இதுதான் கார்த்திகைத் தீப விழாவாம்

Viduthalai
3 Min Read

2668 உயரத்தில் தீபமாம்! 

11000 மீட்டர் காடாத் துணி

3500 லிட்டர் முதல் தரம் நெய் பாழ்!

கார்த்திகைத் தீபப் பண்டிகை ஒரு தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கார்த்திகை நட்சத்திரத் தினத்தை “சுப்ரமணியன்” என்னும் சாமிக்கு உகந்த நாளாகக் கருதி, பக்தர்கள் என்பவர்கள் பூசை களும், விரதங்களும் மேற்கொள் கின்றார்கள். இதில் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த் திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தச் சமயத்தில் சுப்பிரமணியனின் 6 வகையான ஊர்கள் என்று புராணம் கூறும் ஊர்களுக்கு மக்கள் பிரயாணம் செய்து, ரொக்கப் பணத்தைச் செலவு செய்வதோடு, காடு, மேடு, குப்பை கூளங்களில் எண்ணற்ற விளக்குகளை வைப் பதன் மூலம் ஆகும் எண்ணெய், நெய், செலவு, சொக்கப்பனை கட்டி நெருப்பு வைப்பதற்கு ஆகும் செலவு போன்றவற்றுடன், இதனால் மக்களுக்கு உண்டாகும் மூடநம்பிக்கையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்க வழக்கங் களும் பற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!

இந்த மூடப் பண்டிகைக்கு 2 கதைகள் உள்ளன. முதலாவது, ஒரு சமயம் அக்னித் தேவன் என்னும் கடவுள் சப்த ரிஷிகளின் மனைவிமார்களைப் பார்த்து மோகங் கொண் டானாம். அதனை அறிந்து அவனது மனைவி சுவாகாதேவி என்பவள், அவர்களுடன் தன் கணவன் மோகங் கொண்டதால், சப்த ரிஷிகள் சபித்து விடுவார்கள் என்று எண்ணிப் பயந்து, அதனால் தானே வசிஷ்டரின் மனைவி அருந்ததியை விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவம் கொண்டு, தன் கணவன் ஆவலை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்று பெயராம். இவைகள்தாம் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படுபவையாம். இந்த நட்சத்திரப் பெண்கள்தான் சுப்பிரமணியன் என்ற கடவுள் குழந்தையாக இருந்தபோது அதை எடுத்து வளர்த்தார்களாம்!

அடுத்து, இதன்மூலம் அறிவது, பிறர் மனைவிமேல் ஆசைப்படுவது, விபச்சாரம் செய்வது குற்றம் இல்லை. தன் கணவன் எந்தக் காரியத்தை விரும்பினாலும் அதைப் பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைகளாக மனைவி இருக்க வேண்டும் என்பது.

இவ்வாறு நம் மக்களுக்குக் கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள்!

அடுத்த கதை!

ஒரு சமயம் பிரம்மா, விஷ்ணு ஆகிய இரண்டு கடவுள்கள் ஒவ்வொருவரும் முழு முதற்கடவுள் தாம் தாமே என்று கூறிக் கொண்டதனால், இருவருக்கும் வாய்ச் சண்டை ஏற்பட்டு, பிறகு அடிபிடிச் சண்டை ஆகிவிட்டதாம். இதைக் கண்ட பரமசிவன் எனும் கடவுள், வானத்திற்கும் பூமிக்கும் ஆக ஒரு பெரிய ஜோதி உருவில் அவர்கள் இருவருக்கும் இடையில் நின்றானாம். சண்டை போட்டுக் கொண்டு இருந்த இருவரும் திகைத்து நிற்க உடனே பரமசிவன் தோன்றி, ‘இந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகின்றார்களோ அவர்தான் பெரியவர்’ என்றானாம்.

உடனே விஷ்ணு பன்றி உருவம் கொண்டு பூமிக்குள் துளைத்துக் கொண்டு வெகுதூரம் சென்று காண முடியாமல் திரும்பி விட்டானாம்.

பிரம்மன் அன்னப்பறவை வடிவம் கொண்டு ஜோதியின் முடியைக் காண மேலே பறந்து சென்று கொண்டு இருக்கையில், கீழ் நோக்கி ஒரு தாழம்பூ வந்து கொண்டு இருந்த தாம். அதைக் கண்டு பிரம்மன், ‘தாழம்பூவே எங்கிருந்து, எவ்வளவு காலமாய் வருகின்றாய்?’ என்று கேட்கவும், ‘நான் பரமசிவன் முடியில் இ ருந்து கோடிக்கணக்கான வருஷங்களாக வந்து கொண்டு இருக்கின்றேன்’ என்றதாம். உடனே பிரம்மன், ‘நான் சிவன் முடியைப் பார்த்து விட்டதாக சாட்சி கூறுகின்றாயா?’ என்று கெஞ்சினானாம். அதற்குத் தாழம்பூ சம்மதித்ததாம். இதைக் கண்ட சிவன் கோபங் கொண்டு ‘பொய் சொன்னதற்காக பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக் கடவது’ என்றும், “தாழம்பூ இனிமேல் பூசைக்கு உதவாமல் போகக் கடவது” என்றும் சாப மிட்டாராம்.

உடனே, பிரம்மாவும் விஷ்ணுவும் வருந்தி – திருந்தி சிவன் தான் பெரியவன் என்பதை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக, “இம்மலையின் மேல் ஒரு ஜோதி உருவாகி இருக்க வேண்டும்” என்று கேட்க, அதற்குச் சிவனும் சம்மதம் தெரிவித்து, “மாதத்தில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை, கார்த்திகைப் பண்டிகையில் இந்த மலையில் ஜோதியாய்க் காணப்படுவேன்” என்று சொன் னானாம். இதுதான் திருவண்ணாமலைப் புராணமாகிய அருணாசலப் புராணத்தில் கூறப்படும் கார்த்திகைத் தீபப் பண்டிகையாகும்.

 மூடத்தனம் ஆபாசம் ஒரு பக்கம்  – உற் பத்தி நாசம் இன்னொரு பக்கம் – இது ஒரு பண்டிகையா சிந்திப்பீர்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *