சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி வள்ளுவர் நகரில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் (எ) அன்வர் உசேன் (வயது 59) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு, சாந்தி என்பவரைத் திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் சாந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டுப் பிரிந்த பாலசுப்பிரமணியன், திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த சையத்அலி பாத்திமா என்பவரை 28 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மேலும் அவர் முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை அன்வர் உசேன் எனவும் மாற்றிக்கொண்டார்.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய சையத்அலி பாத்திமா தரப்பினர் ஏற்பாடு செய்து வந்தனர்.
ஆனால் திடீரென்று அங்கு வந்த முதல் மனைவி சாந்தி தரப்பினர், பாலசுப்பிரமணியனின் பூர்வீக ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பேரையூரில் இந்து முறைப்படி தான் அடக்கம் செய்யப் போவதாகவும் உடலை தங்களிடம் தர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதுகுறித்து காரைக்குடி கூடுதல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் இரு தரப்பினரும் சென்று புகார் தெரிவித்தனர். இதையடுத்து இருத்தரப்பினரிடமும் வருவாய் துறையினர் முன்னிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சையத்அலி பாத்திமா தரப்பினர் கூறுகையில், ஏற்கெனவே சாந்தியை விவாகரத்து செய்து விட்டார். இதனால் நாங்கள் தான் அடக்கம் செய்வோம் என்று கூறினர்.
ஆனால் சாந்தி தரப்பினர் கூறுகையில், விவாகரத்து உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் எங்களிடம் தான் உடலை ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். இப்பிரச்சினையில் காவல் துறையினர் முடிவெடுக்க முடியாமல், உடலைக் கைப்பற்றி காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்தனர்.
கணவர் உடலை யார் அடக்கம் செய்வது என்று இரண்டு மனைவிகளும் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்று உடலை பெற்றுக் கொள்ளுமாறு கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இறந்த கணவரின் உடலுக்கு இந்து முறைப்படி சடங்கு செய்து முஸ்லீம் மதப்படி அடக்கம் செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது எப்படி இருக்கிறது? மனிதன் சாகிறான். ஆனால் மதம் மட்டும் அவனை விடுவதாக இல்லை. இதாவது இரண்டு மதங்களைச் சார்ந்த பிரச்சினை!
இந்து மதத்துக்குள்ளேயேகூட ஒருவன் மரணத்தில் சுடுகாட்டுப் பிரச்சினை கொம்பு முளைத்துக் கூச்சலிடுகிறது.
சுடுகாட்டுக்குச் செல்லும் பிரச்சினையில்கூட அடிதடி தகராறுகள் நடக்கின்றன.
சென்னையில் மின் தகன முறை கொண்டு வரப்பட்டபோது அதனை ஏற்க மதவாதிகள் முன்வரவில்லை. எதிர்ப்புத் தெரிவித்ததுண்டு. இப்பொழுது மின் தகன சுடுகாட்டுக்குக் கொண்டு செல்ல போட்டிப் போட்டுக் கொண்டு முன் பதிவு செய்ய வேண்டியுள்ளது.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது. மதமும் அதற்கு விதி விலக்கல்ல.
மரணத்திலும் மதமா?
Leave a Comment