தஞ்சாவூரில் 25.3.2024 மாலை நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட அய்ந்தாவது தீர்மானம் வருமாறு:
“சென்னை மியூசிக் அகாடமி என்ற அமைப்பு கர்நாடக இசைக் கலைஞரும் சமூக நல்லிணக்க உணர்வுடன் செயல்பட்டுவருபவருமான டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி விருது’ வழங்கப்படுமென அறிவித்திருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஞ்சனி-காயத்ரி என்ற இரண்டு பாடகிகள், டி.எம்.கிருஷ்ணா பெரியாரைப் பற்றி பாடல் பாடியிருக்கிறார் என்றும், கருநாடக இசையில் சமூகக் கருத்துகளைப் பாடுவதையும் காரணம் சொல்லி, தந்தை பெரியாரைக் குறித்த அவதூறுகளையும், அபாண்ட மான குற்றச்சாட்டுகளையும் தெரிவித்துள்ளனர். அதனையொட்டி மேலும் சில பார்ப்பனக் கோஷ்டிகளும் அவர்களுடன் இணைந்துள்ளன. பெரியார் மீதான அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருவதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், இந்த விவகாரத்தில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகவும், தந்தை பெரியார் பற்றிய அவதூறுகளுக்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் ஒரே ராகத்தை இசைப்பதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்திருப்பது மிகவும் தெளிவாகிறது.
ஆனால், இப்பிரச்சினையில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதில் மியூசிக் அகாடமியும், அதன் தலைவர் என்.முரளியும் காட்டிவரும் உறுதி பாராட்டுக்குரியதாகும்.
தந்தை பெரியார் ஜாதி, மத, இன, மொழிகளுக்கு அப்பாற்பட்ட மனிதநேயத் தலைவர். அவரை இழிவு செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. பெரியார் மீது அவதூறு பரப்புவோர் மன்னிப்புக் கேட்கவில்லையெனில், மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்று இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.”
மேற்கண்ட தீர்மானம் எதை வெளிப்படுத்துகிறது? சங்கீதம் என்றால் பார்ப்பனத் தன்மை கொண்ட கருத்துகளையும் வேத இதிகாச, புராண கற்பனைக் குப்பைகளைக் கருவாகக் கொண்டே பாடப்பட வேண்டும்; பார்ப்பனராக இருக்கும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்கள் தப்பித் தவறி இவற்றிற்கு மாறாக முற்போக்குக் கருத்துகளையும், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் குறித்தும் பாடினால் அது சங்கீதத் தோஷம் என்கிற புத்தி பார்ப்பனர்களுடைய குருதியில் ஊறிக் கிடக்கிறது என்பதை – காலந் தாழ்ந்தாலும் – பார்ப்பனரல்லாதார் புரிந்து கொள்ள வேண்டும்.
தெலுங்கு, சமஸ்கிருதப் பாடல்களைத் தவிர தமிழில் பாடினாலும் கூட தீட்டு, தோஷம் என்று கருதப்பட்ட காலமும் உண்டு.
திருவையாறில் ஆண்டுதோறும் தியாகராஜ அய்யர் விழா நடைபெற்று வருகிறது. சங்கீத வித்வான்கள் எல்லாம் பங்கு கொண்டு பாடுவார்கள். அந்த வகையில் “இசை அரசு” தண்டபாணி தேசிகர் “சித்தி விநாயகனே” என்ற பாடலைப் பாடினார். அடுத்துப் பாட வேண்டிய அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் ‘தண்டபாணி தேசிகர் தமிழ்பாடி சந்நிதானத்தைத் தீட்டுப்படுத்தி விட்டார் நான் இந்த மேடையில் பாட மாட்டேன்!” என்று கூச்சல் போட்டு அமளி துமளி செய்தார்.
சந்நிதானம் தீட்டுக் கழிக்கப்பட்ட பிறகு தான் அரியக்குடி அய்யங்கார் வாள் பாடினார். இதுகுறித்து மு. கருணாநிதி என்ற பெயரில் “தீட்டாயிடுத்து?” என்ற தலைப்பில் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ‘குடிஅரசு’ இதழில் (19.2.1946) எழுதினார். என்பதையும் இந்த இடத்தில் நினைவூட்டுவது – பொருத்தமானதும் அவசியமானதுமாகும்.
‘சித்தி விநாயகன்’ என்று கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் பாடினாலும் அதனைத் தமிழில் பாடினால் ‘தோஷம்’, ‘இழிவு’ என்ற மனப்பான்மை பார்ப்பனர்களுக்கு இருந்து வந்தது – வருகிறது என்பதை மறக்கக் கூடாது.
இந்தத் துறையிலும் தந்தை பெரியார் கால் பதித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் (1930 மே 12) முதலாவது தமிழ் மாகாண சங்கீத மாநாடு நடத்தப்பட்டது.
4000 பேர்களுக்குமேல் ஆண்களும், பெண்களும் கூடி மகிழ்ந்தனர். மாநாட்டிற்கு திரு. கே. பொன்னையா தலைமை வகித்து அரியதோர் சொற்பொழிவினை வழங்கினார்.
மாநாட்டில் பங்கேற்ற முக்கிய இசை மேதைகளான காஞ்சிபுரம் நயினாபிள்ளை, சிதம்பரம் கே. பொன்னையா பிள்ளை, கீவளூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, திரு விழிமலை சாமி நாதபிள்ளை, சேலம் பழனிசாமி செட்டியார் என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு; அத்தகையவர்கள் பங்கு கொண்ட மாநாடு அது.
மாநாட்டிற்குத் தலைமை வகித்த திரு. கே. பொன்னையா அவர்கள் தன் உரையில் “சங்கீதத் தொழிலானது ஜன சமூகத்திற்கு பொதுவாக நம் தமிழ் மக்களுள் நீண்ட காலமாக இருந்து வருகிறதென்பதேயாம். ஆகையால் நம் தமிழ் மக்களும், செல்வந்தர்களும், தங்கள் வீட்டு விசேஷ சந்தர்ப்பங்களில், தமிழர்களாகிய சங்கீத வித்வான்களை அதிகமாக வரவழைத்து உற்சாக மூட்ட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இசையிலும் பார்ப்பனர்கள் கொடி கட்டி ஆண்டதால் – அவர்கள் பாடும் மொழி தமிழ் மக்களுக்குப் புரியாமல் இருந்தாலும், தலையை ஆட்டி, தாளம் போட்டு ரசிக்கும் பரிதாபம் இருந்தது – இருந்தும் வருகிறது.
மதுரை சோமு, சீர்காழி கோவிந்தராசன் போன்றவர்களும் இந்தத் தடைகளைக் கடந்துதான் தங்களை நிலை நிறுத்திக் கொண்டார்கள்.
சங்கீத மும்மூர்த்திகள் என்று சொன்னால் திருவாரூரைச் சேர்ந்த சியாமா சாஸ்திரி, தியாகராஜர், மற்றும் முத்துசாமி தீட்சதர் பற்றிதான் பேசுவார்கள். ஆனால் அவர்களுக்கு முந்தைய காலத்தவர்களான தமிழிசைவாணர் களாகிய முத்துத்தாண்டவர் (1560-1640) அருணா சலக் கவிராயர் (1712-1779) மாரி முத்தாப்பிள்ளை (1719-1787) ஆகியோரை இருட்டடிப்பு செய்து விடுவார்கள். முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போதுதான் தமிழ் இசை வேந்தர்களாகிய இவர்களுக்குச் சீர்காழியில் மணி மண்டபம் எழுப்பினார்.
இசைத் துறையிலும் பார்ப்பனர் பார்ப் பனரல்லாதார் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது. பிரபல இசைப் பாடகரான கே.ஜே. யேசுதாஸ் 14 மொழிகளில் இலட்சக் கணக்கான பாடல்களைப் பாடியவர். பத்மசிறீ விருதும், பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட் டவர். அவர் பிறப்பால் கிறித்தவர் என்ற கா ரணத்துக்காக திருவனந்தபுரம் பத்மநாமசுவாமி கோயிலில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டாரே!
இசையில்கூட வருண தருமத்தையும், மதவாதத்தையும் திணித்த கேடு கெட்ட குணம் பார்ப்பனீயத்துக்கு எப்பொழுதுமே உண்டு.
ஆனால் பிறவியில் பார்ப்பனராக இருந்தும் பாடகர் டி.எம். கிருஷ்ணா தந்தை பெரியாரைப் பற்றியும் முற்போக்குச் சிந்தனைகளை மய்யப் படுத்தியும் பாடினால் பார்ப்பனப் பாடகிகளுக்கு ஏன் ஆத்திரம் பொங்கி வழிகிறது?
துஷ்யந்த்சிறீதர் என்ற பார்ப்பனர் சொல்லு கிறார். எம்பார் பாலகிருஷ்ண சாஸ்திரிகள், கமலாமூர்த்தி, காஞ்சிபரமாச்சாரியார் போன்ற வர்களைத் தான் பின்பற்றுவதாகவும், தனக்குக் கோயில் மியூசிக் அகாடமி என்றும் சொல்கிறார்.
தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் மனிதகுல விரோதி சங்கராச்சாரியார்பற்றிப் பாடலாமாம். ஆனால் பிறப்பில் பேதமில்லை; பேதமற்ற இடம்தான் ‘மேலான திருப்தியான இடம்’ என்று கூறும் மானுடக் குலத் தந்தை பெரியாரைப் பற்றிப் பாடக் கூடாது என்றால், பார்ப்பனர்கள் திருந்துவது எப்போதுமில்லை என்ற உறுதிப்பாட்டுக்குத்தானே வர வேண்டியுள்ளது.
டி.எம். கிருஷ்ணா சங்கீத ஞானத்தில் திறமையற்றவர் என்று பார்ப்பனர்களால் சொல்ல முடியவில்லை.
ஆனால் பெரியாரைப் பற்றிப் பாடுவதால் தான் அவர்களுக்குக் குடைச்சல் கொடுக்கிறார். தந்தை பெரியார் மறைந்து அரை நூற்றாண்டு ஆன நிலையிலும் பார்ப்பனர்களின் மூளை யைத் தாக்கும் ஏவுகணையாக அவர் இருக்கிறார் என்பது தான் தந்தை பெரியாரின் தத்துவ பலம்.
இந்த வார ‘துக்ளக்’ (3.4.2024 பக்கம் 16) என்ன எழுதுகிறது? “டி.எம். கிருஷ்ணாவுக்கு விருதை திரு. கி. வீரமணி வழங்கினால் பொருத்தமாக இருக்கும். மியூசிக் அகாடமியில் அல்லா, யேசுநாதர் பற்றிய பக்திப் பாடல்களையும் இனிமேல் தாராளமாகக் கேட்லாம்” என்று தன் பூணூல் முனையால் எழுதுகிறது ‘துக்ளக்’ என்றால் பார்ப்பனப் பூணூல் கூட்டத்தின் வன்மம் எத்தகையது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் கையால் திரு. டி.எம். கிருஷ்ணா விருது பெற வேண்டும் என்று ‘துக்ளக்’ – குருமூர்த்தி கும்பல் வெறுப்புக் கலந்த ஆசையை வெளிப்படுத்தி இருப்பதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.