திருவரங்கம் சுயமரியாதைச் சுடரொளி மருத்துவர் எஸ்.எஸ்.முத்து நினைவேந்தல் – படத்திறப்பு

viduthalai
3 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு நினைவுரையாற்றினார்

திருச்சி, மார்ச் 25 திருவரங்கம் சுயமரியாதை சுடரொளி மருத்துவர் எஸ்.எஸ்.முத்து நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு நினைவுரையாற்றினார்.
திருச்சி, திருவரங்கம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதை சுடரொளி திருவரங்கம் மருத்துவர் எஸ். எஸ். முத்து அவர்கள் வயது மூப்பின் காரணமாக கடந்த மார்ச் 13 ஆம் தேதி மறைவுற்றார். அவரது நினைவேந்தல் – படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று (24.3.2024) மாலை 6 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் பி.எல்.ஏ.ரெசிடென்சி, ஆருத்ரா மஹாலில் திராவிடர் கழக மாநில சட்டத்துறை தலைவர் த. வீரசேகரன், மாவட்ட காப்பாளர் மு. நற்குணம், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு. சேகர் மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மறைந்த எஸ்.எஸ்.முத்து படத்தினை திறந்து வைத்து நினைவு உரையாற்றினார்.

சட்டக்கல்லூரி பேராசிரியர் பச்சை பிள்ளை
இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற சட்டக்கல்லூரி பேராசிரியர் பச்சை பிள்ளை பேசும்போது, “இது போன்ற நிகழ்ச்சிகளில் கருப்பு சட்டையை பார்க்கும் பொழுது தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இயக்கத்திற்கு நேரடியாக பணியாற்ற வில்லை என்றாலும் பல வழக்குரைஞர்கள் எனது மாணவர்களாக இருந்தாலும் இயக்கத்தில் ஈடுபாட்டோடு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் சாதாரண கிராமத்தில் பிறந்தவன் தான், சட்டக் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறேன். எனது மகள்களை நல்லமுறையில் படிக்க வைத்துள்ளேன். துபாயில் நல்ல பணியில் உள்ளார்கள். மேலும் நான் இந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளேன் என்றால், இதற்கெல்லாம் காரணம் தந்தை பெரியார் அவர்கள்தான். வெளிநாடுகளில் இளைஞர்கள் நிறைய பேர் பெரியாரைப் பற்றி பேசுகிறார்கள், பெரியாரை தெரிந்து கொண் டுள்ளார்கள். அவர்கள் தி.க.விலோ, தி.மு.க.விலோ உறுப்பினர் கூட கிடையாது. ஆனால் அவர்கள் சமூக வலைதளங்களில் பெரியார் பற்றிய கருத்துகளை பெருமளவில் பகிர்ந்து கொள்கிறார்கள்” என்று கூறினார்.

வழக்குரைஞர் அணி இணை செயலாளர் வழக்குரைஞர் கங்கைசெல்வன்
அதிமுக மாநகர் மாவட்ட வழக்குரைஞர் அணி இணை செயலாளர் வழக்குரைஞர் கங்கைசெல்வன் பேசுகையில், “நண்பர் சித்தார்த்தன் எனக்கு அதிகம் பழக்கம் தொடக்கத்தில் இல்லை என்றாலும், தற்பொழுது நல்ல நண்பர்களாக இருக்கிறோம். அவரது தந்தை சிறந்த பெரியார் தொண்டர் -பகுத்தறிவாளர். அவருடைய பணிகளை நாங்கள் பார்த்து வியந்து இருக்கிறோம் அய்யா முத்து அவர்கள் படமாக இருந்தாலும் எங்களுக் கெல்லாம் பாடமாக திகழ்கிறார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரது பிறந்த நாளை பார் கவுன்சில் சார்பில் கொண்டாடுவதற்கு நீதிமன்ற வளாகத்தில் மறுப்பு தெரிவித்தனர், நான் உடனடியாக மதிப்பிற்குரிய நீதிபதியிடம் வழக்குரைஞர்கள் சங்கத்தில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள் என்று கேட்டேன் பெரியார் – அண்ணா விழா நடத்தாத இவ்வளாகத்தில், ஆயுத பூஜை, ரம்ஜான், கிறிஸ்தவ விழாக்கள் கொண்டாடக்கூடாது’ கொண்டாடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என கூறினேன்” என்று பேசினார்.

தொடர்ந்து உயர் நீதிமன்ற கூடுதல் தலைமை வழக்குரைஞர் பாஸ்கரன், திருச்சி வழக்குரைஞர் சங்கத் தலைவர் பாலசுப்பிர மணியம், சட்டத்துறை துணை செயலாளர் நா.கணேசன், வழக்குரைஞர் முத்துகிருஷ்ணன், சீனி.விடுதலை அரசு, ஆகியோர் உரையாற்றினார்கள் டாக்டர் மு. நாகமணி வரவேற்புரையாற்றினார். நிறைவாக திராவிடர்கழக சட்டத்துறை செயலாளர் மு. சித்தார்தன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மறைந்த மருத்துவர் எஸ்.எஸ்.முத்துவின் துணைவியர் கல்யாணி முத்து, பாலசரஸ்வதி, கோபால், அலமேலு, மணிவண்ணன், மு.அன்புமணி, மருத்துவர் சதீஷ்குமார், சுஜாதா சுரேஷ்குமார், ஆர்.சுஜாதா உள்ளிட்ட குடும்பத்தினர்கள் கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் மருத்துவர் எஸ்.எஸ். முத்து படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *