தீர்ப்புகள் கொடுக்கும் மாற்றங்கள்

viduthalai
10 Min Read

பாணன்

சில தீர்ப்புகள் வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும் – அது எந்தப் பக்கச்சார்பாக இருந்தாலும் சரி.
தீர்ப்புகளில் எதிர்மறை நேர்மறை என்பது தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட மற்றும் நன்மை பெறப்பட்டவர்கள் சொல்லும் விமர்சனம்.
“மனசாட்சியின் படி” வந்த ராமன் கோவில் தீர்ப்பு எப்படியானது – அந்த ராமன் கோவில் தீர்ப்பிற்கு பின்னால் உள்ள அரசியல் குறித்து பல கட்டுரைகள் ஆங்கில நாளிதழ்களில் வந்துள்ளன.

சமீபத்தில் ஆளுநர்களுக்கு அறைவிட்டது போன்ற தீர்ப்புகள்
பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கில், ‘மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் முன்பே மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தரவேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ”ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். ஒருவேளை அது நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால் முடிவை நிறுத்தி வைக்கலாம் அல்லது அதில் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைத்து அரசுக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கலாம். ஆனால், எதுவுமே செய்யாமல் காலவரை யின்றி மசோதாக்களை கிடப்பில் போட முடியாது” என்று தமிழ்நாடு அரசின் மனு தொடர்பான விசாரணையில் தலைமை நீதிபதி தெரிவித்த கருத்து மற்றும்,
முந்தைய சந்திரசேகர ராவ் தலைமை யிலான தெலங்கானா அரசால் மசோதாக்களை இழுத்தடிக்கும் அம்மாநில ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு – அதுபோன்று கேரள ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்த வழக்குகளையும் குறிப்பிடலாம். அதே போல் சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த மோசடியை கடுமையாக கண்டித்த தீர்ப்பு – கடைசியாக தேர்தல் பத்திரம் தொடர்பான தீர்ப்புகள்.
ராமன் கோவில் தீர்ப்பிலும் சமீபத்திய தீர்ப்பிலும் இரண்டு பிரிவினரிடையே எதிர்ப்பும் ஆதரவும் இருந்து வருகிறது.
சில தீர்ப்புகள் பேசப் பட்டுக்கொண்டே இருக்கும். அது கேசவானந்த பாரதி வழக்காக இருந்தாலும், ஜபல்பூர் ஹேபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு) தீர்ப்பாக இருந்தாலும் அவை இன்றும் விவாதத்திற்குள்ளாகின்றன.

புதிய அத்தியாயம்
தற்போது தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கின் சகாப்தத்தில் நாம் நிற்கிறோம்.
தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு புதிய அத்தியாயத்தை உருவாக்கி உள்ளது.
அதுவும் அந்தத் தீர்ப்பு வந்த காலகட்டத்தில் விரைவில் தேர்தல் வர உள்ளது. அனைத்து அதிகாரத்திற்கும் தலைமைக் கிரீடம் கொண்டவன் நானே என்று பிரதமர் இறுமாப்போடு இருக்கும் போது இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.
அதீத வல்லமை கொண்டவன் நான் என்ற நினைப்பில் உள்ள ஆட்சியாளர்களால் அரசமைப்புச் சட்டம் மீறப்படும் போது அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படும் போது – இதுபோன்ற தீர்ப்புகள் மக்களாட்சியின் மாண்புக்கு இழுக்கு ஏற்பட்டுவிடுமோ என்று கவலைப்படும் கோடானுகோடி மக்களுக்கு ஆறுதலானதாகவே இருக்கும்.
தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டும் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறி, அந்த நடைமுறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது. கடந்த 2019 முதல் தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்தது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு எஸ்.பி.அய். வங்கிக்கு உத்தரவிடப்பட்டது.
‘இந்த தகவல்களை திரட்டி, வகைப்படுத்தி தருவது சிக்கலான நடவடிக்கை. இதற்கு, ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஅய் சார்பில் மார்ச் 4ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, எஸ்பிஅய் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அவகாசம் ஏன்?
இதற்கிடையே, கூடுதல் அவகாசம் கேட்டு எஸ்பிஅய் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு 11.3.2024 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி கூறியது: ‘தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடுமாறு கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி உத்தரவிட்டோம். கடந்த 26 நாட்களாக எஸ்பிஅய் அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். அதுபற்றி எதையும் தெரிவிக்கவில்லை.
பல்வேறு கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்ட போதிலும் அதுதொடர்பான அனைத்து தகவல்களும் மும்பையில் உள்ள எஸ்பிஅய் தலைமை அலுவலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே, அதில் இருந்து தகவல்களை தொகுத்து தருவது சுலபமான காரியம்தான்.
ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் உள்ள சில ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். நாங்கள் கேட்ட விவரங்களை வழங்குவது எஸ்பிஅய் போன்ற மிகப்பெரிய வங்கிக்கு கடினமான வேலை அல்ல. இதற்கு முன்பும் இதுபோன்ற பணிகளை எஸ்பிஅய் குறித்த நேரத்தில் நிறைவேற்றியுள்ளது. அப்படி இருக்க, தேர்தல் பத்திர விவகாரத்தில் அவகாசம் கோருவது ஏன்?

கண்டனத்திற்குரியது
எஸ்பிஅய் வங்கியிடம் நேர்மையான செயல்பாட்டை எதிர்பார்க்கிறோம். தேர்தல் பத்திர விவரங்களை தற்போது வெளியிட வேண்டியது அவசியம். எங்கும் இணையமயமாகிவிட்ட இந்த சூழலில் தகவலை திரட்டுவது முடியாத காரியமும் அல்ல. உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஒரு வங்கி அதிகாரி மேல்முறையீடு செய்வது மிகவும் தீவிரமான விஷயம், கண்டனத்துக்குரியது.
எனவே, எஸ்பிஅய் விடுத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, அவகாசம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர நிதி தொடர்பான அனைத்து விவரங்களையும் 12.3.2024 அன்று மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஅய் சமர்ப்பிக்க வேண்டும். அதை தேர்தல் ஆணையம் 15.3.2024க்குள் அதன் இணையத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட வேண்டும். விவரங்களை கொடுக்கத் தவறினால் எஸ்பிஅய் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தலைமை நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவசர அவசரமாக ஒரு கடவுச்சொல் உள்ள மின்னணு சேமிப்பானில் (பென் டிரைவ்) ஒட்டுமொத்த தகவலும் அடங்கிய பிடிஎப் பைல் அடுத்து ஒரு மூடி முத்திரையிடப்பட்ட கடிதத்தில் ரகசிய கடவுச்சொல் போன்றவைகளை வைத்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துவிட்டது. இதன் நகல்களை உச்சநீதிமன்றத்திடம் கொடுத்துவிட்டார்கள்.
15ஆம் தேதி கொடு என்ற நிலையில் 14 ஆம் தேதி மாலையே தேர்தல் ஆணையம் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.

ஞாயிறு மலர், திராவிடர் கழகம்

ஊழலை சட்டபூர்வமாக்கவா?
இதன் மூலம் ஊழலை சட்டப் பூர்வமாக ஆக்கிய பெருமை மோடி அண்ட் கம்பெனியைச்சேரும், நானும் சாப்பிடமாட்டேன், (லஞ்சம் வாங்க மாட்டேன்) மற்றவர்களையும் சாப்பிட விடமாட்டேன் (வாங்க விடமாட்டேன்) இதுதான் 2014ஆம் ஆண்டு தேர்தல் முடிந்து ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு மோடி பேசியது. அதுமுதல் 10 ஆண்டுகளாக தொடர்ந்து பல முறை பேசி இருக்கிறார்.
அப்படி என்றால் லஞ்சம் என்பது சட்டவிரோதமான ஒன்று – அதை சட்டப் பூர்வமாக்கிவிட்டால்…..;
அதைத்தான் மோடி அமித்ஷா அண்ட் கோ செய்தது.

தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்ட புள்ளி விபரங்கள் மிகவும் அபாயகரமான உண்மைகளுடன் வெளிவந்துள்ளன.
ஒட்டுமொத்த நாட்டின் நிர்வாகத்தையே ஊழல் என்னும் அசிங்கம் கொண்டு பூசி வைத்துள்ளது தெரிவந்துள்ளதுள்ளது. அத்தனை அமைச்சரவைகளிலும் ஒப்பந்தங்கள் பெறவும் தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் லஞ்சம் பெறப்பட்டுள்ளது
ஏப்ரல் 1, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை 22,217 பத்திரங்கள் வாங்கப்பட்டன. அதில் 22,030 பத்திரங்கள் பணமாக மாற்றப்பட்டுள்ளன.
‘பிஜிஸ்டைரக்’ என்பது ஒரு கட்டுமான நிறுவனம். மும்பையில் கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயிரிழக்கிறார்கள், உயிரிழந்தவர்கள் ஒப்பந்ததாரர்கள். ஆகையால் அக்குடும்பங்களுக்கு இழப்பீட்டை நாங்கள் கொடுக்க முடியாது என்று அந்த நிறுவனம் கைவிரித்துவிட்டது இதே நிறுவனம் 2023 ஜனவரி மாதம் முதல் கோடிக்கணக்கில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்குகிறது. ஆனால் விபத்து நடப்பதற்கு முன்பாக அந்த நிறுவனம் இத்தகைய நன்கொடைகளைக் கொடுத்தது கிடையாது.

கரோனா காலம்
கரோனா காலத்தில் மக்கள் உணவிற்கு வழியில்லாமல் சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட காலாவதியான உணவை சேகரித்து சாப்பிட்டுக்கொண்டே பல நூறு கிலோ மீட்டர்களை நடந்தே கடந்தனர். நரகத்தை விடக் கொடுமையான சூழலில் அவர்கள் நடந்தார்கள். மும்பை யிலிருந்து நடந்த போது வார்த்தா பகுதியில் சில சமூக விரோதிகளால் நடந்து சென்ற பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள் என்ற செய்தியும் பத்தோடு ஒரு செய்தியாக கடந்து சென்றது. ஆனால் அந்த நேரத்தில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை பா.ஜ.க.விற்கு பெரு நிறுவனங்கள் வாரி இறைத்துக்கொண்டு இருந்தனர்.
மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 2017-2018ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் திட்டத்தை அறிவித்தார்.

தேர்தலின்போது அரசியல் கட்சிகள் 20,000 ரூபாய்க்கு மேல் தனிப்பட்ட ஒருவரிடமிருந்து நிதி பெற்றிருந்தால், அப்படி நிதி வழங்கியவர்களின் பெயர் மற்றும் தொகையின் தரவுகளை நிதி ஆண்டின் இறுதியில் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று Representation of People Act சட்டத்தில் இடம் பெற்றிருந்தது. இதனை Electoral Bond Scheme  2018 மூலம் திருத்திய பா.ஜ.க. அரசு, தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி வழங்குபவரின் பெயர்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை என மாற்றியது.
இதற்காக மே 14, 2016 அன்று நிதிச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இது வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் 2010 (FCRA) இன் பிரிவு 2(1)(J)(Vi)அய் திருத்தியது. இதன் மூலம் இந்திய நிறுவனங்களில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு முன்பு வெளிநாட்டு நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பது தடை செய்யப்பட்டிருந்தது.

சட்டத் திருத்தம்
அதன் பிறகு மார்ச் 31, 2017 அன்று தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட பங்களிப்புகளின் விரிவான பதிவை வைத்திருப்பதில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில் வருமான வரிச் சட்டத்தின் 13A பிரிவு திருத்தப்பட்டது.
ஒன்றிய அரசாங்கம் தேர்தல் பத்திரங்களை வெளியிட எந்த ஒரு அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கியையும் அங்கீகரிக்க அனுமதித்த RBI சட்டத்தின் பிரிவு 31 திருத்தப்பட்டது.

RoPA இன் பிரிவு 29சி-க்கு ஒரு விதியை அறிமுகப்படுத்தினார்கள். இதன் மூலம் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட பங்களிப்புகளை “நன்கொடை அறிக்கைகளில்” வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 182-அய்த் திருத்தினார்கள். இதன் மூலம் ஒரு நிறுவனம் ஒரு அரசியல் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை அளிக்கலாம் என்பதற்கான உச்ச வரம்பை நீக்கினார்கள். இதற்கு முன்னர் நிறுவனங்கள் மூன்று ஆண்டு நிகர லாபத்தில் 7.5 சதவீதம் வரை மட்டுமே நன்கொடை அளிக்க முடியும் என்றிருந்தது.

ஒரு தேர்ந்த திருடன் கூட திருடுவதற்கு இப்படி எல்லாம் திட்டமிட முடியாது.
கடன் பத்திரங்கள் அனைத்தும் எஸ்பிஅய் வங்கிக் கிளைகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. ரூ. 1,000 முதல் ரூ 10,000000 மதிப்புகளில் தேர்தல் பத்திரங்களானது விற்கப்பட்டது. இதன் மூலம் தனி நபர், பெரு நிறுவனங்கள் என அனைவரும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நிதி அளிக்க முடியும். ஒருவர் எத்தனை தேர்தல் பத்திரம் பெறலாம் போன்ற எந்த அளவு கட்டுப்பாடுகளும் இல்லை என்பதால், கார்ப்ரேட் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டிய கமிசனை சட்டப்படியே கார்ப்ரேட்களால் கொடுக்க முடிந்தது.
கார்ப்ரேட்டுகள் சட்டவிரோதமாக அடிக்கும் கொள்ளையில் தங்களுக்கான பங்கை சட்டப்படியே பெற்றுக்கொள்ள கார்ப்ரேட் கொள்ளைக்கு மோடி அண்ட் கோ வழி ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இதன் மூலம் கணக்கு வழக்கற்ற கருப்புப் பணம் தேர்தல் நிதியாக அரசியல் கட்சிகளின் கஜானாவில் குவிந்தது. ஒவ்வொரு கட்சியின் கார்ப்ரேட் சேவை யைப் பொறுத்து கார்ப்ரேட்கள் வீசும் எலும்புத் துண்டுகளின் விகிதமும் வித்தியாசப்பட்டது.
மோடி பதவியேற்றதில் இருந்து ஒட்டுமொத்த கார்ப்ரேட்களின் நம்பிக்கை நட்சத்திரமாக, செயல்பட்டதால் கார்ப்ரேட் களால் அதிகம் நிதி கொடுக்கப்படும் கட்சியாக பி.ஜே.பி.யே இருந்து வந்தது.
கடந்த ஆண்டு டிசம்பரில் மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சகம் பகிர்ந்து கொண்ட இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் 2015 மற்றும் 2023 நிதியாண்டிற்கு இடைப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் ரூ.10.42 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன. அவற்றில் அதிக கடன் தொகையைத் தள்ளுபடி செய்த முதல் அய்ந்து வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

வரிச் சலுகைகள்
ஒரு பக்கம் இப்படி கடன் கொடுத்து கடன் தள்ளுபடி நாடகம் ஆடும் அரசு இன்னொரு பக்கம் அவர்களுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கியது.
2019லேயே நிதி அமைச்சர் கார்ப்பரேட்டு களுக்கான வரியை 30%லிருந்து 22%ஆகக் குறைத்தார். இதனால் அரசுக்கு ஓர் ஆண்டுக்கு அன்றைய தேதியில் ஏற்பட்ட இழப்பு 1,45,000 கோடி ரூபாய் என்றும் அவரே கூறினார். 2020 பட்ஜெட்டில் நேர்முக வரியில் 65,000 கோடி ரூபாய்க்கு சலுகை அளித்ததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் மந்த நிலையைக் காரணம் காட்டி ஏற்றுமதிக்கு 50,000 கோடி ரூபாய், பன்னாட்டு நிதி மூலதனத்திற்கு 10000 கோடி ரூபாய் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளுக்கு 25000 கோடி ரூபாய் என்று மொத்தம் 300000 கோடி ரூபாயை விரல் விட்டு எண்ணக்கூடிய பெரிய முதலாளிகளுக்கும் 2019-2020இல் பாஜக அரசு ஒதுக்கியது.

இப்படி வரிச்சலுகைகள் – கடன் தள்ளுபடி என அனுபவித்த கார்ப்ப ரேட்டுகள் அதற்கு நன்றிக் கடனாக தங்கள் பங்கிற்கு கொடுப்பதற்காகவே உருவாக்கப் பட்டதுதான் இந்தத் தேர்தல் பத்திரங்கள். கடந்தாண்டு அக்டோபர் 12ஆம் தேதி அயர்லாந்து நாட்டின் ‘Concern World wide’ மற்றும் ஜெர்மன் நாட்டின் ‘Welt Hunger Hilfe’ வெளியிட்ட உலகப் பட்டினிக் குறியீடு (GHI) அறிக்கையின்படி 125 நாடுகளின் பட்டியலில் இந்தியா 111ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 107ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் ஜனநாயக மாண்பினை காக்கும் வகையில் சில தீர்ப்புகள் வந்துள்ளன. இந்த தீர்ப்பையும் இதனைத் தொடர்ந்து ஏற்படும் அதிர்வலைகளையும் எதிர்க்கட்சிகள் எப்படி பயன்படுத்தி தேர்தல் களத்தை வெல்லப் போகின்றன என்பதை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *