திருவனந்தபுரம்,மார்ச்27- கேரளத்தில் ஆற்றிங்கல் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், ஒன்றிய இணையமைச்சருமான வி.முரளீதரன், பதாகையில் (பேனர்) ஹிந்து கடவுள்களின் படம் இடம் பெற்றது குறித்து தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.
வர்க்கலை பகுதியில் பிரசித்தி பெற்ற ஜனார்த்தன் சுவாமி கோயில் அருகே பாஜக சார்பில் வைக்கப் பட்டிருந்த பதாகையில் வேட்பாளர் வி.முரளீதரன், பிரதமர் மோடி படங்களுடன் தாமரைச் சின்னமும், ஹிந்து கடவுள்களின் படமும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
இதன்மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்களை ஒன்றிய அமைச்சர் வி. முரளீதரன் தவறுதலாக வழி நடத்துவதாகக் கூறி, தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.ஜெயன் பாபு புகார் அளித்துள்ளார்.
அதில், ‘‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 123 (3)-இன் கீழ், விளம்பர பதாகையில் மத அடையாளத்தை பயன்படுத்தியது சந்தேகத்துக்கு இடமின்றி தேர்தல் நடத்தையை மீறும் செயலாகும். ஆகையால், பாஜக வேட்பாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் வி.முரளீதரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘தேர்தல் ஆணை யத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அளித்த புகார் பற்றி எனக்கு ஏதும் தெரியாது.
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தினால், இதற்கு பதிலளிப்பேன். மார்க்சிஸ்ட் கட்சியின் அச்சுறுத் தலுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன்’’ என்றார்.