ஒன்றிய பிஜேபி அரசின் பொய்ப் பிரச்சாரம் முகத்திரையைக் கிழிக்கும் வாஷிங்டன் போஸ்ட்!

Viduthalai
3 Min Read

மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசின் பொய்ப் பிரச்சாரங்களை அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ விலாவாரியாக அம்பலப்படுத்தியுள்ளது.

“பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான கதைகளை பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரப்பி வருகின்றன. இதில் ஏராளமானவை உண்மைக்குப் புறம்பாகவும், வெறுப் புணர்வைத் தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளன.” என்று ‘வாஷிங்கடன் போஸ்ட்’ கூறியுள்ளது

மத ரீதியிலான, ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகளுக்கு எதிராக மற்ற நாடுகளில் நடவடிக்கை எடுக்கும்  – அமெரிக்காவை மய்யமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சமூக ஊடகங்கள் இந்தியாவில் மட்டும் அதனைக் கண்டும் காணாதது போல் விட்டுவிடுகின்றன.

உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் இந்த சமூக ஊடகக்காரர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளதால் ஆளும் கட்சியினருக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் அவர்களின் வியாபாரத்தை பாதிப்பதாக அமைந்து விடுகிறதாம் – 

அதுதான் இதில் உள்ள பின்னணி!

மேலும், இந்தப் பதிவுகள்மீது நடவடிக்கை எடுக் கும் பட்சத்தில் இணையதள தடை உள்ளிட்ட பல் வேறு அச்சுறுத்தல்களை பாஜக அரசு திட்டமிட்டே நடத்துவதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்கே உரித்தான உலகத் தரமான சாலைகள், உள்கட்டமைப்புகள் என்ற உண்மைக்குப் புறம்பான தகவல்கள் தொடங்கி, வெளிநாட்டு விவகாரம் வரை அனைத்திலும் ஆயிரக்கணக்கான பா.ஜ.க. தொண்டர் களைக் கொண்டு சமூக வலைதளம் மூலம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளில் இருந்தும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

சீனாவின் முக்கிய தொழில் நகரமான ஷாங்காய் பேருந்து நிலையத்தை குஜராத் அகமதாபாத் பேருந்து நிலையம் என்று காட்டவில்லையா? 

 பாரதிய ஜனதா கட்சி சமூக வலைத்தளம் மூலம்  நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பதிவிடப்படும் தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புணர்வுப் பதிவுகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அமெரிக்க நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி கட்சிக்கு ஆதரவாக பதிவிட வெளிநபர்களின் உதவியையும் நாடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கோடிக்கணக்கான ரூபாய் பல்வேறு நபர்களின் மூலம் உலகெங்குமிருந்து  சேர்கிறது என்றும் அந்த ஏட்டில் கூறப்பட்டுள்ளது

சமூக ஊடகங்கள் தங்கள் சேவை விதிமுறைகளை மீறும் உள்ளடக்கத்தைக் கண்காணிக்கவும், கட்டுப் படுத்தவும் தயக்கம் காட்டுகின்றனர். ஆளும் கட்சிக்கு ஆதரவாக ரகசியமாக இயக்கப்படும் போலி கணக்குகளைப் பயன்படுத்தி பேஸ்புக் மூலம் மிகப்பெரிய பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதை அந் நிறுவனம் கண்டுபிடித்தது. இருந்தபோதும் டில்லியில் உள்ள அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் அதனை முடக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.

அதே வேளையில், அரசுக்கு எதிரான விமர் சனங்களையும், கருத்துகளையும் நீக்கவேண்டும் என்று அரசிடம் இருந்து சமூக வலைதள நிறுவனங்களுக்கு வைக்கப்படும் அச்சுறுத்தல்கள் எண்ணிக்கை அதி கரித்து வருகின்றன. தவிர, சர்ச்சைக்குரிய பகுதிகளில் இணையதளம் முற்றிலும் முடக்கப்படுகிறது. (எடுத்துக் காட்டு – மணிப்பூர்)

“இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி பல்வேறு விதமான அவதூறுகளை பரப்பப்படுவது போல் இதுவரை வேறு எந்த நாட்டிலும் பார்த்ததில்லை” என்று அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றின் பேராசிரியர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார். வாட்ஸ்அப் மூலம் ஆதாரப்பூர்வமான தகவல்களை பகிர முறையான கட்டமைப்பு ஏதும் இல்லாமல் வரம்புகளை மீறிய தகவல்களைப் பரப்புவதில் இந்த குழுக்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

எத்தனை நாளைக்குத் தான் ஏமாற்றுவாரோ இந்த நாட்டிலே – அதுவும் சொந்த நாட்டிலே?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *