விடுதலை பெற்ற இந்தியாவின் துணைப் பிரதமர் தேவிலால் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். பின்னர் ஜனதா கட்சியில் இருந்தார். பிறகு ஜனதா தளத்தில் இருந்தார். வி.பி.சிங் பிரதமர் ஆவதற்கு மிகவும் முக்கியமான நபராக கருதப்பட்டார்.
பின்னர் இந்திய தேசிய லோக்தளம் என்ற கட்சியைத் துவங்கினார். இவரது மகன் ஓம்பிரகாஷ் சவுதாலா. இவர் அரியானா முதலமைச்சராக இருந்தார். தற்போது ஆசிரியர் தேர்வு முறைகேட்டில் சிக்க வைக்கப்பட்டு சிறையில் உள்ளார். இந்தியாவிலேயே 90 வயதாகியும் சிறையில் உள்ள ஒரே அரசியல்வாதி ஓம் பிரகாஷ் சவுதாலா மட்டுமே.
ஜாட் சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு அரியானாவின் பெரும் நில உடைமையாளர்களும் செல்வந்தர்களுமாக உள்ள ஜாட் சமூகத்தின் ஆதரவு உள்ளதால் இவர்களுக்கு அரியானாவில் வாக்கு வங்கி அதிகம்.
ஓம் பிரகாஷ் சவுதாலா ஊழல் வழக்கில் சிறை சென்றதால் கட்சியின் நற்பெயர் கெட்டு ஜாட் மக்களின் ஆதரவு இழந்தது.
இந்த நிலையில் அரியானா மாநிலத்தில் அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபட்ட பாஜக அமித்ஷா மூலம் இந்திய தேசிய லோக்தளம் கட்சியை உடைத்தது. ஜாட் மக்களிடையே ஆதரவை இழந்த அந்தக் கட்சியால் எந்தப் பலனும் இல்லை, பா.ஜ.க.விற்கு அங்கு பலமான ஆதரவு இல்லை என்ற நிலையில் ஜாட்களுக்கான புதிய கட்சி ஜனநாயக ஜனதா கட்சி என்ற பெயரில் பிறகு துஷ்யந்த சவுதாலா 2019ஆம் ஆண்டு ஒரு கட்சியை துவக்கினார்.
இது முழுக்க முழுக்க பாஜகவின் மறைமுக திட்டத்தில் உருவான கட்சி. இருப்பினும் பாஜகவை கடுமையாக எதிர்ப்பதாக காட்டிக் கொண்டது.
அரியானாவில் காங்கிரஸ் எதிரணி பாஜக என்று இருந்தால் ஜாட் வாக்குகளும், தாழ்த்தப்பட்ட மற்றும் தெற்கு அரியானாவில் பெரும்பாலாக உள்ள இஸ்லாமியர்கள் வாக்குகளும், வடக்கு மாவட்டங்களில் உள்ள சீக்கியர்களின் வாக்குகளும் காங்கிரசுக்குச் செல்லும்.
இந்த நிலையில் ஜாட் ஓட்டுகளில் ஓட்டை விழுந்தால் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு இடம் கிடைக்காது என்று அமித்ஷாகணக்குப் போட்டுத்தான் துஷ்யந்த சிங் சவுதாலாவை புதிய கட்சியை துவங்க வைத்து பாஜகவை கடுமையாக எதிர்த்து பேசவைத்தார்.
2018ஆம் ஆண்டு கட்சி துவங்கிய நாளே மோடி அரசாங்கத்தையும் அப்போது அரியானாவில் ஆட்சியில் இருந்த பாஜக அரசையும் கடுமையாக எதிர்த்தார்.
அமித்ஷாவின் கணக்கு சரியாகப்பட்டது. 2019ஆம் ஆண்டு அரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு ஆட்சிக்குத் தேவையான வாக்குகள் கிடைக்காமல் போனது. அதே நேரத்தில் ஒட்டு மொத்த ஜாட்களின் வாக்குகளைப் பெற்று கட்சி துவங்கிய சில மாதங்களிலேயே 10 இடங்களில் வெற்றி பெற்றது துஷ்யந்த் சிங் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி.
90 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டமன்றத்தில் பாஜக 40 இடங்களும், காங்கிரஸ் 30 இடங்களும் கட்சி துவங்கி ஓர் ஆண்டே ஆன ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களும் வென்றன. ஜாட்களின் வாக்குகளும் அவர்களுக்கு கீழே அவர்களிடம் கூலியாட்களாக உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தவரின் வாக்குகளில் பாதியும் அப்படியே துஷ்யந்த சவுதாலாவிற்குச் செல்ல அவர் 10 இடங்களைப் பெற்றார்.
பாரம்பரிய ஓட்டுகளும் இஸ்லாமியர் ஓட்டுகளும் சீக்கியர்களின் சிதறிய வாக்குகளால் காங்கிரசுக்கு 30 இடம் கிடைத்தது. மேலும் சுயேட்சைகள் 7 இதர கட்சிகளுக்கு 2 இடங்கள் கிடைத்தன. இப்போது பா.ஜ.க.விற்கு திடீரென துஷ்யந்தின் ஆதரவு கிடைத்தது.
நான்கு ஆண்டுகள் முடிவு அடைந்த நிலையில் ஜாட் மக்க ளின் கோபம் மற்றும் விவசாயிகள் போராட்டத்தினால் ஏற்பட்ட மக்களின் கோபம் பாஜக மற்றும் துஷ்யந்த் மீது திரும்பினால் அரியானாவில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் 5 கிடைப்பது கூட கடினம். ஆகவே மீண்டும் அம்மாநில மக்களை ஏமாற்ற துஷ்யந்த் தனது ஆதரவை திரும்பப் பெறுவது போல் நடிக்க மனோகர்லால் கட்டார் அரசு கவிழ்ந்தது. இருப்பினும் சுயேட்சையாக உள்ள 7 உறுப்பினர்களின் உதவியோடு மீண்டும் பாஜக ஆட்சி. ஆனால், இம்முறை மனோகர் லால் கட்டார் என்ற உயர்ஜாதி முதலமைச்சர் இல்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நயாப் சிங் சைனி முதலமைச்சர் ஆனார்.
இப்போது மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் இரண்டு மாநிலத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவரை முதலமைச்சர்களாக அமர்த்தி உள்ளதன் மூலம் ஹிந்தி பெல்டில் அதிகம் உள்ள ஓபிசி மக்களின் வாக்குகளையும் பெறமுடியும்.
ஆனால் அரியானாவில் குறுகிய காலத்தில் அதீத வளர்ச்சி பெற்ற ஆம்ஆத்மி இளைய சமூதாயம் மற்றும் சீக்கியர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. மேலும் காங்கிரசோடு கூட்டணி அமைத்துள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் சீக்கியர்கள் இளைய தலைமுறை புதிய வாக்காளர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வாக்குகள் அப்படியே இந்தியா கூட்டணிக்குச் செல்லும்.
மீதமிருப்பது விவசாயிகள் மற்றும் ஜாட் வாக்குகள் மட்டுமே இவற்றை சிதறடித்தால் பாஜக அதிக இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளது. ஆகவேதான் திட்டமிட்டு மீண்டும் கூட்டணியில் இருந்து வெளியேறிய ஒரு நாடகத்தை பாஜக அரங்கேற்றி உள்ளது.
அதே நேரத்தில் மக்களவைத் தேர்தலில் ஜாட் மக்களின் வாக்குகள் சிதறும் – ஒபிசி வாக்குகளும் சிதறும் – சீக்கியர்கள் வாக்கும் சிதறும் – இஸ்லாமிய வாக்குகள் மட்டும் காங்கிரசுக்குச் செல்லும். இதனால் ஒரு சீட்கூட கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விடும் என்று பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது.