ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பேசுவதெல்லாம் ஸநாதனம், பழைமை – ஆனால், தவறு செய்வதற்கெல்லாம் பற்றிக்கொள்வதோ புதுமை
அறிவியலுக்கு விரோதமான முறையை, அறிவியல் ரீதியாக செய்வதற்குப் பெயர்தான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.!
தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 46 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!
சென்னை, மார்ச் 25 அறிவியலுக்கு விரோதமான முறையை, அறிவியல் ரீதியாக செய்வதற்குப் பெயர்தான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. – அவர்கள் பேசுவதெல்லாம் ஸநாதனம், பழைமை. ஆனால், தவறு செய்வதற் கெல்லாம் பற்றிக்கொள்வதோ புதுமை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 46 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்
கடந்த 16-3-2024 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற தொண்டறச் செம்மல் அன்னை மணியம் மையாரின் 46 ஆம் ஆண்டு நினைவுநாள் கருத்தரங் கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய கேள்விகள் எல்லாம் வந்தது. ஆனால், அந்தக் கேள்விகளுக்கெல்லாம் காலம் பதில் சொல்லி, பல பேருடைய கண்களைத் திறந்துவிட்டது.
தந்தை பெரியாரின் முன்னோக்கு!
ஆனால், அன்னை மணியம்மையார் அவர் களை, தந்தை பெரியார் அவர்கள் எப்படி அடை யாளங் கண்டார்? எப்படிப்பட்ட முன்னோக்கு பெரியாருக்கு இருந்தது? அந்த முன்னோக்கு மட்டும் இல்லாமல் இருந்திருக்குமேயானால், இன்றைக்கு நாட்டினுடைய நிலை என்னவாகி இருக்கும்? சமூகத்தினுடைய நிலை என்னவாகி இருக்கும்? நம்முடைய தலைமுறையினருடைய வாழ்வு என்னவாகியிருக்கும்?
திராவிடர் கழகம் என்கிற ஒரு குறுகிய எல்லைக்குள் பார்க்காதீர்கள்; தனிப்பட்ட ஒரு இயக்கம் காப்பாற்றப்பட்டதா? தொடர்ந்ததா? என்பது முக்கியமல்ல. ஆனால், ஒன்றுக்கொன்று இணைந்த ஒன்று.
18 ஆண்டுகளுக்குப் பிறகு….
அண்ணா அவர்கள் இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டியில் தந்தை பெரியார் – அண்ணா ஆகியோர் பங்கேற்ற பெரியார் இராமசாமி கல்வி நிலையம் கட்டடத் திறப்பு விழா என்னுடைய தலைமையில் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் தந்தை பெரியாரும், அண்ணாவும் அமர்ந்து பேசுகிறார்கள். அவ்விழாவில், அண்ணா அவர்களு டைய உரை உணர்ச்சிப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வ மாகவும் இருந்தது
அண்ணா அவர்கள் உரையாற்றத் தொடங்கிய பொழுது சொன்னார், ‘‘எனக்கு முன் இங்கே உரையாற்றி யவர்கள், ‘‘நீங்கள் இரண்டு பேரும் இப்படி ஒன்றாக அமர்ந்திருப்பது என்பது எங்களுக்கெல்லாம் பெரிய மகிழ்ச்சிக்குரிய ஒன்று. பிரிந்திருந்தவர்கள் இணைந் திருப்பதைப் பார்க்கும்பொழுது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி” என்று பேசினார்கள்.
‘‘எப்பொழுது நாங்கள் பிரிந்தோம்; ஒன்று சேருவதற்கு”: அண்ணா!
இப்படி பேசியவர்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன், நீங்கள் சொன்னது தவறு; ‘‘என் னுடைய உள்ளத்தில் பெரியார் இருந்தார்; பெரியார் உள்ளத்தில் நான் இருந்தேன்.” எப்பொழுது நாங்கள் பிரிந்தோம்; ஒன்று சேருவதற்கு. எப் பொழுதும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகத்தான் இருந்தோம்” என்றார்.
அரசியலுக்கு வரப் போகிறோம் என்று முடிவெடுப் பதற்கு முன்பு வரை பார்த்தீர்களேயானால், தந்தை பெரியாருடைய முடிவு – போராட்ட முறை என்னவோ, அதே போராட்ட முறையைத்தான் அண்ணா அவர்களும் கையாள்வார்.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கலைஞர் அவர்கள் பொறுப்பேற்ற காலகட்டத்தில் ஒரு சில கருத்து மாறுபாடுகள் இருந்திருக்கலாம். அது சாதாரணம் தான்; பகுத்தறிவுவாதி என்றாலே, கருத்து மாறுபாடுகள் இருந்தால், அதில் ஒன்றும் தவறில்லை. ஒரு குடும்பத்தில் இருப்பவர்களிடையே கருத்து மாறுபாடுகள் வரும்.
சேலம் ஆத்தூரில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவிற்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய கலைஞர் வருகிறார். ‘‘பெரியார் பிறவாமலிருந்தால்” என்ற தலைப்பில்கூட அவர் அங்கே ஆற்றிய உரை நூலாக வெளிவந்திருக்கிறது.
‘‘திராவிடர் கழகமும் – திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரு நாணயத்தினுடைய இரண்டு பக்கங்கள்!’’
அந்த விழாவில் உரையாற்றிய கலைஞர் அவர் கள், ‘‘அண்ணா காலத்தில் அண்ணா அவர்கள் சொன்னார், திராவிடர் கழகமும் – திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி” என்றார். இப்பொழுது நான் சொல்கிறேன், ஆசிரியர் வீரமணி அவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு நான் சொல்கிறேன், ‘‘திராவிடர் கழகமும் – திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரு நாணயத்தினுடைய இரண்டு பக்கங்கள்” என்றார்.
ஒரு நாணயத்தில் இரண்டு பக்கம் இருக்கும். சென்னை தங்கசாலையில் உள்ள நாணய உற்பத்தி சாலையில், நாணயத்தின் ஒரு பக்கம் அடித்துவிட்டு, இன்னொரு பக்கம் அடிக்காவிட்டால், அந்த நாணயம் செல்லுபடியாகுமா? என்பதை தயவு செய்து எண்ணிப்பாருங்கள்.
அந்த நாணயம் செல்லாது. இரண்டு பக்கமும் சரியாக இருந்தால்தான், அந்த நாணயம் செல்லும். திராவிடர் கழகமும் – திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் என்று அன்றைக்குக் கலைஞர் சொன்னார் – இன்றைக்கும் அது தொடர்கிறது.
இன்றைக்கு உருவமாக பெரியார் இல்லை; உருவமாக அண்ணா இல்லை; உருவமாக கலைஞர் இல்லை. உருவ மாக அன்னை மணியம்மையார் இல்லை.
ஆனால், இன்றைக்கு இன எதிரிகள் ஏன் பயப்படு கிறார்கள்; ஏன் அவர்கள் ஆத்திரத்தோடு இருக் கிறார்கள்?
கொள்ளையடிப்பதற்காகக் கண்டுபிடித்ததுதான் தேர்தல் பத்திரத் திட்டம்!
மோடி, மிக வேகமாக ‘‘உங்களை ஒழித்தே தீருவேன்” என்கிறார். மணிப்பூரை மறந்த மோடி, தமிழ்நாட்டை மறக்காமல் இருக்கிறார். வேக வேகமாக வந்து, கொள் ளையடிக்க விடமாட்டேன் என்கிறார். ஆமாம், மற்றவர் கள் யாரையும் கொள்ளையடிக்க விட மாட்டார் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்மூலமாகவே தெள்ளத் தெளிவாகிவிட்டது.
‘‘கொள்ளையடிப்பது எங்களுடைய உரிமை; அந்த உரிமையை மற்றவர்களுக்கு எப்படி விட்டுக் கொடுப் போம். அந்த உரிமை எங்களின் ஏகபோகம். அதற்காகத் தானே நாங்கள் கண்டுபிடித்தது தேர்தல் பத்திரத் திட்டம்” என்று மிகத் தெளிவாக கூறுகிறார்கள்.
இப்பொழுது நாங்கள் சொல்கிறோம் – தேர்தல் பத்திரம் – பத்திரமான தேர்தல் எது முக்கியம்?
இன்றைக்கு வந்திருக்கின்ற செய்திகளைப் பார்த்தீர் களேயானால், சாதாரண பித்தலாட்டமா அது?
முதன்முதலில் நாம்தான் ‘விடுதலை’யில் தேர்தல் பத்திரத் திட்டத்தைப்பற்றி விளக்கமாக எழுதினோம்.
பேசுவதோ ஸநாதனம், பழைமைவாதம்; தவறு செய்வதற்கெல்லாம் பற்றிக்கொள்வதோ புதுமை!
தேர்தல் பத்திரம் என்றவுடன், வீட்டுப் பத்திரம் போன்று நினைத்துவிட்டார்கள். கொள்ளையடிப்பதற் காகவே அந்தத் திட்டத்தை மிக லாவகமாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
Doing Scientific way –
Doing unscientific things in a Scientific way
அறிவியலுக்கு விரோதமான முறையை, அறிவியல் ரீதியாக செய்வதற்குப் பெயர்தான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.
அவர்கள் பேசுவதெல்லாம் ஸநாதனம், பழைமை. ஆனால், தவறு செய்வதற்கெல்லாம் பற்றிக்கொள்வதோ புதுமை.
‘‘என்னுடைய உரையை தமிழிலேயே நீங்கள் கேட்கலாம்” என்று பிரதமர் மோடி மகிழ்ச்சிகரமாக சொல்கிறார். அது வரவேற்கவேண்டிய ஒன்றுதான். ஆனால், அது எதன்மூலமாக சாத்தியமாகிறது?
AI – (Artificial Intelligence) செயற்கை நுண்ணறிவு மூலமாகத்தான்.
செயற்கை நுண்ணறிவு எப்படி வந்தது? வேதத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்டதா? முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒருவருக்காவது ஒலிபெருக்கி என்றால் என்னவென்று தெரியுமா?
எங்கள் தத்துவங்களையும், கொள்கைகளையும், அடிக்கட்டுமானங்களையும்
யாராலும் அசைக்க முடியாது
இதெல்லாம் அறிவு, பகுத்தறிவு. அந்தப் பகுத் தறிவை வளர்க்கக் கூடிய இயக்கம்தான் இந்த இயக்கம். இன்றைக்கு நேரிடையாக உருவமாக பெரியார் இல்லை. உருவமாக அன்னை மணியம்மையார் இல்லை; உருவமாக அண்ணா இல்லை; உருவமாக முத்தமிழறிஞர் கலைஞர் இல்லை; உருவமாக நீதிக்கட்சித் தலைவர்கள் இல்லை. ஆனால், அந்த பிணைப்பும், நம்பிக்கை யும் இன்றைக்கும் தொடர்கிறது என்று சொன்னால், தலைவர்கள் உருவத்தால் மறையலாமே தவிர, எங்கள் தத்துவங்களையும், கொள்கைகளையும், அடிக்கட்டுமானங்களையும் யாராலும் அசைக்க முடியாது என்று காட்டுவதற்குத்தான் அன்னை மணியம்மையார் அவர்களுடைய நினைவு நாள் கருத்தரங்குகளை நடத்துகின்றோம்.
‘‘தி.மு.க.வை ஒழித்துவிடுவோம், அழித்துவிடுவோம்” என்று பிரதமர் மோடி சொல்கிறாரே, நெருக்கடி காலத்தைவிடவா?
இராஜகோபாலச்சாரியாரைவிடவா, மோடி பெரிய புத்திசாலி!
இதுபோன்ற செய்திகள் எங்களுக்குக் கேட்டுக் கேட்டு புளித்துப்போன செய்திகள். அதைக் கண்டு நாங்கள் பயப்படுபவர்கள் அல்ல. இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில்கூட நான் சொன்னேன், ‘‘இராஜகோபாலச்சாரியாரைவிட, மோடி பெரிய புத்திசாலி” என்று அவர்களே சொல்லமாட்டார்கள்; அந்த இராஜகோபாலாச்சாரியார் சொன்னதைவிடவா, மோடி சொல்லிவிடப் போகிறார்.
நேற்று சென்னை பழைய வண்ணையில் நடைபெற்ற கலைஞர் பெயரில் நூற்றாண்டு விழா கட்டடம் -பெரியார் பெயரில் படிப்பகம் – இனமானப் பேராசிரியர் அவர் களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கச் செல்கிறபொழுது, பாரிமுனை வழியே செல்கிறபொழுது பார்த்தேன், தனியே நிற்கிறார் இராஜகோபாலாச்சாரியார்; பெரியாருடைய ஆப்த நண்பர் அவர். அதுமட்டுமல்ல, சில நேரங்களில் உண்மையையே பேசக்கூடியவர் அவர்.
‘‘பெரியாரும், விடுதலையும் என் அன்பார்ந்த எதிரிகள்!’’
ஒருமுறை பெரியாரின் பிறந்த நாள் மலருக்காக அவரிடம் வாழ்த்துச் செய்தியைக் கேட்டேன். மிக அருமையானதொரு வாழ்த்தைக் கொடுத்தார்.
‘‘பெரியாரும், விடுதலையும் என் அன்பார்ந்த எதிரிகள்” என்று அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தி ருந்தார்.
கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், இராஜகோபாலாச் சாரியாரின் மறைவின்போது, தந்தை பெரியார் அவர்கள் கண்ணீர் விட்டுக் கதறினார். அந்தப் பண்பாடு என்பது மிகவும் முக்கியம்.
அப்படிப்பட்ட இராஜகோபாலாச்சாரியாரின் கட்சி இன்றைக்கு இருக்கிறதா? எப்படிப்பட்ட இராஜ கோபாலாச்சாரியார் தெரியுமா?
‘‘ஆள்வது நானா? இராமசாமி நாயக்கரா? ஒரு கை பார்ப்போம்; பெண்களையெல்லாம் கைக்குழந்தைக ளோடு சிறைக்கு அனுப்பினால் எல்லாம் சரியாகிவிடுமா?” என்றார்.
பதவி ஆணவப் பேச்சுதான்!
பதவியில் இருந்தால் சில நேரத்தில் அந்த ஆணவம் இருக்கும். பதவி ஆணவம் என்று ஒன்று உண்டு. அந்தப் பதவி ஆணவப் பேச்சுதான் இன்றைக்கும் ஒன்றியத்தில் ஆளுகின்ற பா.ஜ.க.வினருக்கு.
அன்றைய காலகட்டத்தில் ஹிந்தி எதிர்ப்பைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தைக் கொச்சைப் படுத்திப் பேசினார்கள்.
கைக்குழந்தைகளோடு பெண்கள் அந்தப் போராட் டத்தில் பங்கேற்று சிறைச்சாலைக்குச் சென்றபொழுது என்ன சொன்னார்கள் தெரியுமா? அதனை இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும்.
‘‘ஹிந்தி ஒழிக – தமிழ் வாழ்க!’’ என்று சொன்னால், ஆறு மாத சிறைத்தண்டனை!
‘‘இந்தப் பெண்கள் எல்லாம் ஹிந்தியை எதிர்ப்பதற் காக வரவில்லை; குழந்தைகளுக்குப் பால் வாங்கிக் கொடுப்பதற்கு வழியில்லை; அதனால், சிறைச்சாலைக்குச் சென்றால், பால் கொடுப்பார்கள் என்பதற்காகத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள்” என்று சொன்னார்கள். ‘‘ஹிந்தி ஒழிக – தமிழ் வாழ்க!” என்று சொன்னால், ஆறு மாத சிறைத்தண்டனை.
‘‘உங்களை மூட்டைப் பூச்சி மாதிரி நசுக்குவோம்” என்றெல்லாம் இராஜகோபாலாச்சாரியார் சொன்னார்.
அப்பேர்ப்பட்ட இராஜகோபாலாச்சாரியார் அவர்கள், பிற்காலத்தில், அண்ணா அவர்களை பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, ஆங்கிலத்தில் சொன்னார்,
‘‘Hindi Never; English Ever” என்று.
‘‘இந்த இயக்கத்தை ஒழிப்போம்” என்று சொன்னாரே, ஒழிந்ததா?
அன்றைக்கு தொடங்கப்பட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் – இன்றைய வரை தொடர்கிறது. அன்று இராஜகோபாலாச்சாரியார் அவர்கள், ‘‘இந்த இயக்கத்தை ஒழிப்போம்’ என்று சொன்னாரே, ஒழிந்ததா?
மிசா காலத்தில், ‘‘இந்த இயக்கம் இனிமேல் இருக்காது” என்று சொன்னார்களே சிறை அதிகாரிகள், ஒழிந்ததா?
(தொடரும்)