பொய்யின் மறுபெயர் பா.ஜ.க.!

viduthalai
2 Min Read

பெங்களூருவில் உள்ள உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரும் கருநாடக மாநிலம் ஷிவமோகா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய புலனாய்வு அமைப்பு உறுதி செய்துள்ளது.

இவர்கள் கேரளா சென்று அங்கிருந்து சென்னை வழியாக ஆந்திராவிற்கு தப்பி உள்ளனர்.

இதனால் ஆந்திராவில் கிடைத்த சில முக்கிய தகவல்களை வைத்து அவர்களை நெருங்கி விட்டதாகவும், விரைவில் அவர்கள் கைதா வார்கள் என்றும் கூறியுள்ள புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் “ஏற்கெனவே கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையின் படி முக்கிய குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளோம்” என்று கூறியுள்ளனர்.

ஒன்றிய அமைச்சரும், பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவருமான சோபா, தேர்தல் பரப்புரையின் போது “தமிழ்நாட்டில் வாழும் மக்கள் கிருஷ்ணகிரி காடுகளில் பதுங்கி பயிற்சி எடுத்துக்கொண்டு பிறகு பெங்களூரு வந்து குண்டு வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்” என்று பேசினார். இவரது இந்தப் பொறுப்பற்ற பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதன் பிறகு தமிழர்களை தீவிரவாதிகள் என்று கூறிய பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் சோபா சமூகவலைதளத்தில் சிலவரிகள் மட்டும் பதிவிட்டு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
இவரது இந்தப் பிரிவினைவாத பேச்சு தொடர்பாக இன்றுவரை தேர்தல் ஆணையம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் தமிழ்நாட்டு பாஜக தலைவரும், தற்போது கோவைத் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வருமான அண்ணாமலையும் வாயைத் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

அடாவடித்தனமாகப் பேசுவது, சமூக வலைதளங்களில் பொய்களையும், புனை சுருட்டுகளையும் அள்ளிக் கொட்டுவதற் கென்றே, தனி அமைப்பையே உருவாக்கி, அதே வேலையில் முழு மூச்சாக ஈடுபடுவது – இதுதான் பா.ஜ.க. சங்பரிவார்களின் பிழைப்பாக இருந்து வருகிறது.

சீனாவின் ஷாங்கே நகர் பேருந்து நிலை யத்தின் படத்தை – குஜராத் மாநில அகமதாபாத் பேருந்து நிலையம் – என்று பச்சைப் பொய்யென்று தெரிந்தும் வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஓட்டுகளைப் பறித்த கூட்டம் தானே இது.

சீனாவில் ஓடும் புல்லட் ரயில் – குஜராத் வடோதராவில் ஓடுவதுபோல “போட்டோ ஷாப்” எடுத்து விளம்பரம் செய்ததும் பிஜேபிதான்.
இப்படி எத்தனை எத்தனையோ பொய் – மோசடிப் பிரச்சாரங்களைச் செய்யும் கூட்டம் இது.

கடந்த தேர்தல்களில் ஏமாந்ததுபோல வரும் தேர்தலிலும் வாக்காளர்களே ஏமாறாதீர் – எதிர்காலத்தை இருண்ட காலமாக ஆக்காதீர்!

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *