கடவுள் சிலைகளுக்குச் சக்தி உண்டா?

Viduthalai
3 Min Read

“தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட, 900க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கையை தீவிரப் படுத்தி உள்ளோம், ” என, மாநில சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சைலேஷ் குமார் யாதவ் கூறினார்.

மேலும், அவர் கூறியதாவது: தமிழகத்தில், ஹிந்து அற நிலையத் துறையின் கீழ், 36,000க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இவற்றில், 4.60 லட்சம் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில், 3,000த்துக்கும் மேற்பட்ட சிலைகள் காணாமல் போய் உள்ளன. 

இச்சிலைகள் எங்கு போனது? திருடிய நபர்கள் குறித்து விசாரித்து வருகிறோம். அந்த வகையில், அரியலூர் மாவட்டம், சுத்தமல்லி வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து, 20 சிலைகள் திருடு போனது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர கபூர் என்பவர், அமெரிக்காவில் குடியுரிமை பெற்றுள்ளார். அவர், தமிழகத்தில் உள்ள, சோழர் கால சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை அமெரிக்காவுக்குக் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

சர்வதேச போதை பொருள் கடத்தல்காரரான சுபாஷ் சந்திர கபூர், 2011ல், ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார். பின், சென் னைக்கு அழைத்து வந்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டு உள்ளார். 

அவருக்கு ஒரு வழக்கில், 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. மற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளன. சுபாஷ் சந்திர கபூரால் கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். 

அமெரிக்காவில் உள்ள, கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் இணையதளத்தில் படங்களை வெளியிட்டு வருகின்றன. அவற்றை கண்காணித்தும், தனியார் அமைப்புகளின் தகவல்கள் வாயிலாக, 900 சிலைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். 

திருடர்கள், இவர்களுக்கு உடந்தையாக இருக்கும் கோவில் நிர்வாகிகள், சிலைகளை வாங்கி விற்கும் புரோக்கர்கள், வெளிநாடுகளுக்குக் கப்பல் மற்றும் விமானம் வாயிலாக கடத்துவோர் குறித்தும் விசாரித்து வருகிறோம்.

தமிழகத்தில் இருந்து நேபாளம் வழியாக, சிங்கப்பூர் சென்று அங்கிருந்து வெவ்வேறு நாடுகளுக்குச் சிலை கடத்தல் நடப்பது தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை வேப்பேரி அருகே, சூளை ஜெனரல் காலின் சாலையில் உள்ள, தனியார் கல்லூரி அருகே, நேற்று மாலை, 3:00 மணியளவில், தூய்மை பணியாளர்கள் பரமேஸ்வரி, கவுரி ஆகியோர் அந்த இடத்தில் உள்ள, கோணிப்பையைப் பார்த்தனர். 

அதில், 3 அடி உயர நடராஜர் சிலை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து துப்புரவு ஆய்வாளர் தேவதாசுக்குத் தகவல் தெரிவித்தனர். அவர் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

போலீசார் சிலையை மீட்டு, அதன் தொன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். ‘பஞ்சலோக சிலை மாதிரி தெரிய வில்லை. முழுமையான ஆய்வுக்கு பின், சிலை எந்த பொருளில் செய்யப்பட்டது என்பது குறித்து தெரியவரும்” என்கின்றனர் போலீசார்.”

– ‘தினமலர்’ 26.9.2023 பக்கம் 3

மேற்கண்ட தகவல்கள் வெளிப்படுத்துவது என்ன?

ஒவ்வொரு கோயிலுக்கும் ஸ்தல புராணங்கள் உண்டு. அந்தக் கோயிலில் குடிகொண்டு இருக்கும் கடவுள் அல்லது சாமிக்கு என்னென்ன சக்தி எல்லாம் உண்டு என்று பட்டியல் போடுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.

எந்தெந்த பொருள்களைக் கொண்டு நைவேத்தியம் செய்தால் என்னென்ன பலன்கள் உண்டு என கோயில் சந்நி தானத்தில் பட்டியல் ஒன்றையே தொங்க விட்டு இருப்பார்கள்.

இவையெல்லாம் உண்மை என்றால், இந்த சக்தி உள்ளதாகக் கூறப்படும் சாமி சிலைகள் கடத்தப்பட்டுள்ளனவே – கொள்ளை விலைக்கு வெளிநாடுகளில் விற்கப்பட்டுள்ளனவே! அப்படி என்றால் இவையெல்லாம் வெறும் பொம்மைகள், கற்சிலைகள் அல்லது உலோகங்களால் சிற்பிகளால் செதுக்கப்பட்டவை – அவ்வளவே!

சக்தியாவது – வெங்காயமாவது என்பதை ஒப்புக் கொள்வார்களா? பணத்தையும், நேரத்தையும் விரயப்படுத்தும் பக்தர்கள் திருந்துவார்களா?

இதில் இன்னொரு முக்கிய தகவல் உண்டு.

பாரதத்தில் ஒரு பாகமாகச் சொல்லப்படும் உத்தர கீதையி லிருந்த இது தரப்படுகிறது.

“துவிஜதகர்களுக்குத் (பார்ப்பனர்களுக்கு) தெய்வம் அக்னியில், முனிவர்களுக்குத் தெய்வம் இருதயத்தில், புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலைகளில்!…”

இப்பொழுது தெரிகிறதா? கோயில் என்பதும், அதில் சிலைகள் என்பவையும் புத்தி குறைந்தவர்களுக்கே!

தந்தை பெரியார் சொன்னால் மூக்குமேல் கோபம் வரும் பேர் வழிகள் சிந்திப்பார்களாக!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *