வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட சமூக, பொருளாதார பிரச்சினைகளை அரசால் தீர்க்க முடியாது என்று ஒன்றிய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ILO மற்றும் The Institute for Human Development இணைந்து “இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024: இளைஞர் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் திறன்கள்” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை 27.3.2024 அன்று வெளியிட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அனந்த நாகேஸ்வரன், “அரசாங்கத்தின் தலையீடு ஒவ்வொரு சமூக மற்றும் பொருளாதார சவால்களையும் தீர்க்க முடியும் என்று நினைப்பது தவறானது” என்று பேசியுள்ளார்.
“இன்றைய வர்த்தக உலகில் வணிகத் துறைதான் வேலையின்மை பிரச்சினையைத் தீர்க்கமுடியும்; அரசாங்கம் என்ன செய்ய முடியும் ?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கார்ப்பரேட் வருமான வரிச் சலுகைகள் மற்றும் வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகளுக்கான மானியங்களையும் சுட்டிக்காட்டிய அனந்த நாகேஸ்வரன், “வரிக் குறியீடு மூலதன குவிப்புக்கு சாதகமாக இல்லை; அது உண்மையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவே சாதகமாக உள்ளது” என்று பேசினார்.
சமீப ஆண்டுகளில் வேலைவாய்ப்பைத் தூண்டுவதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை, திறன் மேம்பாடு போன்றவற்றைப் பட்டியலிட்ட அவர் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், ‘சோ’ எழுதி இயக்கி ’70களில் வெளியான அரசியல் நையாண்டி திரைப்படமான ‘முகமது பின் துக்ளக்’ படத்தை மேற்கோள்காட்டி பேசிய அனந்த நாகேஸ்வரன், “ஒரு கற்பனையான நாட்டின் பிரதமராக இருக்கும் கதாநாயகன் அரசால் தீர்க்க முடியாத பிரச்சினையை எப்படிக் கையாளுவது?” என்று கூறுவார்.
வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தீர்க்க வேண்டும் என்று மேடைக்கு மேடை பேசுவேன், அதுவே வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்ப் பதில் எனது பங்களிப்பு, ஏனென்றால் இது என்னால் முடியாத காரியம்” என்று சோ அந்தப் படத்தில் கூறுவார்; அதுபோல் இது அரசால் முடியாத காரியம் என்று அனந்த நாகேஸ்வரன் பேசினார்.
இப்படி சொல்லுபவர் ஏனோ, தானோ பேர் வழியல்ல; ஒன்றிய மோடி அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் என்பது நினைவில் இருக்கட்டும்!
இது மறைமுகமாக இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடியைக் கேலி செய்வது போலிருக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு இரண்டு கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்புத் தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்து, மக்களின் வாக்குகளைப் பெற்று பிரதமர் ஆனவர் மோடி.
இந்தப் பிரச்சினை பெரிதாக வெடித்தபோது, “பக்கோடா விற்றுப் பிழைப்பதும் ஒரு வேலை வாய்ப்புத்தான்!” என்று சொன்ன – உலகில் எங்கும் காணக் கிடைக்காத ‘அதிசய பிரதமர்’ நமது மோடி ஜிதான்.
இதில் என்ன கொடுமை என்றால், ஆண்டுக்கு இரண்டு கோடி பேர்களுக்கு வேலை கொடுக்காமல் இருந்ததுகூட போய்த் தொலையட்டும்; இரண்டரைக் கோடி பேர் வேலை இழந்ததுதான் மோடி ஆட்சியின் மகத்தான சாதனை!
பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக் கைகளால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் சிதைந்தன. இதன் காரணமாக வேலை வாய்ப்பை இழந்தவர்கள் எத்தனை கோடி?
ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கேகூட தெரியாமல், திடீரென்று ஓர் இரவில் ரூபாய் மதிப்பிழப்பை அறிவித்த பொருளாதார மேதை (?) பிரதமர் மோடி ஆயிற்றே! குதிரை குழி பறித்ததோடு அல்லாமல் உள்ளேயும் ஆளைத் தள்ளிய கதைதான் மோடி தலைமையிலான விபரீத ஆட்சி! கிராமப்புறங்களில் நூறு நாள் வேலைத் திட்டத்தைக் கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (UPA). அதிலும் கை வைத்தது பிஜேபி அரசு. 2022 – 2023 ஆம் நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.89 ஆயிரம் கோடி நடப்பாண்டில் ரூ.60 ஆயிரம் கோடியாகக் குறைக்கப் பட்டதே! இதற்குச் சப்பைக் கட்டு கட்டுகிறாரோ தலைமைப் பொருளாதார ஆலோசகர்!