தேர்தல் தேதி வந்துவிட்டது! முடியும் வரை உறக்கம் கூடாது! இந்த முறையும் பாஜக ஆட்சிக்கு வந்தால், அது நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்ளும் பேராபத்து ஆகும்!
நமக்கு என்றால் திராவிடர் கழகத்திற்கு அல்ல; நம் தமிழ்நாட்டிற்கு! இன்னும் சொன்னால் மொத்த இந்தியாவையும் காப்பாற்றும் கவலை நமக்கு இருக்கிறது!
திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழக்கம் போல கடும் உழைப்பைக் கொடுக்கத் தயாராகிவிட்டார்கள்! நாளொன்றுக்குப் பல நூறு கிலோ மீட்டர் பயணங்கள், பல மணி நேரப் பேச்சுகள், இந்திய அளவிலான தேர்தல் செய்திகளைக் கண்காணித்தல், ஒன்றிய அரசை வீழ்த்திட ஓயாமல் எழுதிடும் அறிக்கைகள், கட்டுரைகள், கடிதங்கள் என ஒவ்வொரு நொடியையும் தமிழர் தலைவர் பயன்படுத்தி வருகிறார்!
பொதுவாக ஒரு மணி நேரத்தில், ஒரு மணி நேரம் வேலை செய்வார் என்றால், இதுபோன்ற காலங்களில், அவசர நிலையாக எண்ணி ஒரு மணி நேரத்தில், இரண்டு மணி நேர வேலைகளைச் செய்வார்! அவ்வளவு வேகம்; அவ்வளவு உழைப்பு! இவையெல்லாம் நமக்குத் தெரிந்த விசயங்கள் தான்!
இப்போது நாம் பேசப் போவது வேறு செய்திகள்! இவ்வளவு கடுமையான உழைப்புக் கொடுக்கும் ஆசிரியருக்கு இணையாக, துணையாக நாமும் சில பணிகளைச் செய்தாக வேண்டும்!
மிக முக்கியமாகத் திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு காலம் பாராது உழைத்திட வேண்டும்! அவரவர்களும் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்யும் போது தான், உழைப்பின் பயனை நூறு விழுக்காடு அறுவடை செய்ய முடியும்!
“பாஜக அரசை ஏன் வீழ்த்த வேண்டும்?” என்கிற ஆசிரியரின் நூலும், இன்னபிற தேர்தல் தொடர்பான நூல்களும் விரைவில் வெளிவர இருக்கிறது! அதற்கான வேலைகளை விடுதலை அச்சக ஊழியர்கள் விரைந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!
வட மாநிலங்களில் தேர்தல் நிலவரங்கள் என்ன? பாஜகவுக்கு எதிராக மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? என்கிற விவரங்களை வெளியுறவுப் பொறுப்பாளர்கள் கவனித்து வருகிறார்கள்!
ஏப்ரல் 2 முதல் 17 வரை நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரங்கள், அதுகுறித்த முன்னேற்பாடுகளைச் சுற்றுப் பயண ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகிறார்கள்!
அந்தந்த ஊரில் தேர்தல் பொதுக் கூட்டங்களை நடத்திட, அனைத்துத் தோழர்களையும் ஒருங்கிணைத்து மாவட்டத் தலைவர், செயலாளர்கள் மும்மரமாய் பணியாற்றி வருகிறார்கள்!
ஆக அவரவர் வேலைகளை அவசரப் பிரகடனம் போல் நினைத்து, கடுமையாய் உழைத்து வருகிறார்கள்! இந்நிலையில் தகவல் தொழில் நுட்பக் குழுவினரின் பணிகள் என்ன? அதற்கு முன் தகவல் தொழில் நுட்பக் குழுவில் யார் யார் இருக்கிறார்கள்?
நமது இயக்கத்தில் ஏராளமான அணிகள் உள்ளன. அந்தந்த அணிகளின் பொறுப்பாளர்கள் தங்கள் பணி களைச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்! அதற்கு நம் பாராட்டுகள்! அதே நேரத்தில் இந்த மொத்த அணிகளும் சேர்ந்தது தான் திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக் குழு ஆகும்! தவிர பிற மாநிலங்கள், வெளிநாடுகள், குறிப்பாகப் பன்னாட்டு அமைப்புத் தோழர்களும் இந்தத் தகவல் தொழில் நுட்பக் குழுவின் அங்கம்!
நமது இயக்கத்தில் கழக மாவட்டங்கள் 70 உள்ளன. கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர், வடசென்னை, தென் சென்னை, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், செய்யாறு, திருவண்ணாமலை, தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம், ஆத்தூர், மேட்டூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், அரியலூர், பெரம்பலூர், புதுச்சேரி, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, திருச்சி, இலால்குடி, துறையூர், கரூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நீலமலை, திருப்பூர், தாராபுரம், ஈரோடு, கோபி செட்டிப்பாளையம், நாமக்கல், சிவகங்கை, காரைக்குடி, இராமநாதபுரம், திண்டுக்கல், பழனி, தேனி, கம்பம், உசிலம்பட்டி, மேலூர், மதுரை, மதுரை மாநகர், விருதுநகர், இராஜபாளையம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 70 மாவட்டங்கள்.
இதன் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் பொறுப்புகளில் இல்லாத தோழர்களுக்கும் கூட்டுப் பொறுப்பு உண்டு. மார்ச் 2 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற தகவல் தொழில் நுட்பக்குழு மாநில கலந்துரையாடல் கூட்டத்தில், தமிழர் தலைவர் பேசும் போது மிக முக்கியமான கருத்துகளைப் பேசினார்கள்!
ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய அவசியத்தையும், தேவையையும் எடுத்துக் கூறினார்கள். அந்நிகழ்ச்சிக்குப் பிறகு கணிசமான அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கு மகிழ்ச்சியும்! பாராட்டுகளும்! ஆனால் அது முழுமை பெற வேண்டும்! ஒருகை – ஓசை தராது! பலத்த சத்தம் தேவைப்படுகிறது! அவரவர்களுக்கு முடிந்த அளவிற்குக் கரவொலியைத் தர வேண்டும்!
கரோனா காலத்தில் விடுதலையின் றிஞிதி வடிவம் இலட்சக்கணக்கில் சென்றது. அதைவிட பலமடங்கு இப்போது அனுப்பப்பட வேண்டும். ஆயிரக்கணக்கான தோழர்கள் வாட்சப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைத் தினமும் பயன்படுத்துகிறார்கள். அப்படியான சூழலில் ஒருங்கிணைந்து, செய்திகளைப் பரப்ப வேண்டும்! குறிப்பாகத் தலைமைக்
கழகத்தில் இருந்து வரும் செய்திகளைப் பரப்பிட வேண்டும்!
500 தோழர்கள் இணைந்து ஒரே வகையான செய்திகளைப் பதிவு செய்தால், அது 50,000 பேருக்கு அடுத்த சில மணி நேரங்களில் சென்றுவிடும். அதுதான் நாம் எதிர்பார்க்கும் விளைவு! இதுவே 1000 தோழர்கள் இணையும் போது, அது இலட்சங்களைத் தொட்டுவிடும்!
ஒரு மைதானத்தில் ஆங்காங்கே, உதிரிகளாக நிற்கும் மனிதர்களுக்கும், அதே மைதானத்தில் வரிசையில் நிற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மனிதர்களுக்கும் வேறுபாடு உண்டு தானே? அதுதானே ஈர்ப்பைப் பெறும்; அதுதானே பேசப்படும்!பெரும்பான்மைப் பலம் என்பது இங்கே மிக முக்கியமானது! ஒற்றுமையான செயல்பாடுகள் என்பதும், ஒருங்கிணைந்த மக்கள் திரள் என்பதும் பெரும் வெற்றியைத் தேடித் தரும்!
எனவே தோழர்களே! சக கொள்கையாளர்களுக்கே செய்திகளைப் பகிர்ந்து கொள்ளாமல், உடனே புதிய வாட்சப் குழுவை “பிராட்கேஸ்ட்” மூலம் (Broadcast) தொடங்குங்கள்! அதில் நமது உறவினர்கள், பொதுவான நண்பர்கள் என ஒருவர் விடாமல் சேருங்கள்! ஒவ் வொருக்கும் பல நூறு தொடர்புகள் இருக்கும்!
விடுதலை நாளிதழின் PDF வடிவத்தை அப்படியே அனுப்புவது ஒரு வகை என்றாலும், தேர்தலை முன்னிட்டு குறிப்பிட்ட செய்திகளைத் தேர்வு செய்து அனுப்புவது மிக, மிக முக்கியம் ஆகும்!
1) ஆசிரியர் அறிக்கையின் முக்கியமான சாராம்சங்கள்.
2) விடுதலையில் வரும் புள்ளி விவரங்கள்
3) பாஜகவுக்கு எதிரான ஆதாரப்பூர்வமான ஆவணச் செய்திகள்
4) திமுக அரசின் சாதனைப் பட்டியல்கள்
5) பாஜகவுக்கு எதிராக வட மாநிலங்களில் நடைபெறும் மக்கள் எழுச்சி
6) தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆசிரியர் பேசும் அடுக்கடுக்கான ஆதாரங்கள், செய்திக் குவியல்கள்
7) கூட்டணி கட்சித் தலைவர்கள் பேச்சில் இருந்து முக்கியக் குறிப்புகள்
போன்ற தேர்தல் தொடர்பானவைகள் பிரித்துப் பிரித்து, வகை வகையான செய்திகள் உங்களுக்கு அனுப் பப்படும். அதை எட்டுத் திக்கும் பரப்பிடும் பணியை நாம் செய்தாக வேண்டும்!
எந்த ஒரு உணவகத்திலும் சமையல் செய்யும் இடத்தைப் போய் பார்த்தால், நம்மால் சாப்பிடவே முடியாது. ஆனால் அந்த இடத்தில் தயார் செய்யப்பட்ட உணவை சீருடை அணிந்து, தலைக்கும், கைக்கும் உறை அணிந்து, பார்க்கவே அழகாகப் பரிமாறுவார்கள்! வெளிப் படுத்துதல் (Presentation)என்பது மிக முக்கியம்!
தேர்வில் கூட மாணவர்களுக்குச் சில கேள்விகளுக்கு முழுமையான பதில் தெரியாது. அதற்காக சோர்வடைந்து ‘ஏனோ தானோ’ என எழுதக் கூடாது என ஆசிரியர்கள் வலியுறுத்துவார்கள். தெரிந்த வரை உள்ள பதில்களை அழகான வடிவத்தில், முறையான வகையில் எழுத வேண்டும். அந்தப் பொறுப்புணர்ச்சிக்கும், நேர்த்தியான நடைமுறைக்குமே சில மதிப்பெண்கள் கிடைக்கும்!
அதுபோலவே வாழ்வா? சாவா? என்கிற இந்தத் தேர்தல் காலத்தில் நமது வெளிப்பாடுகள், நமது உழைப்பு மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது! அதுவும் அவிழ்த்து விடப்பட்ட நெல்லிக்காயாய் சிதறி நிற்காமல், ஓரிடத்தில் குவிந்து, நின்று, நிதானித்து, ஓங்கி அடிக்கும் பணியை நாம் செய்தாக வேண்டும்!
இன்னும் சொன்னால் நாம் எந்தச் செய்திகளையும் தேடிப் படிக்க வேண்டியதில்லை. அதற்காக நேரமும் செலவழிக்க வேண்டியதில்லை! நாளொன்றுக்கு தமிழ், ஆங்கில நாளிதழ்கள், தொலைக்காட்சி செய்திகள், வார, மாத இதழ்கள் என ஒன்றையும் விடாமல் படித்து, தமிழ்நாட்டிற்கு ஏற்ற வகையில் ஆசிரியர் தயார் செய்து தருவது தான் அறிக்கைகள், கட்டுரைகள், கடிதங்கள், மேடைப் பேச்சுகள்! எனவே அவற்றைப் பரப்புவதில் மட்டும் முனைப்புக் காட்டுவோம்! ஏனைய செய்திகள் மற்றும் கொள்கைப் பிரச்சாரங்களை ஆசிரியர் கூறி யுள்ளது போல ஒரு மாதம் ஒத்தி வைப்போம்!
தமிழர் தலைவரின் சுற்றுப் பயண விவரங்களும் அதாவது எந்தெந்த தேதியில், எந்தெந்த ஊர் என்கிற விவரமும் அழகான வடிவமைப்பில் தயார் செய்து அனுப்பப்படும். காலை எழுந்ததும் முதல் வேலையாக வாட்சப், முகநூல், ட்விட்டர் போன்ற அனைத்திலும் அதைப் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் குறைந்தது ஆயிரம் பேர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்! திராவிடர் கழகத்தின் பணி என்ன? தமிழர் தலைவரின் உழைப்பு என்ன? என்பதை நாம் தானே தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்! அதன் பிறகு விடுதலையில் வரும் செய்திகள் பலாப்பழ சுளை போல எடுத்துத் தரப்படும். அதையும் தமிழ்நாடு முழுக்க எடுத்துச் செல்ல வேண்டும்!
குறிப்பாகத் திண்ணைப் பிரச்சாரம், டீக்கடைப் பிரச்சாரம், சலூன் கடைப் பிரச்சாரம் எல்லாம் சுருங்கி “வாட்சப்” பிரச்சாரமாக மாறிவிட்டது! உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பிக் கொண்டே இருப்போம்! சமையல் எப்படி இருந்தாலும் பரவாயில்லை; பரிமாறுதல் அன்பாய் இருக்க வேண்டும் என்பார்கள். நமது கருத்துகளை வெளிப்படுத்தும் போது தடிமனான சொற்கள் இருக்கக் கூடாது, கோபம் தெரியக் கூடாது, பொய் அறவே கூடாது! நம் கருத்தைப் படிக்கும் எதிராளிகளே ஒரு கணம் திக்கித்துச் சிந்திக்க வேண்டும்! அதுதான் அணுகுமுறைக்கு கிடைக்கும் வெற்றி!
அப்படியான அணுகுமுறையால் ஆசிரியர் சம்பாதித்த நட்பு மனிதர்கள் ஆயிரமாயிரம்! எனவே நமக்குச் சாதகமான கருத்து என்பதற்காக, அதைக் கடும் சொற்களால் நிரப்பக் கூடாது! நம் நியாயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, கடும் சொற்களே முன்னுக்கு வந்து நிற்கும்!
எனவே இந்த ஒரு மாதக் காலம் என்பது அவசர நிலை காலம்! போர்க் காலம்! நாம் ஒவ்வொருவரும் கள வீரர்களாய் களத்தில் நிற்போம்! நம்மால் முடியாதது யாராலும் முடியாது! யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்! இது ஒரு தன்னம்பிக்கை வரி! வாய்ப்பிருந்தால் ஓரிரு நாளில் ஜும் (Zoom) வாயிலாகச் சத்திப்போம்! கலந்து பேசுவோம்! தமிழ்நாட்டையும், இந்தியாவையும் காப்பாற்றும் பணிக்குத் தோள் கொடுப்போம்! அந்த வரலாற்றுப் பெருமையில் அங்கம் வகிப்போம்! நன்றி!