கண்டதும்! கேட்டதும்! – தேர்தல் சுற்றுப்பயணம் ஆசிரியருக்கு வயது, 91 ஆ? 19 ஆ?

viduthalai
3 Min Read

திராவிடர் இயக்கத்துக்குக் கிடைத்த தலைவர்கள் முதுமையை வென்றவர்கள். தந்தை பெரியார் 95, முத்தமிழ் அறிஞர் கலைஞர் 94, பேராசிரியர் க. அன்பழகன் 98 – இவர்கள் யாரும் தங்களின் முதுமையால் மக்கள் தொண்டு செய்வதில் பின்தங்கி விடவில்லை. மரணத்திற்கு கொஞ்சம் முன்பு வரை கூட உழைப்பு, உழைப்பு என்று நம் மக்களின் எதிர்காலத்திற்காக சிந்தித்துச் செயலாற்றியவர்கள்.

நன்றியை எதிர்பாராத இந்தத் தொண்டு எப்படி சாத்தியமாயிற்று? எங்கிருந்து வந்திருக்கும் இந்த அரிய பண்பு? ’ஓய்வு என்பது தற்கொலைக்குச் சமம்’ என்று சொன்ன தந்தை பெரியார் அவர்களிடமிருந்து தான்! அவர் என்ன சொன்னார்? ‘காலையில் இரண்டு இட்லி சாப்பிடுகிறேன்; மதியம் கொஞ்சம் புலால் உணவு எடுத்துக் கொள்கிறேன்; இரவு இரண்டு சப்பாத்தி சாப்பிடுகிறேன். இந்த உணவுக்காக எங்கோ ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரன், பிற்படுத்தப்பட்ட சகோதரன் உழைக்கிறான். அவனுக்கு சுயமரியாதை வருகிற வரையில் நான் ஓயமாட்டேன்’ என்று பிரகடனப்படுத்தினாரே, அங்கிருந்து வந்தது! தனது இனநலத்தின் மீதிருந்த அளப்பரிய அக்கறை காரணமாக வந்தது! மனிதநேயத்தின் அடிப்படையிலிருந்து வந்தது! இதுதான் திராவிடர் இயக்கத்தில் தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது! அதைப் பின்பற்றி தான் மேலே குறிப்பிட்டுள்ளவர்களும் தங்கள் முதுமையை வென்று, தொண்டு செய்து திராவிடர் இயக்கத்தின் அழுத்தமான தடங்களை வரலாற்றில் பதிய விட்டுச் சென்றுள்ளனர்.

திராவிடர் இயக்கத்தில் அந்த வரிசையில் இப்போது தொடர்பவர், ’தமிழர் தலைவர்’ என்றும் ’ஆசிரியர்’ என்றும் அன்புடன் அழைக்கப்படும் கி. வீரமணி அவர்கள்! அவருக்கும் வயது 91. அவரும், ’என் உடலுக்குத்தான் வயதாகிறதே தவிர என்னுடைய அறிவுக்கு; உணர்வுக்கு வயதாகவில்லை’ என்று ஒரு முறை அல்ல, பல முறை பொது மேடைகளிலேயே வெளிப்படையாக அறிவித்து, தானும் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கிக்கொண்டுள்ளார். உலகளவில் பகுத்தறிவாளர்களுக்கு, மனிதநேயக்காரர் களுக்கு வயது கூடுதல் என்கிறது அறிவியல் ரீதியிலான ஒரு புள்ளி விவரம்! கடந்த 7.4.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து நடைபெறும் சூறாவளி பிரச்சாரச் சுற்றுப்பயணத்தில், கோத்தகிரியில் ஆ.ராசாவை ஆதரித்து பேச வந்த ஆசிரியர், “மேடைக்கு வரும் வரை என்னுடைய வயது 91; உங்களைப் (மக்களை) பார்த்தவுடன் என்னுடைய வயது 19” என்று உற்சாகத்துடன் சொல்லி, மக்களையும் உற்சாகத்தில் ஆழ்த்திவிட்டார்.

நீலகிரி தொகுதியில் கூட்டம் முடிந்து, மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்குத் திரும்பியிருந்தார் ஆசிரியர். அடுத்த நாள் (8.4.2024) அதி காலையில் வழக்கம் போல் ஆசிரியர் நடைப்பயிற்சிக்கு சென்றிருக்கிறார். கவனித்துக் கொள்ளுங்கள், இதுவும் அவருடைய ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கியமான காரணம்! அப்போது அதே விடுதியில் மற்றொரு அறையில் தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா அவர் களும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இருவரும் நேருக்கு நேராக சந்தித்து ஒன்றாக பேசிக்கொண்டே நடைப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஆ. ராசாவுடன் வந்த தி.மு.க. மாநில மாணவரணி துணைச் செயலாளர் அமுதரசன் பிராட்லாவிடம், “பார்த்தீங்களா எனக்கு வயது 30; நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்களுக்கு வயது 60; ஆசிரியருக்கு வயது 90. மூன்று தலைமுறைகளும் ஒன்றாக நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்” என்று சொல்லியிருக்கிறார். திராவிடர் இயக்கத்திற்கே உரித்தான இந்த சுவையான தகவலை பிராட்லா ஆசிரியரிடம் கூறினார். ஆசிரியர் உடனே அதை மறுத்து, ”எனக்கு தான் வயது 90 இல்லையே!” என்று வழக்கம் போல பதில் சொல்ல, அந்த இடமே கலகலப்பாகிவிட்டது. உடனடியாக அமுதரசன், “ஆமாங்கய்யா நீங்க கோத்தகிரியில், ‘இங்கே வருகிற வரையில் என் வயது 91. மக்களைப் பார்த்ததும் என் வயது 19. என்று சொல்லியிருக்கிறீர்கள்” என்று சொல்ல, ஆசிரியர், “பாருங்க, சரியாக சொல்லிவிட்டார்” என்று தானும் சிரித்துக்கொண்டே அமுதரசனை ஆமோதிக்க, கலகலப்பு அங்கே இறக்கை கட்டிக்கொண்டது! நடைப் பயிற்சிக்கு மட்டுமல்ல, 30 ம், 60 ம், 90 ம் தனது சிந்தாத்திற்கு எதிரான பாசிசத்தை வீழ்த்தவும் பரப்புரைக்குச் சென்று கொண்டிருக்கிறது!

முத்தாய்ப்பாக, நடைப்பயிற்சி முடிந்து திரும்பியதும் ஆ.ராசா அவர்கள் அங்கிருப்பவர்களிடம், “நடைப் பயிற்சியின் போது நான் தான் வேகமாக நடக்கிறேன் என்று இதுவரை எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், ஆசிரியர் என்னை விடவும் வேகமாக நடக்கிறார்” என்று சொல்லியிருக்கிறார். தேர்தல் பணிகள் ஏராளமாக காத்திருந்தாலும், ஆசிரியர் சேலத்திற்குப் புறப்படும் வரை காத்திருந்து, தனது கொள்கை குருவான ஆசிரியரை, வழியனுப்பிவிட்டுத் தான் ஆ.ராசா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஆசிரியரும் தனது கொள்கைக் குன்றான மாணவரிடம் விடைபெற்றுக்கொண்டு சேலம், தர்மபுரி (அரூர்) பரப் புரைக்காக தனது ஓயாத பயணத்தைத் தொடந்தார்….

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *