‘மைனிங்’ ஊழல் மன்னன் காலி ஜனார்த்தன ரெட்டி
பா.ஜ.க.வில் சேர்க்கப்பட்ட போது …
வாரிசு அரசியலையும், ஊழலையும்ஒழிக்கவே தான் இந்த பூமியில் அவதரித்துள்ளதாக அலப்பறை கிளப்பிக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியின் முகத்திரை நாளும் நாளும் கிழிந்து தொங்கத் தொடங்கி வரு கிறது.பி.ஜே.பி. உண்மையிலேயே வாரிசு அரசியலைஒழிக்கிறதா? தமிழ்நாட்டில் டாக்டர் ராம்தாஸ் – அன்புமணி தலைமையிலே இயங்கும் பாட்டாளி மக்கள் கட்சியுடனும், மூப்பனாரின் மகன் வாசன் தலைமை ஏற்று நடத்தும் தமிழ் மாநில காங்கிரசுடனும், கருநாடகத்தில் தேவகவுடா, அவர் இளைய மகன் குமாரசாமி, மூத்த மகன் ரேவண்ணா, குமாரசாமியின் மனைவி, ரேவண்ணாவின் மனைவி, குமாரசாமியின் மகன், ரேவண்ணாவின் மகன் என்று ஒட்டுமொத்தக் குடும்பமே நடத்திக்கொண்டிருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS) கட்சியுடனும், என்.டி.ராமராவ் ஆரம்பித்து பின்னர் அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு தலைவராகவும், நாயுடுவின் மகன் நாரா லோகேஸ் பொதுச்செயலாளராகவும் விளங்கிடும் தெலுங்கு தேசம்கட்சியுடனும் வடக்கே ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராஜ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி யுடனும், கூட்டணி வைத்து பா.ஜ.க., தேர்தலை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதெல்லாம் தெரிந்தும், மோடி, வாரிசு அரசியலை ஒழிக்கப் போகிறேன்” என்று கூறிக்கொண்டு திரிவதைப் பார்க்கும் போது, மக்களின் உடலில் உள்ள அத்தனைப் பொறிகளிலிருந்தும் சிரிப்பு வெடித்துக் கிளம்பத்தானே செய்கிறது!
மறைந்த பெருங்கவிஞர் ஒருவர், அதிக அளவில் மது அருந்திக் கொண்டிருப்பதைக் கண்ட அவரது நண்பர் ஒருவர், ‘இப்படி ஓய்வின்றி குடித்து உடம்பைக் கெடுத்துக் கொள்கிறீர்களே, ஏன்?’ – என்று கேட்டபோது “நாட்டிலேயுள்ள மதுவை எல்லாம் நாமே குடித்துத் தீர்த்துவிட்டால் மது ஒழிந்து விடுமல்லவா” – என நகைச்சுவையுடன் கூறினாராம். அந்தக் கவிஞனின் மது ஒழிப்பு நடவடிக்கையும் மோடியின் வாரிசு ஒழிப்பு அரசியலும் ஒரே ரகத்தைச் சார்ந்ததாகவே இருக்கிறது!
“வாரிசு அரசியலை ஒழிப்பதே இலட்சியம்என்று கூறி இப்படி வாரிசுக் கட்சிகளுடன் கூட்டணிசேர்கிறீர்களே?”என்று கேட்டால் அது குறித்து மனிதர் வாயைத் திறப்பதே இல்லை; இடத்துக்குத் தகுந்தாற்போல அலிகார் பூட்டையும், திண்டுக்கல் பூட்டையும் வாங்கி வாயைப் பூட்டிக் கொள்கிறார்!மோடி அமைச்சரவையில் உள்ள வாரிசுகள் பட்டியல் படங்களோடு, (செய்தி ஊடகங்கள் பல இருட்டடிப்பு செய்த நிலையிலும்) சமூக ஊடகங்களில் வந்தனவே; ஏன் எதிர்க்கட்சியினர் பலரும் பா.ஜ.க.வை ஆக்ரமித்துள்ள வாரிசு களைப் பட்டியலிட்டுக் கேட்டனரே; அதற்கு பதில் அளித்தாரா? அந்தப் பிரச்சினை குறித்து பதிலளிக்காது வாயை ஜிப் போட்டு தைத்து வைத்துக் கொண்டவர்கள்தானே மோடி, அமித்ஷா, நட்டா கூட்டாளிகள்!மோடி வாரிசு அரசியலை ஒழிக்கும் இலட்சணம் இப்படி சந்தி சிரிக்கையில், அவர் ஊழலை ஒழிக்கப் போவதாகக் கூறுவது, சாக்கடை சகதியில் ஊறிடும் பிராணி – சுத்தம் பற்றி மேடை ஏறி சத்தம் போட்டு முழங்குவது போலவே இருக்கிறது.
• 526 கோடிக்கு மன்மோகன்சிங் அரசு வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்ட ரஃபேல் விமானங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டு, அதே விமானங்களை சுமார் 1670 கோடி கொடுத்து வாங்குவதாக மோடி அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது.
• மன்மோகன் சிங் அரசு போட்ட ஒப்பந்தப்படி18 விமானங்கள் மட்டுமே உடனடி தயார் நிலையிலும், மீதி 108 விமானங்கள் இந்தியாவிலேயேதயாரிக்கப்படும். ஆனால் மோடி ஒப்பந்தப்படி எல்லாமே பிரான்சில்தான் தயாரிக்கப்படும்.மன்மோகன்சிங் அரசின் ஒப்பந்தப்படி ரஃபேல் விமானம் தயாரிக்கும் நிறுவனம், இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல்.(HAL) நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்புவழங்கும். மோடியின் ஒப்பந்தப்படி, விமானத்தயாரிப்பில் எந்தவித அனுபவமுமில்லாத அனில்அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு தரப்படும். (2015இல் மோடி பிரான்ஸ் சென்றுரஃபேல் விமானம் வாங்கப்படும் என்று அறிவித்த போது, அவருடன் பிரான்ஸ் சென்றவர் அனில் அம்பானி!)
நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான விமானங்கள் வாங்குவதில் இத்தனை குளறுபடிகள் நடந்ததற்குக் காரணம் என்ன? என்றெல்லாம் ஊழல் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும்சுட்டிக் காட்டி எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி வாயையே திறக்க வில்லை; இந்தப் போர் விமானங்கள் வாங்கியவிலையை, ரகசியமாகவே மோடி வைத்திருந்ததும்இங்குகுறிப்பிடத்தக்கது! பிரான்சுக்கு அனில் அம்பானியோடு பறந்து சென்று ரஃபேல் விமானம் வாங்கப்படும் என்று அறிவித்ததிலிருந்து, ஒப்பந்தம் போட்ட வரை நேரடியாகத் தொடர்பிலிருந்தவர் பிரதமர் மோடி! எதிர்க்கட்சிகள் எழுப்பிய குரல் எல்லாம் மோடியின் காதில் விழாதது போல, அதற்கு பதிலே கூறாது கடைசிவரை இருந்த மற்றும் இருந்து கொண்டிருக்கும் மோடிதான் ஊழலை ஒழிக்கப் போகிறாராம்!
சி.ஏ.ஜி. அறிக்கைப்படி பா.ஜ.க. அரசில் நடை பெற்ற ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஊழல், தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.8 ஆயிரத்து 250 கோடி ஊழல் போன்றவை குறித்தும் வாயையே திறப்பதில்லை மோடி!
இப்போதும் நமக்கு மதுவை எல்லாம் குடித்து மதுவை ஒழிக்கப் போவதாகச் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது! அப்படித்தான் ஊழல் பேர் வழிகள் என்று மோடியால் குற்றம் சாட்டப்பட்ட எதிர்க்கட்சியினரை அழைத்து பா.ஜ.க.வில் சேர்த்து அவர்களை புனிதமாக்கிக் கொண்டிருக்கிறார்மோடி! மோடி நடத்தும் யோக்ய நாடகத்தை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது!
இப்போது மிகச் சமீபத்தில் கருநாடக மாநிலத்தில், ஒரு பெரும் புள்ளி பி.ஜே.பி. யில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். இவர் மேனாள் பி.ஜே.பி. தான்!
ஒரு காலத்தில் கருநாடக மாநில பி.ஜே.பி. யில் அமைச்சராகவும், ‘கிங்மேக்கராக’வும் இருந்தவர் பெயர் காலி ஜனார்த்தனரெட்டி! சட்டவிரோதமாக கனிம வளங்களையும் இரும்புத் தாதுக்களையும் அள்ளி விற்பனை செய்ததாக 2011 ஆம் ஆண்டு சி.பி.அய்.யால் கைது செய்யப்பட்டவர்.
2008 ஆம் ஆண்டு கருநாடக மாநிலத்தில் பி.ஜே.பி. அரசு நடந்தபோதுதான் இவர் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு ஊழல் செய்ததாகக் கூறப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் அவர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 2008 ஆம் ஆண்டு பி.ஜே.பி.யின் ஆட்சி எடியூரப்பா தலைமையில் கருநாடகத்தில் நடந்தபோது அவர் அமைச்சராக இருந்தவர். ‘Mining Mafia’(இரும்புதாது சுரங்கக் கொள்ளைக் கும்பல்) என ஒரு கட்டத்தில் பி.ஜே.பி. தலைவர்களாலேயே வருணிக்கப்பட்டவர்! பிறகு பி.ஜே.பி.யைத் துறந்து தனிக் கட்சி துவங்கினார் இவர்! அந்தக் கட்சி கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது!
ஓரிடத்தைத் தவிர போட்டியிட்ட எல்லா இடங் களிலும் தோற்றிருந்தாலும் பெல்லாரி பகுதிகளில் அந்தக் கட்சியினர் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தனர்! இவர் தனிக் கட்சித் தொடங்கி யிருந்தாலும், இவரது கூட்டாளிகளாக இருந்த சகோதரர்கள் பி.ஜே.பி.யில் தொடர்ந்தார்கள். பி.ஜே.பி. வேட்பாளராகசென்ற தேர்தலில் களம் இறங்கி காங்கிரஸ் வேட்பாளர்களிடம் தோற்றனர்! தோற்றபின் செய்தி யாளர்கள் அவர்களை பேட்டி கண்டபோது, “பி.ஜே.பி.யையும் எங்களையும் பயன்படுத்திக் கொண்டு சட்ட விரோத மாக பணம் சம்பாதித்தவர் ஜனார்த்தன ரெட்டி; இந்த உண்மை மொத்த உலகுக்கே தெரியும்” – என்று வெளிப்படையாக பி.ஜே.பி.யின் யோக்யதையை போட்டு உடைத்தனர்!
ஜனார்த்தன ரெட்டி, சட்ட விரோதமாக இரும்புத்தாது எடுத்து ஏற்றுமதி செய்ததில் ஏறத்தாழ 35,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள் ளதாக குற்றம் சாட்டப்பட்டு கைதானவர்! சி.பி.அய். இவர் மீது 8வழக்குகள் தொடர்ந்திருந்தது.
அது மட்டுமல்ல; ரெட்டி சகோதரர்களில் ஒருவரும், தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியில் இருந்து கொண்டிருப்பவருமான காலி சோம சேகரரெட்டி, தனது சகோதரர் ஜனார்த்தன ரெட்டியை ‘பிணையில்’ விட, சி.பி.அய். தனி நீதிமன்ற நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதானார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத் தகுந்தது!
ஊழலை ஒழிக்கப் புறப்பட்டி ருக்கும் மோடி கூட்டத்தில் மீண்டும் இணைந்திருக்கும் இந்த காலி ஜனார்த்தன ரெட்டி குறித்தும் பல ஆயிரம் கோடி ஊழல் வழக்குகள் குறித்தும் பலர் மறதிருக்கக்கூடும். மறந்தவர்கள் சுலபமாக நினைவுகூர, அவர் குறித்தும் அவரது உடைமைகள் குறித்தும் ஏடுகளில் அன்றுவந்த சில செய்திகளைக் குறிப்பிட்டால் திடீரென நினைவில் பளிச்சிடக்கூடும்! அத்தனையும் தங்க மயமான செய்திகள் அல்லவா? ஜனார்த்தன ரெட்டி அமரும் நாற்காலி தங்கத்தால் ஆனது (அன்றைய மதிப்பில் 2.2 கோடி ரூபாய்) அவரது பூஜை அறையில் இருந்த பூஜை பாத்திரங்கள் அனைத்துமே தங்கத்தால் செய்யப்பட்டவை. (அன்றைய மதிப்பு 2.58 கோடி ரூபாய்) வீட்டில் உணவருந்த வைத்திருந்த தங்கத் தட்டுகள், கிண்ணங்கள், சிறிய பெரிய கரண்டிகள், முள் கரண்டி, ஸ்பூன் போன்ற தங்க உபகரணங்களின் மதிப்பு ரூ.20.87 லட்சம். அவர் வீட்டில் வைத்திருந்த தங்க நகைகளின்பட்டியலே மூன்று முழு பக்கங்களைக் கடந்தவை!இப்படி தங்கப் பட்டியலே பக்கம்பக்கமாக நீளக் கூடியவை! அவர் மீதான கிரிமினல் வழக்குகள் பல ஆண்டுகளாக நீண்டு கொண்டிருக்கின்றன.
இந்த நபர் பா.ஜ.க.வின் மேனாள் அமைச்சர்! “ஊழலை ஒழிப்பதே தனது தலையாயக் கடன்!” எனக் கூறி நாட்டை நித்தம் நித்தம் ஏமாற்றிக் கொண்டிருக்கும் மோடி கட்சியில் இப்போது மீண்டும் ஒரு முக்கியப் புள்ளியாகி யுள்ளார்!
“இருக்கின்ற மதுவை எல்லாம் குடித்து மதுவை ஒழிக்கப் போகிறேன்” – என்று கவிஞர் நகைச்சுவையாகக் கூறினாரே, அதுபோல மோடி கூட்டமோ, இருக்கிற ஊழல் பேர்வழிகளை எல்லாம் தங்களோடு இணைத்து ஊழலை ஒழிக்கப் போகிறோம் என்று கூறப் போகிறார்களோ என்னவோ!
“சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி
– எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே,”என்ற மலைக்கள்ளன் படத்துப் பாடல், இந்த மகா கொள்ளையர்களுக்கு எத்தனை தத்ரூபமாகப் பொருந்தி வருகிறது பார்த்தீர்களா?
வரும் தேர்தலில் இந்த ஏமாற்றுப் பேர் வழிகளின் எத்து வேலைகளுக்கு முடிவுகட்ட எழுவோம்; செயல்படுவோம்!
நன்றி: ‘முரசொலி’, 29.3.2024