றம், வழக்கறிஞர், நீதிபதி, விசாரணை – எனும் முறைகளை அப் படியே வைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் தன் இச்சைப்படி ஆட்டிவைக்கும் “முறை’ யைப் புகுத்தி, சர்வாதிகாரம் செய்வோரும் உண்டு.

முன்னவரைவிட இரண்டாமவர், மிக்க ஆபத்தை மூட்டுபவராவார்.
“என்ன அண்ணா! ஏதோ வழக்குக் குறித்துக் கூறப்போவதாகச் சென்றகிழமை கூறினாய்; இப்போது ஏதோ, சாய்வு நாற் காலிக்காரர்போல அரசியல் முறைபற்றிய ஆய்வுரை பேசுகிறாயே,’’ என்று கேட்கிறாயா, தம்பி! வழக்கு மன்றம் நோக்கித்தான் நடக்கிறோம். வழியில் இதைக் கூறினால், போகிற இடம் புரியும் என்பதற்காகச் சொன்னேன்.
“இரண்டமவர்’ என்றேனே, அப்படிப் பட்ட “சர்வாதிகாரி’யின் பிடியில் உள்ள நாடு! அந்த நாட்டு வழக்கு மன்றத்திலே ஒரு வழக்கு நடைபெறுகிறது. காண்போம், வா.
வழக்கு மன்றம், இருக்கவேண்டிய முறைப்படிதான் இருக்கிறது.

பெருநெருப்பு நீதிபதியாகவும், கொடு வாள் போலீஸ் அதிகாரியாகவும், அரிவாள் வழக்கறிஞராகவும் இல்லை!
சட்ட நுணுக்கம் தெரிந்து, நீண்டகாலம் வழக்காடித் திறம்பெற்ற பழுத்த அனுபவ சாலிதான், நீதிபதி இருக்கையில் அமர்ந்தி ருக்கிறார்.
அவருடைய சட்ட அறிவு நாடு அறிந்ததாகும். பல சிக்கலான வழக்குகளிலே, நல்ல தீர்ப்புத் தந்து, நற்பெயர் எடுத்தவர்.
மற்ற மற்றவரும் அதுபோன்றே – கற்றறி வாளர்.

நீதிபதி அமருகிறார். மற்றவர் வந்தமருகின்றனர். போலீஸ் அதிகாரி நின்றுகொண்டிருக்கிறார்.
நீதி : கைதியைக் கொண்டுவா.
(போலீஸ் அதிகாரி வணக்கம் செலுத்தியபடி)

போலீ : அங்ஙனமே, பெருந்தகையே! (போலீஸ் அதிகாரி வெளியே செல்கிறார்) (நீதிபதியின் மேஜைமீதுள்ள டெலிபோன் மணி ஒலிக்கிறது. நீதிபதி டெலிபோனை எடுத்துப் பேசுகிறார்; பேசுபவர் யார் என்று தெரிந்ததும், முகமே மாறிவிடுகிறது; பரபரப்பு அடைகிறார்; எழுந்து நிற்கிறார், மரியாதையுடன் அவர் எழுந்து நிற்பதைக் கண்டு மற்றவர்கள் எழுந்து நிற்கிறார்கள்.)
(தம்பி! நிலைமை புரிகிறதா! அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல், சட்டத்தின் துணையையும் தன் அறிவையும் கொண்டு, வழக்கினை விசாரித்து நீதிகண்டு, தீர்ப்பளிக்கவேண்டிய நிலை பெற்றவர் நீதிபதி.)

ஆண்டியாயினும் ஆறடுக்கு மாடியில் வாழ் சீமானா யினும் அவர் அலட்சியம் காட்டவோ, அச்சம் கொள்ளவோ கூடாது.
அவர் அமர்ந்திருக்கும் இடம், அனை வருக்கும் நியாயம் கிடைக்கச் செய்யும் திருக்கோயில்.
அங்கு அமர்ந்திருக்கும் நீதிபதி, டெலி போன் ஒகேட்டதும், பேசுபவர் யார் என்று பார்க்கிறார்; பேசுபவர் எவர்என்று தெரிந் ததும், பீதி ஏற்படுகிறது. தேவையற்ற முறை யில் பணிந்துவிடுகிறார்.

வழக்கு மன்றங்கள், என்ன போக்கிலே உள்ளன என்பதை நீதிபதியின் நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறதல்லவா?
பயம் பிடித்தாட்டுகிறது நீதிபதியை. அவரைப் பயங்காட்ட எதிரில் வந்துகூட அல்ல – எங்கோ இருந்துகொண்டு – பணிய வைக்கும் அதிகாரம் படைத்தவர் ஒருவர் இருக்கிறார்.
குற்றம் என்ன செய்தான்? யார் கண்ட றிந்து கூறினவர்கள்? சான்றுகள் யாவை? இது குறித்துச் சட்டம் கூறுவது யாது? குற்றவாளி என்பவனுக்காக வாதாட வந்தவர் என்ன கூறுகிறார்? என்ற இவைபற்றி, நீதிபதி அக்கறை காட்ட வேண்டும். அவருக்கு வழிகாட்ட, சட்டம்! ஆனால், சட்டத்தைப் பார்க்கா முன்பே, வேறோர் “சக்தி’ டெலிபோன் மூலம் பேசுகிறது; நீதிபதி நடுங்கி நிற்கிறார்!)

நீதிபதி : (பணிவாக) ஆமாம், மேன்மை தங்கிய பிரபுவே, வழக்கு ஆரம்பமாப் போகிறது. நான் அவன் குற்றவாளி என்று கண்டறிந்து கூறி, அவனுக்கு மரண தண் டனை விதிக்கிறேன் – நிச்சயமாக, விரைவில்.
(டெலிபோனைக் கீழே வைக்கிறார். அமருகிறார். மற்றவர்களும் அமருகின்றனர்.)
(கவனித்தாயா, தம்பி! “வழக்கை விசாரிக் கிறேன்.’ குற்றம் செய்தவன் என்பது எடுத்துக் காட்டப்பட்டு விட்டால், தண்டனை தரப்படும் என்று கூறவில்லை.)
குற்றவாளி என்று கூறுகிறேன்! மரண தண்டனை தருகிறேன்!! என்று அறிவிக் கிறார்.
குற்றவாளி, கூண்டுக்குக் கொண்டுவரப் படப் போகிறான், இதற்குள், அவனுக்கு மரண தண்டனை தந்துவிடுவதாக, நீதிபதி, வாக்களிக்கிறார் – பணிவுடன்.
ஏன்? டெலிபோனில் பேசியவரின் குறிப்பறிந்து நடந்திட வேண்டும் என்று நீதிபதி உணருகிறார்.
தன்னை ஆட்டிப் படைக்கும் அதிகாரம் பெற்ற ஒருவர் இருப்பதை அறிகிறார், அச்சப்படுகிறார்.
ஊருக்காக, உலகத்துக்காக, ஒப்புக்கு ஒரு விசாரணை ஏற்பாடாகி இருக்கிறதேயொழிய, குற்றவாளி என்று கொண்டுவரப்படுபவன் கொல்லப்படவேண்டியவன் – என்பதை டெலிபோனில் பேசும் “மேலவர்’ தெரிவிக்கிறார்.
(அவர் மனமறிந்து நடப்பதற்கே, இவர் நீதிபதியாக இருக்கிறார். நிலைமை புரிகிறதா!)
(பத்திரிகைக்கு குறிப்பெடுத்தனுப்புபவர் ஒருவர், அங்கு இருக்கிறார். அவருடைய மேஜைமீது உள்ள டெலிபோன் ஒலி கிளப்புகிறது.)
குறிப் : பெருந்தகையே! டெலிபோனில் பேச அனுமதி தர வேண்டுகிறேன்.
நீதி : சரி. பேசலாம்.
குறி : வணக்கம்! வணக்கம்! நான்தான்! குறிப்பெடுப்போன். செய்தியா? நாடு கூர்ந்து கவனித்துவரும் பரபரப்பூட்டும் வழக்குத் தொடங்க இருக்கிறது. மிக்க அனுபவம் பெற் றவர், ஆற்றல் மிக்கவர், அரசுக்கு ஆருயிர்த் தோழராக இருக்கும் அறிவாளர், வழக்கை நடத்திக், குற்றவாளிக்கு மரண தண்டனை தரத் தீர்மானித்துவிட்டார். விசாரணையா? இப்போது ஆரம்பமாகப் போகிறது. குற்ற வாளியா? இன்னும் வரவில்லை. போலீஸ் அதிகாரி போயிருக்கிறார், கொண்டுவர. மரண தண்டனை – நிச்சயமாக, நீதி நிலைக்கும் – கட்டாயம்.
(பத்திரிகைக்கு, வழக்கின் முடிவுபற்றி, வழக்குத் தொடங்கு முன்பே, குறிப் பெடுப்போர், செய்தி அனுப்பிவிடும், வேடிக்கையைக் கவனித்தாயா, தம்பி!)
(போலீஸ் அதிகாரி, குற்றவாளியை இழுத்துக் கொண்டு வருகிறார். குற்றவாளி வருகிறான் என்று தெரிந்ததும், நீதிபதி, சுற்று முற்றும் பார்க்கிறார்; பரபரப்படைகிறார்; பயம் கொள்கிறார்.)
போலீ : பெருந்தகையே! இதோ, கைதி.
நீதி : இரு! இரு! பாதுகாப்புப் பலமாக இருக்கிறதல்லவா?
போலீ : ஆமாம், பெருந்தகையே! போலீஸ் படை அதிகப் படுத்தப்பட்டிருக்கிறது. கூரைமீதும் சுவரோரங் களிலும் சுழல் துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளன.
நீதி : கைதியின் கரங்களுக்கு விலங் கிட்டீர்களா…?
போலீ : ஆமாம்…. ஆனால்….
நீதி : ஆனால்… என்ன இழுத்துப் பேசு கிறாய், சொல்! சொல்!
போலீ : கரங்களில் விலங்கு மாட்டப் பட்டிருக்கிறது – பலமான விலங்குகள். ஆனால், என்ன மாயமோ தெரியவில்லை, விலங்குகள் எப்படியோ, கழன்று நழுவிவந்து விடுகின்றன.
நீதி : கண்காணிப்பாக இருக்க வேண்டும்; தெரிகிறதா; அவன் கரத்திலிருந்து விலங்கு கழன்றால், உன் உடலிலிருந்து சிரம் கழன்று கீழே விழும்!
(நீதிபதியின் நடுக்கம்; அவர் பேசக் கேட் டதும் போலீஸ் அதிகாரிக்கு ஏற்பட்டுவிடும் ஒடுக்கம் தெரிகிற தல்லவா? போலீஸ் அதிகாரியை நீதிபதி மிரட்டு வதிலே, நகைச்சுவை காண்கின்றனர், வழக்கு மன்றத்திலுள்ளோர் சிரிக்கின்றனர். அவர் காதுபடப் புகழ்கின்றனர். சிக்கலான வழக்கை விசாரிக்கும் போதுகூட, நகைச்சுவையைக் காட்டிடும் திறனை, நமது நீதிபதி இழந்து விடுவதில்லை, என்கிறார் ஒருவர்.
பேரறிவாளரின் இயல்பே, அதுதானே என்று பாராட்டுகிறார், மற்றொருவர்.
ஏதேது, இதை எல்லாம்கூடப் பத்திரி கையிலே வெளியிட்டு விடுவீர்கள் போலி ருக்கிறதே என்று தூண்டுகிறார், நீதிபதி – ஆசையைக் கேள்வியாக்கிப் பேசிக் காட்டுகிறார்.
ஆமாம்! பத்திரிகையில் வெளிவரும் என்று வாக்களிக்கிறான் குறிப்பெடுப்போன். குற்றவாளி, கூண்டிலே நிறுத்தப்படுகிறான்.
(நடுத்தர வயதினன் – எந்தக் கேடும் செய் திட இயலாதவன் என்பதைத் தோற்றமே காட்டுகிறது, புன்னகை செய்கிறான்.)
நீதி : குற்றவாளியைச் சோதனை செய்தாகிவிட்டதா?
போலீ : ஆமாம்…
நீதி : எப்போது நடத்தினீர்கள், சோதனை?
போலீ : தொடர்ந்து! விடாமல்! மணிக்கு ஒரு தடவை வீதம்!
நீதி : ஆயுதம் ஏதும் வைத்துக்கொண் டில்லையே… இருந்ததா?
போலீ : தேடினோம் – கிடைக்கவில்லை. ஆனால், அவனே கூறுகிறான், ஆயுதம் அவன் தலையில் இருக்கிறதாம் – மண்டைக் குள்!!
(போலீஸ் பக்கத்திலே நின்று காவல் புரிகிறது. கூண்டிலே, குற்றவாளி நிற்கிறான். என்ன நடந்தாலும் கவலையில்லை என்ற போக்கில்.)
(குறிப்பெடுப்போன், தன் இதழுக்கு அறி விக்கிறான்.)
குறி : (டெலிபோன் மூலம்) மயிர்க் கூச்செறியும் காட்சி. பேயன், பிடித்திழுத்து வரப்பட்டிருக்கிறான். கூண்டிலே நிற்கிறான் கொடியவன்!! பயங்கரமான தோற்றம், ஆனால் கடமையைக் கலங்காது செய்திடும் நீதிபதி, கைதிக் கூண்டில், தனக்கு மிக அருகாமையில், அந்தக் கொடியோன் இருப்பினும், துளியும் கலங்காது, அமர்ந்தி ருக்கிறார். அவருடைய அஞ்சா நெஞ்சம் கண்டு அவனி புகழ்கிறது.
நீதிபதி : (வழக்கினைத் தொடுத்திடும் வழக்கறிஞரைப் பார்த்து) இனித் தொடங் கலாம்… தொடுப் : பெருந்தகையே! இவன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம், எவ்வளவு கொடியது, ஈனத்தனமானது, ஆபத்தானது, அழிவு தருவது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
நீதி : குற்றம் கொடியதே! அறியாதார் யார்?
தொடுப் : சட்ட நிபுணர் தாங்கள்! நீதியின் காவலர் தாங்கள், அறியாததும் உண்டோ?
நீதி : இவன் செய்த குற்றம்?
தொடுப் : சுயசிந்தனை! தானாகச் சிந்திக் கிறான்! எண்ணிப் பார்க்கிறான்!
(நீதிபதி கடுங்கோபங் கொள்கிறார். வழக்கு மன்றத்திலிருப்போர் பதறுகிறார்கள். பெண்கள் பீதி அடைகிறார்கள்; ஆடவர் ஆத்திரமடைகிறார்கள். குற்றவாளியைச் சுட்டுத்தள்ளுவது போலப் பார்க்கிறார், நீதிபதி.)
நீதி : சுயசிந்தனையா! உம்! எப்போது, அப்படிச் சிந்திக்கிறான் இந்தச் சண்டா ளன்?
தொடுப் : எப்போதும் அதே வேலை தான், இந்த அக்ரமக் காரனுக்கு. வீட் டில்! தொழிற்கூடத்தில்! பத்திரிகை படிக்கும்போது!
நீதி : அதிலே எழுதப்பட்டிருப்பதை நம்பவில்லை – யோசிக் கிறான் – எண்ணிப் பார்க்கிறான்!
தொடுப் : அதுமட்டுமல்ல! நமது புனிதத் தலைவர்கள் சொற்பொழிவு மூலம் உபதேசம் செய்கிறார்களே, ஊர் வாழ, உலகு வாழ. அப்போதுகூட, இந்த அயோக்கியன் அவர்கள் கூறுவது சரியா, தவறா? என்று யோசிக்கிறான்.
நீதி : கேட்டீர்களா, கற்றறிந்தோரே! வழக்கினைத் தொடுத்து, விளக்கம் எடுத் துரைக்கும் நண்பர், வம்பு தும்பு பேசுபவர் அல்ல – வழக்கறிஞர் – திறமை மிக்கவர். சான்றுகளின்றிப் பேசமாட்டார்! பேச்சினை எவரும் மறுத்திட முடியாது! ஆணித்தரமான பேச்சு. அவர் கூறிவிட்டார், இந்த அற்பன் செய்த குற்றத்தினை. கண்கண்ட கடவுளராம் நமது நாட்டுத் தலைவர்கள், பேசுகிறார்கள்; கேட்டு இன்புற்று நல்வழி நடவாமல், இவன், அய்யம் கொள்கிறான் – அலசிப் பார்க்கிறான் – தானாகச் சிந்தித் துப் பார்க்கிறான் – பெரியோர்களே! எத்து ணைப் பேய்க்குணம் இவனுக்கு! காலம் இப்படியுமா கெட்டுப் போக வேண்டும். நமக்கு அமைந்துள்ள நல்லாட்சியில், எதைப் பற்றியும் நாமாகவே எண்ணிப் பார்த்து உண்மையை உணர்ந்திடும் தொல்லையைத் துளியும் நமக்குத் தராமல், நமது அரும்பெரும் தலைவர்கள் அயராது உழைத்து, எண்ணங்களைச் சமைத்தெடுத்துச் சுவைபடத் தருகின்றனர்! தொட்டிலிலிருந்து சுடுகாடு வரையில் நமக்குத் துணையாக, நமது தலைவர்கள் தயாரித்துத் தருகிற, “உபதேசம்‘ இருக்கிறது. வீட்டிலே இருந்தாலும் அலுவலகம் சென் றாலும், எங்கே இருந்தாலும், துளியும் கஷ் டமின்றி, எல்லாவற்றைப் பற்றியும், நாம் என்ன எண்ணவேண்டுமோ அதனை, ஆட்சியில் அமைந்துள்ள புண்ய புரு ஷர்கள், தயாரித்துக் கொடுக்கிறார்கள் – ஆனால் இவன், இந்தக் கொடியவன், நம் தலைவர்களின் பேச்சைக் கூடத் துச்சமென்று கருதுகிறான் – சுயமாகச் சிந்திக்கிறான். நாடு செய்த தவத்தின் நற்பயனாகக்கிடைத்துள்ள நமது தலைவர்கள் ஏதேனும் கூறினால், ஆர அமர யோசித்துப் பார்த்தறிந்த உண்மையாகத்தானே இருக்கும்; நமது நல்வாழ்வுக்கானதாகத்தானே இருக்கும்! நன்றியுடன் அதனை ஏற்றுக்கொள்ளாமல், இவன், அவர்கள் சொல்வது சரியா, தவறா என்று சிந்திக்கிறான் இவன்!! நமது தலைவர்களைவிட இவனுக்குச் சிந்தனா சக்தி அதிகமோ? எவ்வளவு கடைந்தெடுத்த கயவனாக இருந்தால், இவன், தலைவர்கள் பேச்சைப்பற்றி, ஆராயத் துணிவான்! உம்! இருக்கட்டும்!! ஏ! கெடுமதியாளனே! குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா? மறுக்கிறாயா?
கைதி : குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.
நீதி : நாட்டுக்கு நாசம் விளைவிக்கும் இந்தத் துரோகத்தைச் செய்ததாக ஒப்புக்கொள்கிறாய்?
கைதி : சுயமாகச் சிந்தித்தேன் – ஒப்புக் கொள்கிறேன் குற்றத்தை.
தொடுப் : நமது அரசு நமக்காகச் செய்துள்ளவைகளை மறந்து, துரோகம் செய்கிறாய்?
கைதி : மறந்ததால் அல்ல! நமக்காக நமது அரசு செய்வதை எல்லாம் கண்டதால், நானாக எண்ணிப் பார்த்து உண்மையைக் கண்டறிய விரும்பினேன்.
தொடுப் : சட்டத்தை மீறுகிறாய் – தெரிகி றதா உனக்கு.
கைதி : கூறுகிறீர்களே! தெரிகிறது! ஆனால், எந்தச் சட்டத்தை நான் உடைக் கிறேன்?
தொடுப் : எந்தச் சட்டமா? நாட்டை வாழ வைக்க நமது தலைவர்கள் இயற்றிய சட்டம்.
கைதி : நாட்டை வாழ வைக்கவா? வாழ்கிறதா, நாடு! வாழ்க்கையா நாம் நடத்துவது…?
நீதி : குழப்பமோ இவனுக்கு மனதில்…
கைதி : ஆமாம்… குழப்பம்…
நீதி : ஏன் ஏற்படுகிறது?
அண்ணாவின் எழுத்தோவியம் தானாக ஏற்படவில்லை. ஒருவன் புகுத்துகிறான், என் உள்ளத்தில்…
நீதி : யார் அவன்? தேவதையோ?
கைதி : தேவதை என்றுதான் முதலில் எண்ணிக் கொண்டேன். பிறகு தெரிந்தது, தேவதை அல்ல – பிசாசுக் குட்டி! என்று.
நீதி : குட்டிப் பிசாசா…?
கைதி : ஆமாம்! ஓயாமல் என்னைப் பிடித்தாட்டுகிறது அந்தக் குட்டிப் பிசாசு! நான் மேலங்கி அணிந்தோரை மேதாவிகள் என்று எண்ணும்போது, காவி தரித்தோரைக் கடவுளின் அடியவர் என்று நினைக்கும்போது, பத்திரிகைகளை அறிவை அளித்திடும் அற்புதப் பணிபுரியும் திருத்தூதர்கள் என்று கருதும்போது, இந்த குட்டிப்பிசாசு, உள்ளே புகுந்து குடைகிறது! குத்திக் கிளறுகிறது, என் சிந்தனையை! எல்லாம் ஏமாற்று வித்தை, தெரியவில்லையா? என்று கேட்கிறது. புரட்டு விளங்கவில்லையா? எண்ணிப்பார்! என்று கூவித் தூண்டுகிறது.
நீதி : உன் கண்ணால் கண்டாயா அந்தக் குட்டிப் பிசாசை… எங்காவது?
கைதி : எல்லா இடத்திலும் காண்கிறேன்! இங்கும் இல்லை என்று எப்படிக் கூறமுடியும்? (சிரிப்பொலி கேட்கிறது. சிறியதோர் உருவம் வருவது தெரிகிறது. கைதியிடம் சென்று குலவுகிறது.)
(தம்பி! குட்டிப் பிசாசு என் உள்ளத்தில் புகுந்து, என்னைச் சிந்திக்கவைக்கிறது என்று கைதி கூறியதாக, நூலெழுதியவர் எடுத்துக் காட்டுவதிலே, தனியானதோர், சுவை இருக்கிறது. சிந்தனை என்பதை நம்பிக்கைக்கு நாசம் விளைவிப்பது என்று எதேச்சாதிகாரிகள் – மத ஆதிக்கக்காரர்கள் கூறிவருவர்.)
நம்பிக்கை என்பது கடவுள் ஊட்டுவது என்றும், சந்தேகம் சிந்தனை, இவைகள் “சாத் தான்’ ஏவிவிடுவன என்றும் தேவாலயத்துக் கோமான்கள் கூறுவர்.
நம்பிக்கை, அடக்க ஒடுக்கத்தைத் தரும்; சிந்தனை துணிவை, தன்னிச்சையாக நடந்திடும் போக்கினை மூட்டிவிடும் – கடவு ளின் ஆற்றலை அலைக்கழிக்க சாத்தான் செய்திடும் சூழ்ச்சியாகும், அதைச் சிந்தனை என்று கூறிவந்தனர், ஜெபமாலையின் துணையைச் செங்கோலுக்கு அளித்து அரசோச்சி வந்தவர்கள். அந்த நிலையைச் சுவைபட எடுத்துக்காட்டத்தான் “சிந்தித் தான்’ என்று குற்றம் சாட்டப்பட்டவன் தன் சிந்தனைக்குப் பொறுப்பு,தானல்ல, ஒரு குட்டிப் பிசாசு என்று குத்திக்காட்டிப் பேசு கிறதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
நீதிபதி : வழக்குத் தொடுப்போரே! குற்றவாளியின், மனம் குழம்பிக்கிடப்பதற்கு, மருத்துவர் சான்றளிக்க வருவாரா?
தொடுப் : மருத்துவத் துறைத் தலை வர் வந்திருக்கிறார்; குற்றவாளி மிகப் பயங்கரமான, பைத்தியக்காரன் என்பதை எடுத்துகூற, அனுப்பப்பட்டிருக்கிறார்!
நீதி : சரி! மருத்துவ நிபுணரை அழைத்து வாரும்…
(நீதிபதியை டெலிபோன் அழைக்கிறது. பேசி முடித்ததும்.)
நீதி : குற்றவாளியே! உன் ஆணவம், அறிவீனம், அரசுக்கு நீ இழைத்த துரோகம், அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு பேசிய மண்டைக் கர்வம், ஆகியவைபற்றிப் பல பக்கங்கள் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி, உன் மனைவி மக்களுக்குத் தரப்படும் – படித்திட – பாடம் பெற்றிட. இப்போது, எழுத நேரமில்லை. துரிதமாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும். போலீஸ் காவலர்காள்! குற்றவாளியைப் பிடித்திழுத்துச் சென்று தூக்கிலிட்டுக் கொன்றுபோடுங்கள்.
(கைதியைப் போலீஸ் அதிகாரிகள், இழுத்துச் செல்கிறார்கள். வழக்கு முடிந் தது! நீதி வென்றது! குற்றவாளிக்குத் தூக் குத் தண்டனை! என்ற செய்தியைக் குறிப்பெடுப் போன், இதழுக்கு அறிவித்துவிடுகிறான்.)
தொடுப் : பெருந்தகையே! ஒரு விஷயம் – சிறிய விஷயம்தான் – எனினும், செய்வன திருந்தச் செய் என்பார்களல்லவா? அதற்காக…
நீதி : செய்யவேண்டியதைச் செய்தா யிற்றே!
தொடுப் : முடிவு சரியானதே! முறை யிலே, ஒரு சிறு குறை! குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கு முன்பு, மருத்துவ நிபுணரின், சான்று பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர் வருவதற்குள்…
நீதி : அவர் வந்திருந்தாலும், முடிவு இதேதான்! சரி! அதனால் என்ன? குற்ற வாளி இறந்துபடுகிறான் என்பதால், நாம் முறையிலே குறைவைப்பானேன்! மருத்துவ நிபுணரின் கருத்தினைக் கேட்டறிவோம் – இப்போது.
(மருத்துவ நிபுணரின் கருத்தறிந்து, குற்றவாளி, பித்தனா அல்லவா என்பதைக் கண்டறியத்தான், “முறை வகுத்தார்’ நீதிபதி.
ஆனால், டெலிபோன் மூலம், அவருக்கு ஆணை பிறந்து விட்டது – ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்க இவ்வளவு நேரம் பிடிக்க வேண்டுமா? என்று கேட்டுவிட்டார், மேலோர்’. ஆகவேதான், தீர்ப்பைத் தந்து விட்டு, முறையைக் குறையுள்ளதாக்க வேண் டாம் என்பதற்காக மருத்துவ நிபுணரை அழைத்துப் பேசவைக்கிறார் நீதிபதி.)
தொடுப் : செத்தொழிந்தானே குற்றவாளி, அவன் உயிரோடு இருந்தபோது புத்தி தடுமாறாது இருந்தானா, பித்துப் பிடித்துக் கிடந்தானா?
மருத் : பொல்லாத பைத்யக்காரனாகத் தான் இருந்தான்.
நீதி : மூளை கெட்டுவிட்டிருந்ததோ?
மருத் : ஆமாம்…
நீதி : மூளை, நோயினால் கெட்டு விட் டதோ?
மருத் : ஒரு கிருமி – நச்சுப் பூச்சியினால், மூளை கெட்டுக் கிடந்தது.
நீதி : அதை, எடுத்துக்காட்ட முடியுமா. ஆதாரத்துடன்?
மருத் : ஆதாரம் அப்பழுக்கின்றி இருக் கிறது. செத்தொழிந் தானே, அவனுடைய மூளையைக் கெடுத்த, அந்த நஞ்சுப் பூச்சி, புத்தம் புதியதல்ல. அது, இக்காலத்தைவிட, ஆன்றோர்கள் காலத்தில், மிக அதிக அளவிலே இருந்த துண்டு. பழம்பெரும் நகரான ஏதன்ஸில், இந்தப் பூச்சிகள் ஏராள மாகக் கிடந்தன! பாலஸ்தீன் நகரிலே கூட! அய்ரோப்பிய பூபாகத்தில், இந்தப் பூச்சியைக் கசக்கியும் நசுக்கியும் வைத்தனர். முன்பு இந்த அளவுக்கு, அவைகளின் தொல்லை இப்போது கிடையாது. கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது.
தொடுப் : அந்த நஞ்சுப் பூச்சி தீண்டி நோய் கண்டு விட்டால், நோய் என்றென்றும் போகாதோ?
மருத் : ஒருக்காலும், நோய் போகாது.
தொடுப் : நோயின் குறிகள் யாவை?
மருத் : கண்களிலே புத்தொளி, சுறுசுறுப் பான நடவடிக்கை, எளிய வாழ்க்கை, அச்ச மற்ற போக்கு, சுகபோகத்தில் பற்று அற்ற நிலை.
தொடுப் : கொல்லப்பட்டானே, அவனி டம் இந்தக் குறிகள் கண்டீரா?
மருத் : அதை ஏன் கேட்கிறீர்கள்! நோய், முற்றிப் போன நிலை அல்லவா, அவனுக்கு.
நீதி : அப்படியானால், அந்த நோயாளி கொல்லப்பட்டது, சமூகத்துக்கு மிகப் பெரிய நலன் தரும் செயல் – அல்லவா?
மருத் : அய்யமென்ன!! அய்யமென்ன!!
(குற்றவாளியைக் கொல்லப் பார்க்கிறார் கள்! அவனைச் சாகடிக்க முடியவில்லை. ஓடோடி வந்து, நீதிபதியிடம் கூறுகிறார்கள். அவர் பதறுகிறார். ஆணையிடுகிறார்! ஆர்ப்பரிக்கிறார். வெட்டு! குத்து! கொளுத்து! பிய்த்தெறி! எதையோ, செய்! ஆனால் அவன் சாகவேண்டும்! என் தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்! என்று கூச்சலிடுகிறார். காவலர், வெளியே செல்கின்றனர்.)
நீதி : (கிலிகொண்ட நிலையில்) மருத்துவ நிபுணரே! இந்த நோய், தொத்திக்கொள்ளக் கூடியதோ?
மரு : பொல்லாத தொத்து நோய்! ஏதன்ஸ் நகரிலிருந்து, இந்த நோய், பரவிப் பரவிப் பரவி, அய்ரோப்பிய பூபாகத்தையே கப்பிக்கொண்டது. நமது நாகரிக நகர்களில், மாற்று மருந்துகளை, ஆட்சியாளர் தயாரித்து அளிப்பதால், நோய் பரவுவது தடுக்கப்பட்டு வருகிறது.
நீதி : கிடக்கட்டும். குற்றவாளி இங்கு வந்திருந்தானே – தொத்துநோய் என்கிறீரே – நம்மைப் பிடித்துக் கொண் டிருக்குமோ? மரு : இருக்கும்.
நீதி : அவன் உயிருடன் இருந்தால்தானே, நோய் தொத்திக் கொள்ளும். அவன்தான் செத்தானே!
மரு : அய்யோ! ஆபத்து அப்போதுதான் அதிகம். அப்படிப் பட்டவர்களின் சக்தி உயிரோடு இருந்தபோது இருப்பதைக் காட்டிலும், செத்த பிறகு, அந்தச் சக்தி பலமடங்கு அதிகமாகிவிடும்.
நீதி : நோயை நீக்க, வழியே இல்லையா…?
மரு : இருக்கிறதே! தாங்கள் கண்டவழி! சாகடிப்பது!
நீதி : என்ன, மருத்துவ நிபுணரே! ஒரு தினுசாகப் பேசுகிறீர்.
மரு : உண்மையை உரைக்கிறேன்! பெருந்தகையே! என்னை அந்த நோய் தொத்திக்கொண்டது!
தம்பி! மருத்துவ நிபுணருக்கு, தன்னை வரவழைத்துக் கேட்டு, உண்மை என்ன என்று கண்டறியாமலே, குற்றவாளிக்கு நீதிபதி மரண தண்டனை தந்ததால் மனம், கொதித்திருக்கிறது.
சட்டத்தையும் ஒரு பக்கம் ஏடுகளாக்கி வைத்துக் கொண்டு, படுகொலையை நீதிபதி செய்கிறாரே! ஆட்சி இதனை அல்லவா, முறையாக்கி வைத்திருக்கிறது என்று எண்ணுகிறார் – அவர் உள்ளத்தில் உறங்கிக் கிடந்த, நேர்மை எழுந்து நின்று, அவரை ஆண்மையாளராக்கி விடுகிறது. அஞ்சாது உண்மை பேசுகிறார். இறந்தவன் மூளை யைக் கெடுத்தது, ஒரு நச்சுப் பூச்சி – அது கிரேக்க நாட்டில் ஏதன்ஸ் நகரிலே நிரம்பி இருந்தது என்று மருத்துவர் கூறுவதன், உட் பொருள், கொடுங்கோலர் செய்யக்கூடிய கொடுமைகளுக்கு அஞ்சாமல், நெஞ்சுரத் துடன் சிந்தனையாளர், ஏதன்ஸ் நகரில் நிரம்ப இருந்தனர் – அவனி எங்கும் அறிவு பரப்பினர் – சர்வாதிகாரிகளின் காலத்திலேதான், சிந்தனையைச் சாகடிக்க முயற்சிக்கிறார்கள் – அதுவும் நடவாது என்பதாகும்.

சிந்தனையாளர், கொடுங்கோலரின் சீற்றத்தால் தாக்கப்படுவது காணும்போது, எவருக்கும் அவர்பால் பற்று ஏற்பட்டுவிடும் – சிந்தனையாளர் ஆகிவிடுவர் என்ற கருத்தை விளக்கத்தான், குற்றவாளிக்கு இருந்தது தொத்துநோய் என்று கூறினார்.

அநியாயமாக ஒருவனை அழிக்கிறீர் கள், அவன் ஆன்றோர் காலமுதல் அழிந்து படாமல் இருந்துவரும் “சிந்தனை’ச் செல்வத் தைப் பறிகொடுக்க மறுத்த காரணத்தால் – அவன் சாகத் துணிகிறான், சிந்தனையை இழக்க மறுக்கிறான் – அவனன்றோ ஆண் மகன் – அவன்போல் அனைவரும் இருந் திட வேண்டும் -இதோ இனி நான், அவன் போலத்தான்! என்ற கருத்தை விளக்கத்தான், அந்த மருத்துவ நிபுணர், என்னையும் அந்த நோய் தொட்டுவிட்டது என்று கூறினார்.

பதறிய நீதிபதி, மருத்துவ நிபுணரைக் கைது செய்யும்படி, போலீஸ் அதிகாரிக்குக் கட்டளையிடுகிறார். அவனும் மறுத்து விடுகிறான்! தொத்துநோய்!!
வழக்குத் தொடுப்போனைக் கூவி அழைக்கிறார் நீதிபதி, அவன் மட்டும், என்ன!! நாம் நடத்தியது வழக்கு விசா ரணை அல்ல! கேலிக் கூத்து! நான் ஓர் சுயநலக்காரன் – போலீஸ் காவலர், விசை கொடுத்தால் ஆடும் பதுமை – செய்தி தருவோன் பொய்யன் புரட்டன் – தாங்களோ, ஓர் கோமாளி!
பிடியுங்கள்! அடையுங்கள் சிறையில்! கொல்லுங்கள் துரோகியை! என்று ஆத்திரத்துடன், நீதிபதி அலறுகிறார்.

சட்டம் படித்தேன், பகலும் இரவும்! எதற்கு, பாதகம் புரிந்திட! படுகொலைக்கு உடந்தையாக இருக்க!! உண்மையை உணருகிறேன். உயிர் பெரிதல்ல! வாழ்க்கை பெரிதல்ல! நாம் இப்போது வாழ்ந்துகொண்டும் இல்லை! – என்று உருகிப் பேசுகிறான், வழக்குத் தொடுத்தோன்.

பொய்! பொய்! நான் இதுவரை, வெளி யிடச் சொல்லி அனுப்பிய அவ்வளவு செய்தியும் அண்டப் புளுகு. நாங்கள் மனிதர்களே அல்ல! மானமற்றவர்கள்! மதியற்றவர்கள்! கதியற்றவர்கள்! இங்கு ஒரே ஒரு மனிதன் இருந்தான் – குற்றவாளிக் கூண்டில்! ஒரே ஒரு விடுதலை வீரன் இருந்தான் – கரங்களில் விலங்குகள் பூட்டப்பட்டு! மற்ற வர் அனைவரும் மாமிசப் பிண்டங்கள்!

மனிதக் கழுகுகள்!
இவ்விதமெல்லாம் செய்தி தருகிறான், இதழுக்கு – நோய் முற்றிவிட்ட நிலை அவ னுக்கு!
நீதிபதிக்கும், இலேசாக நோய் பிடித்து விடும் போலாகிறது.
ஆனால், டெலிபோன் ஒலி கிளம்புகிறது! “மேலவர்’ பேசுகிறார் – நீதிபதி பதறுகிறார்.

“நச்சுப் பூச்சி தீண்டியதால், இங்கு அனை வருக்கும் திடீர் என்று நோய் கண்டுவிட்டது. இப்போது பரவாயில்லை. இதோ தொடர்ந்து நடவடிக்கை எடுத்துக் கொள்கிறேன்!’’ என்று கூறிவிட்டு, மற்றவர்களை அழைக்கிறார்.

“பிள்ளை குட்டிகளைக் கவனியுங்கள்! பிழைப்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்! மேலவர் மெத்தக் கோபத்துடன் இருக்கிறார். இடிமுழக்கம் போலிருந்தது அவர் பேச்சு. எந்த நேரத்திலே ஆபத்து வருமோ, தெரிய வில்லை.’’

நீதிபதி பீதிகொண்டதுபோலவே, மற்ற வர்களும் பீதி அடைகிறார்கள்.
குட்டிப் பிசாசும் கொல்லப்பட முடியாத வனும் கூடுகின்றனர்.
வழக்கு மன்றத்திலிருந்தோர், வதை படுவதைக் காட்டுகிறது குட்டிப் பிசாசு!
நடைப்பிணங்களைப் பார்! நடுங்கிக் கிடக்கும் பேர்வழி களைப் பார்! நத்திப் பிழைத்திடும் சிற்றினத்தைப் பார்! – என் றெல்லாம் கூறிக் கேலி செய்கிறது, குட்டிப் பிசாசு!

“இவர் போன்றார்தானே, ஆட்சி மன்றங் களிலே மிகப் பெரும்பாலோராக உள்ளனர்’’ என்று கேட்கிறான், மரண தண்டனை பெற்றும், உயிர் இழக்காதவன்.

“இவர்கள் இப்படியேதான் இருப்பார் களா? என்று கேட்கிறான்’’ சிந்தித்தவன்.
ஆமாம்! என்று பதிலளிக்கிறான், சிந்திக்கச் செய்தவன்.
எப்போதும் இப்படியேதானா? என்று கேட்கிறான் சிந்தனையாளன்.

நெடுங்காலத்துக்கு இப்படித்தான்! நடைப் பிணங்கள் மனிதத்தன்மை பெறுவது மிகக் கடினமல்லவா? என்று கூறிச் சிரிக்கிறான், சிந்திக்க வைத்தவன்.
நீதிபதியின் இருக்கையில் அமருகிறான், முன்பு குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட்ட வன்!!
தம்பி! சர்வாதிகாரிகள், நீதிமன்றத்தை எப்படிக் கேலிக் கூத்தாக்குவார்கள் என்பது மட்டுமல்ல, நாடகக் கருத்து – எப்படிப்பட்ட மோசமான சர்வாதிகார ஆட்சி நடந்தாலும் ஒருவர் இருவராகிலும் துணிந்து “சுயசிந் தனை’ செய்து, அதன் காரணமாகக் கொடு மைப்படுத்தப்பட்டாலும் தாங்கிக் கொள்வர் என்ற பேருண்மையையும், நாடகம் விளக் கிக் காட்டுகிறது.
கொடுமைக்கு அஞ்சாமல் ஒருவன், விடுதலை வீரனாகத் திகழ்ந்தால், முன்பு மரக்கட்டைகள் போலிருந்தோரும் உணர்ச்சி பெற்று, உரிமைக்காகப் போரிடும் வீரராவர் என்பதும், நாம் பெறவேண்டிய பாடம்.

ஆனால், சர்வாதிகாரிகள் போலவா நமது அரசு, எண்ண, எழுத, பேச, கேட்க, உரிமை தராது இருக்கிறது என்று காங்கிரசார் கேட்பர், குறும்புச் சிரிப்புடன். பெரிய தலைவர்களே கூடச் சில வேளைகளில், மார்தட்டிக்கொண்டு பேசுகிறார்கள். “நாங்கள் அல்லவா பேச்சுரிமை கொடுத்தோம்!’’ என்று. இன்னும் சிலர், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசும் போக்கினர், “நாங்கள் மட்டும் நினைத்திருந்தால், உங்களை ஒழித்துக் கட்டிவிட்டிருப்போம். போனால் போகட்டும் என்று விட்டுவைத்திருக்கிறோம்‘’ என்று கொக்கரிக்கிறார்கள்.
இவர்கள் அளித்துள்ள பேச்சுரிமை, எத்தனை எத்தனை வளையங்கள் போடப் பட்டதாக இருக்கிறது என்பதுகூடக் கிடக் கட்டும் – பேச்சுரிமையை இவர்கள், கொடி யவன் என்று கண்டிக்கப்பட்ட வெள்ளையன் காலத்திலே பெற்றுச் சுவையைக் காண வில்லையா?

சிங்கத்தின் குகையிலே நுழைந்து, அதன் பிடரியைப் பிடித்தாட்டுவேன்! என்று பேசிடச், சத்தியமூர்த்திக்கு வெள்ளைக்காரன் உரிமை தந்தான் – நேருவுக்குக் கருப்புக்கொடி இன்னின்ன கட்டுத் திட்டத்தோடுதான் காட்ட வேண்டும் என்று கழகத் தோழர்களுக்குக் கூறிட, கூட்டப்பட்ட கூட்டத்தில் பேசிடும் உரிமையையும் தர மறுத்து, வழியிலேயே மடக்கிப் பிடித்துக்கொண்டுபோய், போலீஸ் கொட்டடியில் நம்மை அடைத்தவர்கள், இவர் கள். இவர்கள் பேசுகிறார்கள், பேச்சுரிமையை நமக்குத் தாராளமாகத் தந்திருப்பதாக!
சர்வாதிகாரி, பேச்சுரிமை தரமாட்டேன் என்று அறிவித்து விடுகிறான் – காங்கிரஸ் ஜன நாயகவாதிகளோ, பேச்சுரிமை தந்திருக்கிறோம் என்று கூறிக்கொண்டே, எதிர்க் கட்சிகளின் நடவடிக்கைகளை நசுக்க, நானாவிதமான முறைகளைத் தொடர்ந்து நடத்தியபடி உள் ளனர். எதிர்க் கட்சிகள் எடுத்துக் காட்டும் குற்றம் குறைகளுக்கு, தக்கவிதத்தில் மறுப்புரை கூறாமல், நாட்டு மக்களிடம் சென்று, எல்லா எதிர்க்கட்சியினரும் நாசக்காரர்கள், நாட்டுத் துரோகிகள், அறிவற்றவர்கள்என்றெல்லாம் ஏசித் திரிகின்றனர், தம்பி! கனம். காமராஜரே, பேசுகிறார், தி. மு. கழகத்தவர், “அரசியல் அப்பாவிகள்’ என்று. இவர் ஈராறு ஆண்டுகள், அகில உலகப் பல்கலைக் கழகத்திலே அரசியல் பெரும் பேராசிரியராகப் பணியாற்றிப் பக்குவம் பெற்றவர் போலவும், சீனத்து மாசேதுங்கும் சோவியத் நாட்டு குருஷேவும், அமெரிக்க அய்சனோவரும் பிரிட்டிஷ் மாக் மிலனும், இவரிடம் பாடம் கேட்டுப் பயிற்சி பெற்ற மாணவர்கள் போலவும், எண்ணிக் கொண்டாரோ என்னவோ, நம்மை, அரசியல் அப்பாவிகள் என்கிறார்.

கிராமத்துப் பெரியதனக்காரர், வெட்டிய கிடாவின் இறைச்சித் துண்டுகளை, இன் னின்னாருக்கு இவ்வளவு என்று எடுத்து வைக்கச் சொல்லிக் கொடுத்தனுப்புவது போன்ற அலுவல், இவருக்கு, காங்கிரஸ் அரசிய லில்! இவருடைய “அபாரமான’ ஆற்றலுக்காக, இவரைத் தேடிக் கண்டுபிடித்து, நேரு பண்டிதர் முதலமைச்சராக்கி வைத்ததுபோன்ற ஒரு மன மயக்கம்போலும், இவருக்கு!

திராவிட இன உணர்ச்சி மலர்ந்துள்ள இடத்தில், ஆச்சாரியார் போன்றோர் ஆட்சியில் அமர்ந்திருப்பது அமளிக்கு வழி கோலும் என்ற அச்சத்தால், திராவிட இனத்தவ ராகவும், அதேபோது அந்த உணர்ச்சியை அறிந்து கொள்ளத் தக்க அறிவாற்றல் அற்றவராகவும் ஒருவர் கிடைத்தால், அவரைப் பிடித்திழுத்து தலையில் மகுடத்தைக் கவிழ்த்து உட்கார வைத்தால், நாட்டிலே அமளி மூளாதிருக்கும் என்பதன்றி, பிறிதோர் நோக்கத்தை நேரு பெருமகனாரும் கொண்டிருக்க வழி இல்லை.

இவர் நம்மை ஏசுகிறார், அரசியல் அப்பாவிகள் என்று!!

நடுநிலையாளர், இங்ஙனம் எதிர்க் கட்சியினரை முறைதவறி ஏசுவதும், முரட்டுத்தனமாகத் தாக்குவதும், சரியல் லவே! என்று கூறும்போது, கோபம் கொப்பளிக்கிறது, காங்கிரஸ் ஜனநாயக வாதிகளுக்கு.
“ஓ! ஓ! யார் தெரியுமா நாங்கள்! வெள் ளைக்கார ஏகாதிபத்தியத்தை விரட்டிய வீராதி வீரர்களாக்கும்! சுயராஜ்யம் பெற்ற சூரர்கள், அறிவீர்! சுயராஜ்யம் என்ன, விளையாட்டுக் காகப் பெற்றதாக எண்ணுகிறார்களோ!!’’ – என்று எக்காளமிடுகின்றனர்.
தம்பி! கைதியாக்கப்பட்டிருக்கும், மெண் டாரிஸ் “ஏனோ தானோ’ அல்ல!

பிறந்தது செல்வக் குடியில். விளைவு தெரியாமல் காரிய மாற்றிடத்துடிக்கும் காளைப் பருவத்தினர் அல்ல. பிறந்தது 1899!! நான் பள்ளிக்கூடம் போனதே இல்லை என்று கூறிக்கொண்டு, பல்கலைக்கழகப் பாதுகாவலர்களுக்கு “அறிவுரை’ கூறப் புறப்படும், அலங்கோலம் காண்கிறோமே, அதுபோல் அல்ல; மெண்டாரிஸ், பார் புகழும் ஓர் பல்கலைக் கழகத்தில் படித்தவர்.
1917இல், உதுமானிய சாம்ராஜ்யப் படையில் சேர்ந்து பணியாற்றியவர்.

உதுமானிய அரசு ஆறு நூற்றாண்டு களுக்கு மேலாக அலங்கோல ஆட்சி நடத்தியதால் துருக்கி, “அய்ரோப்பாவின் நோயாளி’ என்று பலராலும் நையாண்டி செய்யப்படும் நிலையில் கிடந்தது; அதுகண்டு வெகுண்டெழுந்து விடுதலைப் போர் நடாத்த முனைந்தார், கமால்பாஷா – மெண்டாரிஸ், அந்த வீரப் படையில் சேர்ந்து துருக்கிக்குப் புதுவாழ்வு பெற நடத்தப்பட்ட, புனிதப் போரில் பெரும்புகழ் ஈட்டியவன்.

அழகிய ஆரணங்கை மணம் புரிந்து கொண்டு, மூன்று பிள்ளைகளுக்குத் தகப் பனாகி, செல்வ நிலையில் இருந்து வந்தான் – 1981இல், கமால்பாஷா அவர்களே அழைத்து, மெண்டாரிசை அரசியல் அலு வலில் ஈடுபடச் சொன்னார்.

பாராளுமன்றத்திலே இடம் பெற்ற பிறகுங்கூட, முன் வரிசை நாடாமல், வாளா இருந்து வந்தார்.
1950லே, அவர் தலைமையில் கட்சி இயங்கி, தேர்தலில் ஈடுபட்டு, மகத்தான வெற்றி பெற்றது.
மிகப் பெரிய தேக்கங்கள், அணைகள், எஃகுத் தொழிற்சாலைகள், சுரங்கத் தொழில் எனும் பலவற்றைத் துவக்கினார், துருக்கியின் செல்வம் வளர வேண்டும், பொருளாதாரம் பலப்பட வேண்டும் என்பதற்காக.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற தேர்தலில், பாராளுமன்றத்திலே 610 இடங்களில் 421 இடங்களை மெண்டாரிஸ் கட்சி பெற்றது!
அவ்வளவுதான்! ஆணவம் பிடித்துக் கொண்டது.

எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாகக் கூடினாலும், நம்மை என்ன செய்ய முடியும் என்ற எண்ணம் தடித்தது. தடித்துப் போகவே, திட்டம் தீட்டும்போது, எவரையும் கலந்து பேச வேண்டும் என்ற அக்கறை எழுவதில்லை – நிறைவேற்றுவதிலே நேரிடும் ஊழல்களை எவரேனும் சுட்டிக்காட்டினால், திருத்த வேண்டும் என்று எண்ணுவதில்லை; மாறாக, எதிர்க் கட்சிகளை ஏளனம் செய்தார்.

ஜெர்மன் நாட்டுப் பொருளாதார நிபுணர் எர்கார்டு என்பார்கூட, நிறைய கடன் வாங்கி வாங்கித் தொழிலை நடத்துகிறார்கள் – வருவாய் குறைவு; மிதமிஞ்சிய செலவு… இது ஆபத்து. நிர்வாகமும் ஒழுங்காக இல்லை! – என்று எடுத்துக் காட்டினார். தனக்கு இருக்கும் எண்ணிக்கை பலத்தினால், இறுமாந்து கிடந்த மெண்டாரிஸ், அந்த நிபுணர் பேச்சையும் துச்சமென்று கருதினார்.

அவனுக்கென்ன தெரியும்? இவனுக் கென்ன தெரியும்? இவன் வாலை ஒட்ட வெட்டிவிடுவேன் – அவனை அடியோடு அழித்துவிடுவேன் – என்றெல்லாம் பேசுவது, ஜனநாயகச் சர்வாதிகாரிக்கு ஏற்படும் நோயின் குறி!

அந்த நோய் பிடித்துக் கொண்டால், வேண்டுகோளைப் புறக்கணிக்கச் சொல்லும், நல்லுரையைக் கேட்க மனம் இடம் தராது, நாமே எல்லாம் என்ற நினைப்புப் புகுந்து குடையும்!
தம்பி! நாம் கேட்கும் “திராவிட நாடு’ அமைத்துக் கொடுப்பது, அவ்வளவு எளிதானதல்ல, காமராஜருக்கு என்றே வாதத்துக்காக வைத்துக்கொள்வோம்; தமிழ் நாடு என்ற பெயர் வைப்பது கூடவா கடினமான காரியம்! அது என்ன, எவரெஸ்டுமீது ஏறிடுவது போன்றதா? இருக்குமிடமிருந்தே எங்கோ இருக்கும் இலக்கினைத் தாக்க ஏவிடும் வாணவெடி தயாரிப்பது போன்ற விற்பன்னர் வேலையா?

தேவையான அளவு தன்மான உணர்ச் சியும், மக்களின் வேண்டுகோளை மதிப்பது நமது கடன் என்ற பொறுப்புணர்ச்சியும் தானே தேவை – தமிழ்நாடு என்று பெயரிட! செய்தாரா?
“தமிழ்நாடு’ என்று பெயரிடும்படி, தி. மு. கழகம் மட்டுமா கேட்கிறது? எல்லா அரசியல் கட்சிகளுமல்லவா!!
அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, கற்றறிவாளர் கழகங்கள்’ வணிகர் நடத்தும் மன்றங்கள், ஊராட்சி மன்றங்கள், புலவர்கழகம், தமிழாசிரியர் கழகம் – இவையாவுமன்றோ, தமிழ்நாடு என்ற பெயரிடும்படி வலியுறுத்தி வருகின்றன.

பம்மல் சம்பந்தனாரும், டாக்டர் மு. வரதராசனாரும், சேதுப்பிள்ளை அவர்களும், எடுத்துக் கூறும்போது கூடவா, கனிவு எழாதிருப்பது?
எவர் சொன்னாலும் சரி, என் போக்கை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று இருப்பவரை, என்னவென்று கூறுவது? பித்தர் என்பதா? சர்வாதிகார வெறிபிடித்தலைபவர் என்றுரைப் பதா? என்ன கூறினாலும் விளக்கம் பெற முடியாத மந்த மதியினர் என்பதா?
ஒரு பெரியவர், உண்ணாவிரதமிருந்து, சாகக் கண்டும், முதலமைச்சரின் மனம் இளகவில்லை! கண்டோமே!!
ஒருவர் சாகக் கண்டும் மனதை இரும் பாக்கிக்கொண் டாகிலும், கடமையைச் செய்ய வேண்டும் – செய்தேன் – என்று கூற வாவது, காமராஜர் ஏதேனும் வியக்கத்தக்க சாதனைகளைச் செய்து காட்டினாரா?

வேறு எதைச் செய்ய இயலாமற் போயினும், நடைபெறும் ஆட்சி, ஆளுங் கட்சியினருக்கேனும், திருப்தி அளிக்கிறதா?
தம்பி! அடுத்த கிழமை காட்டுகிறேன் அந்தக் கூத்தினை.

அண்ணன்,

அண்ணாதுரை

ண்ணா12-6-1960
தொகுப்பு: ஆதனூர் சோழன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *