இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்: மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

viduthalai
1 Min Read

மும்பை, மார்ச் 17 காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி ‘பாரத ஒற்றுமை நீதி பயணம்’ என்ற பெயரில் 2 ஆவது கட்ட நடைப் பயணத்தை கடந்த ஜனவரி 14 ஆம்தேதி மணிப்பூரில் இருந்து மும்பையை நோக்கி தொடங்கினார். நடைப் பயணத்தின் நிறைவு நாளான நேற்று (16.3.2024) தானே நகர் வழியாக நடைப் பயணம் மும்பை வந்தடைந்தது. மும்பையில் வழிநெடுகிலும் மக்கள் அவரை வரவேற்றனர். மும்பை நடைப்பயணத்தில் ராகுல்காந்தியுடன் பிரியங்கா காந்தியும் கலந்துகொண்டார்.

இந்த நிலையில், இன்று (17.3.2024) மாலை 5 மணி அளவில் மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் ராகுல்காந்தியின் நடைப் பயண நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.
மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்- சரத்சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக மும்பை புறப்பட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *