நேற்று (25.3.2024) தஞ்சாவூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் இரங்கல் தீர்மானத்தையும் சேர்த்து ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கால கட்டத்தில் மிகவும் தேவையான – மக்களவைத் தேர்தல் தொடர்பான தீர்மானம் கவனிக்கத்தக்கதும் – அதன்படி ஒவ்வொரு குடிமகனும் செயல்படத்தக்கதுமான அதி முக்கிய தீர்மானமாகும்.
இந்தியத் துணைக் கண்டத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் மோடி தலைமையிலான அரசானது – இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு நேர் எதிரானதாகும். ஒரு ஜனநாயக அரசாக அது செயல்படவில்லை. மோடி என்ற ஒற்றை மனிதரின் சர்வாதிகார ஆட்சியாக நடைபெற்று வருகிறது.
மோடி தலைமையிலான ஆட்சிக்குக் கடிவாளம் என்பதன் தலைநகரம் நாக்பூரில் இருக்கிறது; இன்னும் விளங்கும் படிச் சொல்ல வேண்டுமானால் நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். என்ன கட்டளை பிறப்பிக்கிறதோ, அவற்றை அட்டியின்றி அட்சரப் பிசகின்றி செயல்படுத்துவதுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரளவில் நடக்கும் உண்மையான பிஜேபி ஆட்சியாகும்.
2014இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் சரி, அதன் பின் 2019-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் சரி, மோடி (பிஜேபி அரசு) கொடுத்த வாக்குறுதிகளில் எதையாவது சாதித்ததாக விரலை நீட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று நீட்டி முழங்கினார்களே, அது நிறைவேற்றப் படவில்லை என்பதைவிட, என்ன கேவலம் என்றால் இரண்டரைக் கோடி பேர்கள் வேலையிழப்பு என்பதுதான் அந்தக் கொடுமை! ஒருவருக்கு ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் போடப்படும் என்று வாய்ப்பட்டா அடித்தாரே, அது என்னாயிற்று?
கேட்டால், பொறுப்பு வாய்ந்த பதவியில் உள்ள ஓர் உள்துறை அமைச்சர், அதெல்லாம் சுத்த ‘ஜும்லா’ என்கிறார் என்றால் (அதாவது போகிற போக்கில் ஏதோ சொல்லுகிற ஏமாற்று வார்த்தை) பெரிய பதவி சிறிய குணம் என்ற முடிவுக்குத்தானே வர வேண்டும்.
மக்கள் நல்வாழ்வு – மனிதாபிமானம் என்ற ஒன்றை எடுத்துக் கொண்டால், அது சொல்லும் தரமன்று.
கரோனா காலத்தில் தடுப்பூசி போடுவதற்குக்கூட முன்வரவில்லை; அதற்கும் தொகை நிர்ணயிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் தலையில் ஆழமாகக் குட்டியதற்குப் பிறகுதான் இலவச தடுப்பூசி போடப்பட்டது.
கரோனா காலத்தில் தமிழ்நாட்டில் பணியாற்றி வந்த வடநாட்டுக்காரர்கள் குழந்தைக் குட்டிகளுடன், மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனரே – அப்பொழுதுகூட மோடி அரசுக்கு ஈவு இரக்கம் ஏற்படவில்லையே – அதற்கான ரயில் பயணத் தொகையை காங்கிரஸ் ஈடுகட்டும் என்று சொல்ல வேண்டிய அளவுக்கு மனிதாபிமான மற்ற ஆட்சிக்குப் பெயர் தான் நரேந்திர மோடி ஆட்சி.
வரலாறு காணாத பெரு மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டின் பல மாவட்ட மக்கள் பரிதவித்த நிலையில்கூட ஒரு பைசா நிவாரணத் தொகையை வழங்கவில்லையே! ஓட்டுக் கேட்க மட்டும் ஓடோடி வருகிறார் மோடி என்றால், இவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டாமா?
நடப்பது மக்கள் ஆட்சியல்ல – கார்ப்பரேட்டுகளின் ஆட்சியே என்பதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உண்டு.
அம்பானி கையில் டெலிகாம், அதானி கையில் துறைமுகம், டாடா கையில் விமான நிலையங்கள் – அரசு கையில் ராமன் கோயில் – மக்கள் கையில் திருவோடு என்ற நிலைதானே – மறுக்க முடியுமா?
மக்களிடம் வரிப் பணத்தைத் தண்டுவது, கார்ப்பரேட்டுகளுக்குக் கடனாக அளிப்பது, அதற்குப்பின் அந்தக் கடன்களைத் தள்ளுபடி செய்வது – இதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் மனதைக் கல்லாக்கிய மகத்தான சாதனை.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதச் சார்பின்மை என்பது முக்கிய அம்சமாகும். ஆனால் என்ன நடக்கிறது? இஸ்லாமியர்களின் 450 ஆண்டு கால வழிபாட்டுத் தலத்தை இடிப்பது – அந்த இடத்தில் ராமன் கோயில் கட்டுவது என்றால் இதைவிட மதவெறி அழிச்சாட்டியம் செய்யும் ஆட்சியைக் கண்டதுண்டா?
குடிமக்கள் உரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரால் இஸ்லாமி யர்களைத் தனிமைப்படுத்துவது எல்லாம் எத்தகைய கொடுமை – சிறுமை!
விளையாட்டில்கூட பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து “ஜெய்ராம்!” என்று ரசிகர்களை முழக்கம் போட வைக்கும் அளவுக்கு மதவெறி நெருப்பை வளர்த்து விட்டுள்ளனர் என்றால், இது நாடா, மதம் பிடித்த யானைகள் உலவும் காடா?
எண்ணிப் பாருங்கள் வாக்காளர்களே – தேர்தல் பத்திரம் என்ற பெயரால் அடித்த கொள்ளை சாதாரணமானதுதானா? உச்சநீதிமன்றம் எவ்வளவு ஆவேசமான அக்னிச் சொற்களை அள்ளிக் கொட்டியது!
சமூக நீதியின் ஆணி வேரையே வெட்டி வீழ்த்திய ஆட்சிதானே மோடி அரசு.
பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு என்பது எத்தகைய விபரீதம்!
இது அரசியல் சட்டத்துக்கும் பல கால கட்டங்களிலும் நீதி மன்றங்கள் அளித்த தீர்ப்புகளுக்கும் எதிரானது அல்லவா! ஆண்டு ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வருமானம் உள்ள உயர் ஜாதியினர் – பார்ப்பனர்கள் ஏழைகளாம் – வர்க்கத்தில்கூட வருணப் பார்வையா?
மோடி தலைமையிலான ஒன்றிய ஆட்சி நீடிப்பதற்கு காற்புள்ளி அளவுக்குக்கூட எந்தவித நியாயமும் இல்லை- இல்லவே இல்லை.
தஞ்சைப் பொதுக்குழு தீர்மானம் இந்த வகையிலே வாக்காளர் பெரு மக்களுக்கு நல்லதோர் வழியைக் காட்டியுள்ளது! மக்கள் விரோத பிஜேபி ஒன்றிய அரசை விரட்டியடிப்போம் – வாரீர்! வாரீர்!!