பிரதமர் நரேந்திர மோடி தினத்தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்று சாங்கோ பாங்கமாக ஏடுகளில் வெளி வந்துள்ளது.
பத்தாண்டுகளில் மிகப் பெரிய சாதனைகளைச் செய்து விட்டதாகவும், தமிழ் மீதும், தமிழ்நாட்டின்மீதும் அபரிமிதமான அன்பையும், அக்கறையையும் பொழிந்து தள்ளுவதாகவும், அவருக்கே உரித்தான நவரத்தின நடிப்புச் சக்கரவர்த்தியாகப் பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு அப்படி என்னென்ன சாதனைகளைத் தான் செய்து தள்ளி இருக்கிறார் என்று பட்டியலிட்டு இருந்தால் நாம்கூட ‘சபாஷ் மோடிஜி!’ என்று செல்லமாக கைகொடுத்து மகிழ்ந்திருக்கலாம்.
வாயால் வடை சுட்டதைத் தவிர வேறு எதையும் – அவரது பேட்டியில் தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ந்திட சரக்கு ஏதுமில்லை.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வரலாறு காணாத கடுமழை பொழிந்து தள்ளி, மக்கள் துயர வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்த நிலையிலும்கூட மனதைக் கல்லாக்கி, ஒரு பைசாகூட நிவாரண நிதியாக அளிக்காத பிரதமரையும், அவர்தம் ஆட்சியையும் தமிழ்நாட்டு மக்கள் எந்தக் காலத்திலும் மன்னிக்கவோ, மறக்கவோ தயாராக இல்லை.
மற்ற குறைபாடுகள் ஓரவஞ்சனைகள், தமிழ்நாடு என்றால் புறக்கணிப்புகள் என்பவை ஒருபுறம் இருந்தாலும், இந்த ஆறாத புண்ணுக்கு வைத்தியம் என்பதே இல்லை. கஜ குட்டிக் கரணம் போட்டாலும் பிரதமர் மீதான கோபம் தமிழ்நாட்டு மக்களிடம் தணியப் போவதில்லை. இது கல்லின் மேல் எழுத்து.
பி.ஜே.பி. ஆளும் மாநிலம் என்ற ஒரு கண்ணுக்கு வெண்ணெய்யும், பிஜேபி ஆளாத பிற மாநிலங்கள் என்ற இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் தடவும் வன்மத்தை மறுக்க முடியுமா?
எடுத்துக்காட்டுக்குக் கீழ்க்கண்ட புள்ளி விவரங்களே போதுமானவை.
மாநில அரசுகள் தரும் வரிப்பணத்தில் ஒரு ரூபாய்க்கு எத்தனைப் பைசாவை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அளிக்கிறது. அதில் பிஜேபி ஆளும் மாநிலம், பிஜேபி ஆளாத மாநிலம் என்ற பாரபட்சம் எப்படி இருக்கிறது. இதோ புள்ளி விவரம் பேசுகிறது!
ரூபாய் ஒன்றுக்கு மாநிலங்களுக்குத் திருப்பிச் செலுத்திய தொகை வருமாறு:
1. தமிழ்நாடு 29 காசுகள்
2. கேரளா 62 காசுகள்
3. கருநாடகா 16 காசுகள்
4. தெலங்கானா 40 காசுகள்
5. உத்தரப்பிரதேசம் 2.2 காசுகள்
6. மத்தியப்பிரதேசம் 70 காசுகள்
7. ராஜஸ்தான் 14 காசுகள்
மாநிலங்கள் கொடுக்கும் நிதியும், ஒன்றிய அரசு திருப்பிக் கொடுக்கும் நிதியும் வருமாறு:
1. தமிழ்நாடு கொடுப்பது ரூ.6 லட்சத்து 674 கோடி.
ஒன்றிய அரசு திருப்பிக் கொடுப்பது ரூ.1 லட்சத்து 58, 145 கோடி
2. கேரளா கொடுப்பது ரூ.1 லட்சத்து 34,301
ஒன்றிய அரசு திருப்பிக் கொடுப்பது ரூ. 83,080 கோடி
3. கருநாடகா கொடுப்பது ரூ.9 லட்சத்து ரூ.59,717 கோடி
ஒன்றிய அரசு திருப்பிக் கொடுப்பது ரூ.1 லட்சத்து 56,387 கோடி
4. தெலங்கானா கொடுப்பது 2 லட்சத்து 14,837 கோடி ரூபாய் – ஒன்றிய அரசு திருப்பிக் கொடுப்பது ரூ.85,628 கோடி.
5. உத்தரப்பிரதேசம்கொடுப்பது ரூ.3 லட்சத்து 41,817 கோடி
ஒன்றிய அரசு கொடுப்பதோ ரூ.6 லட்சத்து 91,375 கோடி (இரண்டு மடங்கு அதிகம்)
6. மத்தியப் பிரதேசம் கொடுப்பது ரூ.1 லட்சத்து 72,545 கோடி.
ஒன்றிய அரசு கொடுப்பது ரூ.2 லட்சத்து 94,010 கோடி (இரு மடங்கு அதிகம்)
7. ராஜஸ்தான் கொடுப்பது ரூ.1 லட்சத்து 96,461 கோடி
ஒன்றிய அரசு கொடுப்பது ரூ.2 லட்சத்து 25,040 கோடி.
3ஆவது தவணையாக ரூ.1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வை நிதியமைச்சகம் விடுவித்துள்ளது.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25.495 கோடி விடுவித்துள்ளது. தொடர்ந்து பீகாருக்கு ரூ.14,295 கோடியும், மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.11.157 கோடியும், மகாராட்டிரத்துக்கு ரூ.11,157 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.8,978 கோடியும் தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பாகும் (Union of States) என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு தன் கட்சி ஆளும் மாநிலம், தன்கட்சி ஆளாத மாநிலம் என்று வேறுபாடு காட்டி வஞ்சனை செய்வதுதான் திரு. மோடி தலைமையிலான ஒன்றிய பிஜே.பி. அரசு!
இதற்குப் பாடம் கற்பிக்க வேண்டாமா? நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தல் தான் அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் – தண்டனை கொடுக்கும் சரியான வாய்ப்பு!
நழுவ விடாதீர்கள். நழுவ விட்டால், கரணம் தப்பினால் மரணம் தான் – எச்சரிக்கை! எச்சரிக்கை!!