திருமணத்தால் ஓர் இயக்கம் உருவானது- அதை உருவாக்கியவர்களே,
தாங்கள் உருவானதற்குக் காரணமான இயக்கத்தைப் போற்றுவது- அதன் கொள்கை வழி பயணிப்பது போற்றத்தக்கதாகும்!
தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 46 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!
சென்¬ன், மார்ச் 24 தந்தை பெரியார் – அன்னை மணியம்மையார் திருமணம் என்பது இயக்கத்தினுடைய எதிர்காலம் கருதி, பாதுகாப்பைக் கருதி செய்யப்பட்ட ஏற்பாடே! திருமணத்தால் ஓர் இயக்கம் உருவானதும்; அந்த இயக்கம் உருவான பிறகு, யார் அதற்குக் காரணமாக இருந்தார்களோ, அவர்களே, தாங்கள் உரு வானதற்குக் காரணமான இயக்கத்தைப் போற்றுவது- அதன் கொள்கை வழி பயணிப்பது போற்றத்தக்கதாகும்! அது நம்ப முடியாத உலக சாதனைகளில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 46 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்
கடந்த 16-3-2024 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற தொண்டறச் செம்மல் அன்னை மணியம் மையாரின் 46 ஆம் ஆண்டு நினைவுநாள் கருத்தரங் கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
மகளிருடைய ஆற்றல் தெளிவானது, துணிவானது, கனிவானது!
மிகுந்த நெகிழ்ச்சியோடு நடைபெறக்கூடிய அன்னையார் அவர்களுடைய 46 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம் என்ற வாய்ப்பில், மகளிருடைய ஆற்றல் என்பது எவ்வளவு தெளிவானது, எவ் வளவு துணிவானது, எவ்வளவு கனிவானது என்பதை யெல்லாம் எடுத்துக்காட்டும் வகையில், அன்னை மணியம்மையார் அவர்களின் தொண்டறம், அவர்களுடைய சிறப்பான இயல்பு கள், தலைமைப் பண்பு, சகிப்புத்தன்மை, மற்றவர் களுக்காக அவர் தன்னுடைய வாழ்க்கையையே தியாகம் செய்த அந்த நிலை – அவற்றைப்பற்றி யெல்லாம் நம்முடைய அருமைத் தோழர்கள் மிகச் சிறப்பான வகையில் இந்தக் கருத்தரங்க நிகழ்ச்சி யின் வாயிலாக எடுத்துக் கூறினார்கள். முதலில் மகளிர் அணிக்குப் பாராட்டுகள்.
இந்நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கின்ற கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே, வரவேற்புரையாற்றிய திராவிட மாணவர் கழகத்தின் மாநில துணை செயலாளர் தோழர் தொண் டறம் அவர்களே, தொடக்கவுரையாற்றிய கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் மதிவதனி அவர்களே,
‘‘மணியம்மையாரின் போர்க்குணம்” என்ற தலைப் பில் சிறப்பாக உரையாற்றிய ஊடகவியலாளர் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் உமா அவர்களே,
‘‘மணியம்மையாரின் தொண்டுள்ளம்” என்ற தலைப் பில் சிறப்பாக உரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழக மகளிரணியின் மாநில சமூக ஊடகப் பொறுப்பாளர் மருத்துவர் யாழினி அவர்களே,
இணைப்புரை வழங்கிய திராவிடர் கழக மகளிர் பாசறையின் மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணி யம்மை அவர்களே, நன்றியுரை கூறவிருக்கக்கூடிய மரகதமணி அவர்களே,
கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, கழகப் பொருளாளர் குமரேசன் அவர்களே, மற்றும் இங்கே குழுமியுள்ள செயலவைத் தலைவர் உள்பட அனைத்துத் தோழர் களே, உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே உரையாற்றிய அனைவரும் மிக அற்புதமாகப் பேசினார்கள். ஒவ்வொருவரும் அந்தத் தலைப்புக் குட்படுத்தி, மிக சிறப்பான கருத்துகளை அருமையாகத் தொகுத்துச் சொன்னார்கள்.
அன்னை மணியம்மையாரைப்பற்றி உலகம் அறிந்தது கையளவு – அறியாதது உலகளவு!
அன்னை மணியம்மையார் அவர்களைப்பற்றி உலகம் அறிந்தது கையளவு – அறியாதது உலகளவு. அறியாத பல செய்திகளை, ஏன் நானேகூட அறியாத பல செய்திகளையெல்லாம் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கோணத்தில் அறிந்துகொள்வது, அவருக்குப் பெருமை சேர்ப்பதற்காக அல்ல; அவருடைய வாழ்வால், நம்முடைய தலைமுறை, இனி வரக்கூடிய தலைமுறை எப்படியெல்லாம் நல்ல பாடங்களைப் படிப்பினைகளைக் கற்று தனி வாழ்க்கையிலும் சரி, பொதுவாழ்க்கையிலும் சரி அவர்கள் எப்படியெல்லாம் சிறப்பாக உயர முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டுதான் இந்தக் கருத்தரங்க நிகழ்ச்சி.
இதனை ஒரு சாதாரண மேடையாக நான் கருதவில்லை. நம்மால் விளைந்த விளைச்சல்கள். அது திராவிடர் கழகமானாலும், திராவிட முன்னேற்றக் கழகமானாலும், திராவிடர் தமிழர் பேரவையாக இருந்தாலும், எந்த இயக்கம் என்பது முக்கியமல்ல – எந்த அடிப்படைக் கொள்கைகளை அவர்கள் வரித்துக் கொண்டவர்கள், அதனை வாழ்வியல் முறையாக எப்படி ஆக்கிக் கொண்டவர்கள் என்பதைப் பொறுத்தே, இந்த சிறப்பான நிகழ்ச்சி – கருத்தரங்கம் மிகச் சிறப்பாக இருந்தது.
இன்னமும் அரைத்த மாவையே அரைத்து, வேறு எதுவும் கிடைக்காததினால், இதே வார்த்தையைச் சிலர் சொல்லிக் கொண்டிருப்பதற்கு எல்லாம் நிறைய பதில்களைச் சொன்னார்கள். நான் மீண்டும் அதனைச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஒரு கட்டத்தில் நாம் அந்தப் பகுதிகளையே தவிர்த்துவிடலாம்.
நம்முடைய மதிவதனி அவர்கள் சொல்லியதுபோன்று, எங்கேயோ எழுதி கேட்பார்கள், தந்திரமாகவும் கேட்பார்கள்.
என்னிடம்கூட கேட்பார்கள், ‘‘ஏன் பெரியார் அவர் கள், சொந்த வளர்ப்பு மகளையே திருமணம் செய்து கொண்டார்?” என்று.
அதற்கு நாம் பதில் சொல்லவேண்டும். அந்தக் கேள் வியை நாம் அலட்சியப்படுத்தினால், பதில் சொல்லாமல் போய்விட்டார் என்று சொல்வார்கள். எந்தக் கேள் விக்கும் நாம் பதில் சொல்லலாம்.
நல்ல விளக்கங்களை இங்கே சொன்னார்கள். பொது வாக நல்ல அளவிற்கு உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிற இளைய தலைமுறையினர் இருக்கிறார்கள். அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
உலக சாதனைகளில்
மிகவும் முக்கியம் வாய்ந்தது
உலகத்தில் எனக்குத் தெரிய, திருமணத்தால் ஓர் இயக்கம் உருவானதும்; அந்த இயக்கம் உருவான பிறகு, யார் அதற்குக் காரணமாக இருந் தார்களோ, அவர்களே, தாங்கள் உருவானதற்குக் காரணமான அந்த இயக்கத்தைப் போற்றுவது, அதன் கொள்கை வழி நடப்பது என்பது நம்ப முடியாத உலக சாதனைகளில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்.
அந்தத் திருமணத்தைப்பற்றி கேட்பார்கள்; வம் புக்குக் கேட்கக்கூடிய காவிக்காரர்கள், ‘‘வளர்ப்பு மகளையே திருமணம் செய்துகொண்டாரே?” என்று கேட்கின்ற அவர்களுக்குப் பதில்.
‘‘பெரியார் – மணியம்மை திருமணம்
ஒரு வரலாற்று உண்மை விளக்கம்’’
அன்னை மணியம்மையார் அவர்கள் 1946 ஆம் ஆண்டு, தொண்டறத்திற்காக தந்தை பெரியாரிடம் தன்னை ஒப்படைத்துக் கொள்கிறார். இதுகுறித்து நிறைய தகவல்கள் ‘‘பெரியார் – மணியம்மை திருமணம் ஒரு வரலாற்று உண்மை விளக்கம்” – கூடுதல் பகுதிகள் இணைக்கப்பட்ட புதிய பதிப்பு என்கிற புத்தகத்தில் இருக்கின்றன.
ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால், அது உண்மையாகிவிடுமா?
வளர்ப்பு மகள் என்று எந்த இடத்திலாவது பெரியாரோ அல்லது அவருடைய குடும்பத்தாரோ சொல்லியிருக்கிறார்களா? என்ற கேள்வியை கேளுங்கள். இதற்குப் பதில் சொல்லட்டும்.
மணியம்மையார் அவர்கள் தொண்டாற்று வதற்காக வந்தார்; தொண்டு செய்தார்; செயலாள ராக இருந்தார்.
இங்கே யாழினி அவர்கள் உரையாற்றும் பொழுது சொன்னார்கள்; அருள்மொழி அவர் களும் எடுத்துச் சொன்னார்கள்.
அன்னை மணியம்மையார் அவர்களின்
அறிக்கை!
குற்றாலத்தில் இருந்த அன்னை மணியம்மையார் அவர்கள் கொடுத்த அறிக்கையும் இங்கே இருக்கிறது.
‘‘மான, ஈனத்தைப்பற்றி கவலைப்படாத பெண்களாக இருந்தால் வாருங்கள்” என்று சொல்கிறார் அந்த அறிக்கையில்.
தந்தை பெரியாருக்குப்
பிடித்த குறள்!
மானம் பாராத தொண்டு செய்யவேண்டும்; பொதுத் தொண்டிற்கு அது அடையாளம் என்கிறார்.
‘‘குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்”
என்கிற குறள்தான் 1330 குறள்களிலேயே எனக்குப் பிடித்த குறள் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் அதை வியந்து பாராட்டி, இப்படி ஒரு குறளை இதுவரை நான் படித்து உணர்ந்ததே கிடையாது. என்னுடைய கவனத்திற்கே தப்பியது; அதை தந்தை பெரியார்தான் சிறப்பாகச் சொன்னார்கள் என்று மிகுந்த மகிழ்ச்சியோடு பாராட்டினார்கள்.
வேறு எந்த சரக்கும் இல்லாதவர்கள்தான் திரும்பத் திரும்ப இதைப்பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்- ‘‘இளம் பெண்ணான மணியம்மையாரை, பெரியார் திருமணம் செய்துகொண்டாரே, இது என்ன நியாயம்?‘‘ என்றெல்லாம் கேட்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறோம் – புராணத்திலிருந்து, அவர்கள் சொல்லியிருக்கின்ற புராணத்திலிருந்து சரசுவதிக்கும் – பிரம்மாவிற்கும் என்ன சம்பந்தம்? என்ன உறவு? என்று நாம் பதில் சொல் லலாம். ஆனால், அது முக்கியமல்ல.
‘‘நாங்கள் சொன்னது பொருந்தாக் காரணம் என்பதுதான்; பொருந்தாத் திருமணம் அல்ல!’’
அதைவிட மிகத் தெளிவான ஒரு செய்தி என்னவென்றால், அவர்களுடைய திருமணத்தைப் பற்றி இப்பொழுது கேட்கவேண்டிய அவசியம் இல்லை.
‘‘பொருந்தாத் திருமணம் என்று சொன்ன வர்களே, நம்மிடமிருந்து போன தோழர்களே, அண்ணா உள்பட நான் சொல்கிறேன், ‘‘பொருந்தாத் திருமணம்” என்று சொன்னார்கள். பிற்காலத்தில், அய்யா, அம்மா அவர்களை சந்தித்தபொழுது, இனமானப் பேராசிரியரிலிருந்து, அண்ணாவிலிருந்து எல்லோருமே தொடர்ந்து சொல்லிக்கொண்டுவந்த ஒப்புதல் – அதுதான் மிகத் தெளிவான கருத்துள்ளவர்கள் என்பதற்கும், கொள்கையாளர்கள் என்பதற்கும் அடையாளம் என்னவென்றால், ‘‘நாங்கள் சொன்னது பொருந்தாக் காரணம் என்பதுதான்; பொருந்தாத் திருமணம் அல்ல” என்றார்கள்.
அரசியலுக்குப் போகவேண்டும் என்கிற கருத்து இருந்தது. அரசியல் பிரிவாக ஓர் அமைப்பு இருக்கவேண்டும் என்று நினைத்தார்கள். ‘‘அந்த அரசியல் பிரிவை உண்டாக்கவேண்டும் என்று நினைத்தோம். அதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டோம் – அன்றைய கால கட்டத்தில்” என்றார்கள்.
யார் அந்தக் காரணத்தைப் பயன்படுத்தினார் களோ, அவர்களே பிற்காலத்தில் திருத்தம் சொன்ன பிறகு – நீதிமன்றத்தில் போட்ட வழக்கைத் திரும்பப் பெறுகிறார்கள் அல்லது வழக்கில் சமரசம் ஆகிவிடுகிறார்கள் என்று சொன்னால், அதற்குப் பிறகு மற்றவர்கள் பேசவேண்டிய அவசியமே கிடையாது.
மற்றவர்களுக்கு சட்டப்படியும் உரிமை இல்லை. அறவழிப்பட்ட முறையிலும், தார்மீக முறையிலும் உரிமை இல்லை என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
வேறு சரக்கு இல்லாதவர்கள் இதைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
இயக்கத்தினுடைய எதிர்காலம் கருதி, பாதுகாப்பைக் கருதி செய்யப்பட்ட ஏற்பாடே!
தெளிவாகவே அய்யா அவர்கள் சொன்னதோடு மட்டுமல்ல – திருமணம் என்பது சட்டப்படிக்கான ஒரு பெயர். மற்றபடி இயக்கத்தினுடைய எதிர்காலம் கருதி, பாதுகாப்பைக் கருதி செய்யப்பட்ட ஏற்பாடே ஆகும் என்றார்.
இவ்வளவு தெளிவாக அய்யா அவர்கள் சொன்னார். இந்த விவரத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், நியாயமானவர்கள் தெரிந்துகொள்வார்கள்.
‘‘தூங்குவதுபோன்று படுத்திருப்பவனை எப்படி எழுப்ப முடியும்?” என்கிற பழமொழி ஒன்று உண்டு.
ஆகவே, இதைப்பற்றி நாம் அதிகமாகக் கவலைப் படவேண்டிய அவசியம் இல்லை.
(தொடரும்)