அன்னை மணியம்மையாரும் – கஸ்தூரிபா காந்தியும் – கோரா

viduthalai
3 Min Read

காந்தியாரின் இந்திய விடுதலைப் போராட்ட வாழ்க்கையில் கணிசமான பங்கு வகித்தவர்கல்தூரிபா காந்தி என்பதை வலியுறுத்தும் புத்தகம் ஒன்று வெளிவந்துள்ளது. ‘கஸ்தூரிபாவின் வாழ்க்கை’ என்ற தலைப்பிலான இந்த ஆங்கிலப் புத்தகத்தை தென்னாப்பிரிக்காவில் பிறந்த அவரது பெயரன் அருண்காந்தி என்பவர் எழுதியுள்ளார். 295 ரூபாய் விலையுள்ள ‘பெங்குவின்’ இந்தியா வெளியிட்டுள்ள இப்புத்தகம் குறித்த அதுல் சதுர்வேதி என்பவரின் அறிமுகக் கட்டுரையை ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு 30.7.2000 ஞாயிறு சிறப்பிதழில் வெளியிட்டுள்ளது.

வரலாறு போற்றும் பெருமகன்களின் வெற்றிக்குப் பின்னணியாக அவர்தம் துணைவியர் இருந்தாலும். இன்னாரின் துணைவி இவர், இவர்களுக்கு இத்தனை பிள்ளைகள் என்பது தவிர வேறு எந்தக் குறிப்பும் இடம் பெறுவதில்லை. பண்டித நேருகூட இதற்கு விதி விலக்கல்ல என்று குறிப்பிடும் கட்டுரையாசிரியர்.

தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது அந்த நாட்டு மக்கள் பார்சி இனத்தவரை மட்டுமே நாகரிகமானவர்களாகக் கருதினர் என்பதற்காக பார்சி பாணியில் உடையணிந்தது – இன வேற்றுமையை எதிர்த்து கணவரது கட்டளைப்படி சிறைச்சாலை ஏகியது – தீண்டத் தகாதாருடன் அமர்ந்து உணவருந்தியது – சம்பாரனில் காந்தியாருடன் இணைந்து மக்களிடையே சேவையாற்றியது – 1918இல் கைரா எனும் கிராமத்திலுள்ள பெண்களுக்கு சத்தியாகிரகத்தின் தத்துவங்களை எடுத்துரைத்தது – கூட்டங்களில் பேசி நிதி திரட்டியது – பிற்படுத்தப்பட்ட இனமான ராணிபராஜ் சமுதாயத்தினரின் இரண்டாவது மாநாட்டுக்குத் தலைமை ஏற்று அவர்களை குடிப் பழக்கத்தை விட்டொழிக்க வைத்து – கதர் நூற்பை ஏற்க வைத்தது.
1930இல் அரசியல் சீர்திருத்தங்களுக்கான ராஜ்கோட் சத்தியாகிரகத்தில் பங்கேற்றது. 1942 ஆகஸ்ட் 9ஆம் தேதி, கைதாகி விட்டதால் உரை நிகழ்த்த முடியாமல் போன காந்தியாருக்குப் பதிலாக, பொதுக் கூட்டமொன்றுக்குச் செல்லும்போது தானும் கைதானது. இரண்டாண்டுகளுக்குப் பின்னர் புனே நகரில் காவலில் இருந்தபோது முடிவடைந்தது – போன்ற செய்திகள் அப்புத்தகத்தில் இடம் பெற்று நீண்ட காலப் புறக் கணிப்புக்குப் பின்னர் கடைசியாக கஸ்தூரிபாவுக்குத் தரப்பட வேண்டிய அங்கீகாரம் அவரது பெயரனாலேயே தரப்பட்டு விட்டது என கட்டுரையாளர் முத்தாய்ப்பு வைத்திருக்கிறார்.

கஸ்தூரிபா காந்திக்குக் கிடைத்துள்ள மிக மிகக் காலந்தாழ்த்த அங்கீகாரத்தைப் பார்க்கும்போது அறிவுலக ஆசான் – இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனிதநேயக்காரர் தந்தை பெரியார் பெண்ணுலகுக்கும் பெண்ணுரிமைக்கும் தந்த முக்கியத்துவமும், பெண்தான் ஒரு குடும்பத்திற்கும். ஒரு சமுதாயத்திற்கும், ஏன் ஓர் இயக்கத்துக்கும் தலைமை தாங்க ஏற்றவர் என்பதை தன் வாழ்நாளிலேயே உலகுக்கு எடுத்துக் காட்டியவர் என்பதை அறிய, பெரியார் தொண்டர்களாகிய நமது உள்ளங்களெல்லாம் பூரிக்கிறது.
கள்ளுக்கடை மறியல் – ஒத்துழையாமை இயக்கம் இரண்டையும் நிறுத்துங்கள் என காங்கிரசார் கோரிக்கை வைத்தபோது அது என் கையில் இல்லை – தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பெண்மணிகள் (நாகம்மையாரும் கண்ணம்மையாரும்) இடம்தான் உள்ளது என்று பதிலளித்தவர் காந்தியார். அதுவும் 1920களிலேயே.
அய்யாவுக்குப் பின், கழகத்தைத் தலைமையேற்று வழிநடத்தியவர் மணியம்மையார் அல்லவா? அதுவும் 1975, தொடக்கம் 1978ஆம் ஆண்டு முடிய உள்ள இடைப்பட்ட காலத்தில் அம்மா அவர்கள் அவசர நிலையைச் சந்தித்தார்கள். ‘இராவண லீலா’ நடத்தி வடபுலத்தை அலற வைத்தார்கள்.

1973 டிசம்பர் 24ஆம் தேதி அய்யா மறைவுக்குப் பின்னர் கழகத் தலைமைப் பொறுப்பு ஏற்பு.

1974 – டிசம்பர் 25ஆம் நாள் சென்னை பெரியார். திடலில் ‘இராவண லீலா’ நடத்தி கைது – கழக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

1976 செப்டம்பர் 9ஆம் நாள் இராவண லீலா வழக்கில் அம்மாவுக்கும் தோழர்களுக்கும் ஆறு மாத சிறை. அதே ஆண்டில் செப்டம்பர் 16ஆம் நாள் பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு முதல் நாள், திடீரென்று கைது செய்யப்பட்டு, இரண்டு நாள் கழித்து விடுதலை.

1977 ஏப்ரல் 25ஆம் நாள் இராவண லீலா வழக்கில் அம்மாவுக்கும் தோழர்களுக்கும் விடுதலை.
அதே ஆண்டு அக்டோபர் 30 அன்று தமிழ்நாடு வந்த மேனாள் பிரதமர் இந்திரா காந்திக்குக் கருப்புக்கொடி காட்டியதற்காகக் கைது.

1978 மார்ச் மாதம் 16ஆம் நாள் மாரடைப்பு நோயால் முடிவு என அன்னை மணியம்மையார் அவர்களின் போராட்ட வரலாறு தமிழ்நாட்டுப் பத்திரிகைகளால் பதிவு செய்யப்பட்டு, தமிழ்நாட்டு மக்களால் பரவலாக நன்கறியப்பட்ட செய்திகளாகும்.

தன் வாழ்நாளிலும் தனது காலத்துக்குப் பிறகும் பெண்களுக்கு உரிய இடத்தைக் கொடுத்த பெருமை தந்தை பெரியார் ஒருவருக்குத்தான் உண்டு!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *