ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read

கேள்வி 1: ஊழல் வழக்கிற்குப் பயந்தோ அல்லது மிரட்டப்பட்டோ பா.ஜ.க.வில் இணைந்தவர்கள் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்களே?

– பா.முகிலன், சென்னை-14

பதில் 1 : ஆம். அதுதான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடத்தும் புதிய அரசியல் சுத்திகரிப்பு. ‘புதிய வாசிங் மெஷின்கள்’ உற்பத்தித் தொழிற்சாலையின் சாதனையோ சாதனை!

கேள்வி 2: கடந்த 10 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு மீனவர்களைக் குறித்துக் கவலைப்படாத பிரதமர் மோடி, திடீரென்று கச்சத்தீவு பிரச்சினையை கையிலெடுத்திருப்பது ஏன்?

– ப.இளங்கோ, வந்தவாசி

பதில் 2 : மெகா ஊழல் பனிப்பாறை வெளியே – உச்சநீதிமன்றத்தால் வெளிப்பட்டு – மக்கள் உண்மைகளை பரவலாக அறிய, எதிர்க் கட்சிகள் அதைப் பேசாமல், மக்களை அதுபற்றிச் சிந்திக்க விடாது தடுக்கும் திசைதிருப்பும் முயற்சிதானே தவிர வேறில்லை.

கேள்வி 3: தேர்தல் வரும்போது, அரசியல் கட்சித் தலைவர்கள் வீதிகளில் இறங்கி தேநீர் அருந்துவது, காய்கறி விற்பது, வடை சுடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஏன்?

– ஞா.திலீப், திருக்கழுக்குன்றம்

பதில் 3 : விரும்பத்தகாத தேர்தல் வித்தை. தொற்று நோயாகி பல வேட்பாளர்களை பாதித்துள்ள புதுவகை அரசியல் நோய். இவர்களை நாடாளு மன்றத்திற்குள்ளே அனுப்பவே தேர்தல் – மற்ற பல எளிய வேலைகள் செய்ய அல்ல! என்னே அதிசயக் கூத்து!

கேள்வி 4: தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. இருக்காது என்று பா.ஜ.க.வினரும், பா.ஜ.க. காணாமல் போய் விடும் என்று அ.தி.மு.க.வினரும் மாறி மாறி சொல்லிக் கொள்கிறார்களே?

– கி.மணி, பெங்களூரு

பதில் 4 : இரண்டு பேருக்கும் பாஸ் போடலாம், என்றாலும் இந்த இரண்டில் நோட்டாவுடன் போட்டி போடுவது பா.ஜ.க.வே ஆகும்!

கேள்வி 5: அண்மைக்காலமாக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்குகளில் நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதே?

– மு.செல்வம், திருவண்ணாமலை

பதில் 5 : இது மில்லியன் டாலர் கேள்வி – பதில்! நன்றி!

கேள்வி 6: ‘கடவுளை’ நம்பி சதுரகிரி மலைக்குச் செல்பவர்கள் திடீரென்று மரணத்தைத் தழுவுவது அவ்வப்போது நடக்கின்றதே – ‘பக்தர்கள்’ திருந்தமாட்டார்களா?

– ப.ரமேஷ், மதுரை

பதில் 6 : ‘பக்தி வந்தால் புத்தி போகும்’ என்ற பெரியாரின் அறிவுரை எவ்வளவு உண்மை பார்த்தீர்களா?

கேள்வி 7 : தேர்தல் பத்திர திட்ட ஊழல் வெட்ட வெளிச்சமானதற்குப் பிறகு, பா.ஜ.க.வின் ஒன்றிய ஆட்சிக் கனவு பலிக்குமா?

– ஏ.முக்தர், திருச்சி

பதில் 7 : மக்கள் பலிக்க விடமாட்டார்கள் என்றே தெரிகிறது.

கேள்வி 8: பிரதமர் மோடி போன்றோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் ‘ரோடு ஷோ’ நடத்துவதற்குப் பயப்படுகிறார் என்று பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை சவால் விடுகிறாரே?

– ஆ.ஆனந்த், தேனி

பதில் 8 : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் மக்களின் காட்சியிலிருந்து தப்பாதவர்; அவருக்கு ‘ஷோ’ எதுவும் தேவைப்படாது.

கேள்வி 9: தமிழ்நாட்டில் ஒரே மாதத்தில் அரசு பள்ளிகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனரே?

– க.சசி, விழுப்புரம்

பதில் 9 : காலைச் சிற்றுண்டி, ‘நான் முதல்வன்’ போன்ற பல திட்டங்களால் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.

கேள்வி 10: தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பா.ஜ.க.வினர், உண்மைக்கு மாறான தகவல்களையே கூறுகின்றனர். அப்படி இருந்தும் அவர்களை தொலைக்காட்சி விவாதங்களுக்கு அழைப்பது ஏன்?

– கே.அசோக், சோழிங்கநல்லூர்

பதில் 10 : “கூரை மேல் ஏறி கொள்ளிக் கட்டையை சுழற்றுபவனே என் பிள்ளைகளில் நல்ல பிள்ளை” என்பது போன்றே அகப்படும் நபர்களைத்தான் அவர்கள் அழைக்க வேண்டி உள்ளதே! என்ன செய்ய!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *