கோவை தனியார் நட்சத்திர விடுதியில் ஸ்டார்ட் அப் அகாடமி சார்பில் தமிழ்நாட்டின் சிறந்த சுய தொழில் நிறுவனங்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது. இந்த விழாவில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று சிறந்த சுயதொழில் முனைவோருக்கு விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் கோவையில் உள்ள முக்கிய தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க. கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நான் கருநாடகாவில் இருந்து தேர்ந் தெடுக்கப் பட்ட மாநிலங்களவை உறுப்பினராக இருந்தாலும்” என்று துவங்கி “மோடிதான் சுதந்திர மடைந்து இத்தனை காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டை தொழில் முனைவோருக்கான மாநிலமாக மாற்றிக் காட்டினார்” என்று பல வண்ண கட்டுக்கதைகளைக் கூறிக் கொண்டே வந்தார்.
அதே நிகழ்ச்சியில் ஒலி வாங்கியைப் பிடித்த ஒருவர் “எனக்கு அனைத்து தகுதி இருந்தும், ஒன்றிய அரசின் கடிதத்தை வழங்கியும் இன்றுவரை எனக்குத் தொழில் துவங்க வங்கிக் கடன் கொடுக்கவில்லை; பிறகு எப்படி தொழில்முனைவோர் சிறப்பாக செயல்பட முடியும்?” என்று நிர்மலா சீதாராமனுக்கு முன்பாகவே கூற, இதை எதிர்பாராத அமைச்சர் ‘நீங்க தான் எல்லாவற்றையும் ‘மைக்’ பிடித்து கூறிவிட்டீரே இனி நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?’ என்று கோபத்தை அடக்கிக்கொண்டு இறுக்கமான முகத்தோடு பேசி விட்டுச் சென்றார்
இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தின் போது சமஸ்கிருதப் பாடலும், நிகழ்ச்சிக்குப் பின்னர் தேசிய கீதமும் பாடப்பட்டன. அதேசமயம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடாமல் புறக்கணிக்கப்பட்டது. ஒன்றிய நிதி அமைச் சரும், சட்டமன்ற உறுப்பினரும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஒரு விழாவாகும்.
தமிழ்நாட்டில் எந்த விழாவிலும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடவேண்டும் என்பது கட் டாயமாகும். ஆனால் கோவையில் நிர்மலாசீதாராமன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த் திற்குப் பதில் சமஸ்கிருத சுலோகம் பாடப்பட்டது யாருடைய உத்தரவின் பேரில் என்று தெரியவில்லை!
தாம் கருநாடகாவில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டாலும் “நான் தமிழ்நாட்டுக்காரர் ஆகவே தமிழ்நாட்டின் மீது அக்கறை இருக்கும்” என்று கூறியவர் தனது நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இன்றி சமஸ்கிருத பாடலை ஒலிக்கவைத்து ரசித்தார்.
யார் எந்த மட்டத்தில், உயரத்தில் இருந்தாலும் அவாள் அவாளாகவே உள்ளனர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!
சென்னை அய்.அய்.டி.யில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டபோதுகூட திட்டமிட்டுத் தமிழ்த் தாய் வாழ்த்துப் புறக்கணிக்கப்பட்டு சமஸ் கிருதப் பாடல் கடவுள் வாழ்த்தாகப் பாடப்பட்டது.
“தமிழ்நாட்டில் இருந்தாலும், தமிழ்நாட்டில் படித் தாலும், தமிழ் நாட்டில் பிழைப்பு நடத்தினாலும் அவர்களின் பற்று எல்லாம் தங்களின் தாய்மொழியான சமஸ்கிருதத்தின்மீது தான்” என்று அறிஞர் அண்ணா கூறியதை இந்த இடத்தில் – நேரத்தில் நினைத்துப் பார்த்தால் உண்மை ஓடுகளை உடைத்துக் கொண்டு வெளியில் வரும்!
பார்ப்பனரல்லாதார் குறிப்பாக இளைஞர்கள் புரிந்து கொள்வார்களாக!