சென்னை, செப்.28 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேர்வாணையத் தின் மூலமாக தொகுதி-4 பணியிடங் களுக்கு தேர்வு செய்யப்பட்ட 10 ஆயிரத்து 205 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை நேற்று (27.9.2023) வழங்கப் பட்டது.
முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 12 இளைஞர் களுக்கு பணிநியமன ஆணைகளை நேரில் வழங்கினார். அந்தந்த மாவட்டங் களில் அமைச்சர்கள், உரியவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கு வார்கள்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஒருவருக்கு வேலை கிடைத்தால் அது பல தலைமுறைக்கும் பயனளிக்கும். லட்சம் பேர் தேர்வு எழுதி லட்சத்தில் ஒருவராக தேர்வான உங்களுக்கு மக்கள் சேவை என்ற ஒன்றுதான் லட்சியமாக இருக்க வேண்டும். இறக்கும் முன்பு உறுப்புக் கொடை வழங்குவோரின் இறுதி நிகழ்வுகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று நான் அறிவித்தபடி, உடல் உறுப்புக் கொடை செய்து, அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்ட முதல் நபர், ஓர் அரசு ஊழியர்தான். தேனி மாவட்டம், சின்ன மனூரில் மூளைச்சாவு அடைந்ததால், உடல் உறுப்புக் கொடை செய்த அரசு ஊழியர் வடிவேலு உடல் அரசு மரி யாதையோடு அடக்கம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் கலந்து கொண்டார்.
தமிழ்நாட்டில் இருக்கிற பல்வேறு ஒன்றிய அரசுத் துறைகளான ரயில்வே, அஞ்சல் துறை, வங்கிகள் ஆகியவற்றில் இருக்கக்கூடிய காலிப் பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு முன்னு ரிமை அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறோம். ஒன்றிய அரசு பணிகளுக்கான தேர்வுகள் தமிழ் மொழியிலும் நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன்.
என்னுடைய இந்த கோரிக்கையை ஏற்று, ஸ்டாப் செலக்சன் கமிஷன் மூலமாக 10ஆ-ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தரத்தில், பன்முகப் பணியாளர் பதவிக்காக நடத்தப்படுகிற தேர்வை தமிழ் மொழியிலும் எழுதலாம் என்று ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது.
எனது கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 13 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. நிர்ணயித்த இலக்கான பத்து லட்சத்தை தாண்டி பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ஒன்றிய அரசால் நடத்தப்படுகிற போட்டித் தேர்வுகளிலும் நம்முடைய மாணவர்கள் அதிகமாக தேர்வாகவேண்டும் என்று எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., வங்கிப் பணி போன்றவற்றிற்காக 5 ஆயிரம் பேருக்கு ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகளை ‘நான் முதல்வன்’ திட்டத்தில் நாம் நடத்திக்கொண்டு வருகிறோம். குடி மைப்பணி தேர்வில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறவேண்டும் என்று முதனிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 1,000 பேருக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் ஊக்கத்தொகையும், பயிற்சியும் வழங்குகிற புதிய திட்டமும் அறி முகப்படுத்தப்பட்டிருக்கிறது. வரும் அக்டோபர் மாதத்திலிருந்து இது தொடங்கப்படும். இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி, மாநில அரசு பணிகள் போலவே, ஒன்றிய அரசு பணிகளிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகளவில் தேர்வாக வேண்டும்.
தமிழ்நாடு அரசு அமைந்த கடந்த 2 ஆண்டு காலத்தில் 12 ஆயிரத்து 576 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டிருக் கிறது. தற்போது 10 ஆயிரத்து 205 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மேலும் 17 ஆயிரம் பேருக்கு பல்வேறு அரசுப் பணிகள் வழங்கப்பட இருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு அரசுப் பணிகளுக்கு 50 ஆயிரம் பேர் தேர்ந் தெடுக்கப்பட இருக்கிறார்கள். மக்கள் உங்களிடம் கோரிக்கையுடன் வரும்போ தெல்லாம் என்னுடைய இன்னொரு முகமாக, என்னுடைய பிரதிநிதியாக, இந்த அரசின் அலுவலராக இருக்கிற நீங்கள், மக்களை எளிமையாக அணுகி, அவர்கள் குறைகளையும், பிரச்சினை களையும் தீர்த்து வைத்து, அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் அவர்களிடம் சேர்த்து பயனடையச் செய்யவேண்டும் என்பதுதான் என்னு டைய வேண்டுகோள். ஒரு ஏழையின் கண்ணீரை உங்கள் கரங்கள் துடைத்தால் அதன் பெருமையும், ஒருத்தர் உதா சீனப்படுத்தினால் அதனால் வரும் வசவும் என்னைத்தான் சேரும். அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை அலுவலர்கள் வரை உள்ள அனைவருக்கும் நான் வைக்கும் வேண்டுகோள், உங்களிடம் கோரிக்கை மனுவுடன் வருகிறவர்களை முதலில் உட்கார வைத்து பேசுங்கள். பிரச் சினையை காது கொடுத்து கேளுங்கள். அதுவே அவர்களுக்கு மன நிறைவை தரும். அப்படிக் கேட்டால், அவர்களு டைய பாதி பிரச்சினை தீர்ந்து போய், பாதியளவுக்கு நிம்மதி அடைவார்கள்.இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.