ஏப்ரல் 19-க்குப் பின் 50 நாட்கள் வரை தமிழ்நாட்டில் 50 ஆயிரம் ரூபாய் கட்டுப்பாடு ஏன்?

viduthalai
1 Min Read

நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது பொதுத் தேர்தலில், தமிழ்நாட்டில் ஒரே கட்டத் தேர்தல் 19.4.2024 அன்று முடிவடைந்த பிறகு, வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதிதான் – மற்ற மாநிலங்களில் பல கட்ட தேர்தல் முடிவுற்ற பிறகே – வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலை.

தமிழ்நாடு மாதிரி முதலில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் வாக்குப் போட்ட பிறகு, முடிவைத் தெரிந்து கொள்ள சுமார் 50 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பது போல இடைவெளி விட்டிருப்பது தேர்தல் ஆணையத்திற்குப் பெருமை தருவதல்ல.

இந்த ஏற்பாடு யாருக்கு வசதியாக இருப்பதற்காக என்பதைப்பற்றி பல விமர்சனங்கள் வந்துள்ளன. அது ஒருபுறம் இருக்கட்டும்!
ஏப்ரல் 19ஆம் தேதி வாக்களிப்பு தமிழ்நாட்டில் முடிந்த பிறகும்கூட, பணம் எடுத்துச் செல்வோர், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கொள் முதல், வரவு செலவுக்கு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் செல்வது தவிர்க்க முடியாதது.

அத்தகையவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி வரை இந்தக் கட்டுப்பாடு தொடரும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு பலதரப்பு மக்களுக்கும் மிகுந்த தொல்லையைத் தரும்.
“ரம்சானுக்கு ஆடு விற்பது வழக்கமாக 3, 4 கோடி ரூபாயைத் தாண்டும் – ஆனால் எங்களுக்கு இந்த கட்டுப்பாடுகளால், சில லட்சம் ரூபாய் தான் ஆடு விற்பனை” என்று புலம்பியிருக்கிறார்கள் ஆட்டுச் சந்தை வியாபாரிகள் – என்பது ஓர் உதாரணம்.

வணிகப் பெருமக்களின் செயற்பாடுகள், வீட்டு மண நிகழ்வுகள் – விவசாயிகள் விளைபொருட்களை சந்தைப்படுத்தல் போன்றவற்றிற்கு இது பெரும் இடையூறாகிறது. எனவே, தேர்தல் கமிஷனின் இந்த நிலைப்பாட்டினை ரத்து செய்து, மக்களின் துன்பம் துடைப்பது மிகவும் அவசியமாகும். இதுபற்றி மறுபரிசீலனை செய்யுமாறு தேர்தல் கமிஷனை வற்புறுத்துகிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
9.4.2024 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *