கற்க வழிகாட்டிய கலைஞர்!

viduthalai
4 Min Read

1972இல் வெளியான ‘குறத்தி மகன்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதுசமயம் அந்த படத்தின் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை கற்பகம் ஸ்டூடியோவில் நரிக்குறவர் இன மக்கள் கூட்டமாக வந்து சந்தித்தனர்..
அப்போது “அவர்கள் அய்யா.. உங்க படத்துல படிச்சா தான் முன்னுக்கு வரமுடியும்னு சொன்னீங்க. ஒங்க படத்தை பார்த்த பிறகுதான் படிப்போட அருமை பெருமை எங்களுக்கு புரிஞ்சது. எங்க புள்ளைங்கல்லாம் படிக்க நீங்களே ஒரு பள்ளிக்கூடம் கட்டிக் குடுங்க” என்று கோரிக்கை வைத்தனர்.
அவர்கள் பேசி முடிக்க இயக்குநரான கே.எஸ்.கோ. – “பள்ளிக்கூடம்லாம் தனி மனிதரால சாத்தியப்படாது. ஒருவேளை தொடங்கினாலும் தொடர்ந்து நடத்த முடியாது. நிறைய சட்ட திட்டங்கள் இருக்கு”ன்னு எவ்வளவோ எடுத்து சொல்லியும் அந்த மக்களும் விடுவதாக தெரியல..
“என்ன சாமி நீங்க நாங்கல்லாம் படிச்சி வாழ்க்கைல முன்னேறனும்னு படம் எடுத்து விட்டுட்டு இப்ப எங்களை படிக்க வைக்க முடியாதுன்னு சொன்னா எப்படி”ன்னு அவர்களும் அழ… நிலைமை ரசாபாசமானது.
உடனே சுதாரித்துக்கொண்ட இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (காங்கிரஸ்காரர்) நீங்கல்லாம் நேரா கிளம்பி கோபாலபுரம் போங்க. அங்கதான் முதலமைச்சர் வீடு இருக்கு.

‘நாங்கல்லாம் ‘குறத்தி மகன்’ படம் பார்த்தோம். அதுல வர்றா மாதிரி எங்க புள்ளைங்களை படிக்க வைக்க ஆசைப்படுறோம்’னு முதலமைச்சர் கிட்டசொல்லுங்க. நான் தான் உங்களை அவர்கிட்ட அனுப்பி வெச்சேன்னு சொல்லிராதீங்க.’ என்று சொல்லி அனுப்பி வெச்சார்.
விருகம்பாக்கத்திலிருந்த கற்பகம் ஸ்டூடியோவிலிருந்து கோபாலபுரம் முதலமைச்சர் வீடு வரை அவர்களும் கூட்டமாக நடந்தே சென்று முதலமைச்சர் வீடு முன்பு அமர்ந்து விட்டனர்.

உதவியாளர்கள் மூலம் தகவலை அறிந்த முதலமைச்சர் கலைஞர் வெளியே வந்து அவர்களை நேரில் சந்தித்து பேசி அவர்களின் கோரிக்கையை தெரிந்து கொண்டார்.
“இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காக ஒரு பள்ளி திறந்தால் அதில் நிறைய சட்டப் பிரச்சினைகள் வரும் அரசாங்கமே மக்களை பாகுபடுத்திப் பார்க்கறதா என்ற ஒரு கருத்து உருவாகிவிடும். எனவே, நீங்கள் ஏற்கெனவே ஆங்காங்கு இருக்கற பள்ளிகளிலேயே உங்க குழந்தைகளை சேர்க்கறது தான் சரி. எந்தப் பிரச்சினையும் வராம நாங்க பார்த்துக்கறோம்”னு அவர் சொல்ல, ஆனா அந்த மக்களோ “சாமீய் எங்க புள்ளைங்க பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லை. அங்க போய் மற்ற பிள்ளைகள் ஏதாவது கிண்டல் கேலி பேசினா அதைக் கேட்டு தாழ்வு மனப்பான்மையால் பள்ளிக்கூடம் போகமாட்டோம்னு சொல்லி எங்க புள்ளைங்க நின்னுருவாங்க.
இதிலெல்லாம் போய் பேசி சமாளிக்கற அளவுக்கு எங்களுக்கு அனுபவமும் அறிவும் இல்லை. எங்க மக்களின் கல்வி கனவு, கனவாகவே போய்விடும். ஆகவே எங்க புள்ளைங்க மட்டுமே படிக்க தனி பள்ளி தான் வேண்டும். அதுதான்சரியான நிவாரணம் சாமீய்” னு அவர்களும் வாதம் செய்ய கலைஞரும் அவங்க பேச்சில் இருக்கும் நியாயத்தை புரிந்து கொண்டு, சட்ட திட்ட பிரச்சினைகளை பிறகு பார்த்துக்கலாம்னு உதவியாளர்களிடம் சொல்லி அந்த இடத்திலேயே ஒரு உத்தரவு டைப் செய்து அதில் கையெழுத்து போட்டார்.

அந்த உத்தரவு தான் தமிழ்நாட்டின் முதல் நரிக்குறவர், குறும்பர், இருளர், லம்பாடிகள், பைராகிகள், குடுகுடுப்பைகாரர்கள் என இடம் பெயர்ந்து வாழும் இன மக்களின் குழந்தைகளுக்காக துவங்கப்பட்ட சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுலம் எனும் (1972இல்) ட்ரஸ்ட் உறைவிடப் பள்ளி.
அதன் அங்கீகாரத்திற்கு பணம் எதுவும் அரசுக்கு செலுத்தத் தேவையில்லை என்ற சிறப்பு சட்ட உத்தரவையும் அவரே போட்டார்.
கலைஞர் உத்தரவால் துவங்கப்பட்ட சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுல ட்ரஸ்ட் பள்ளிக்கு தன் பொன்விழாவை முன்னிட்டு கட்டடம் கட்ட நிதியளித்தவரும் கலைஞரே.
அந்த குருகுல பள்ளியை முன்னோடியாக வைத்து 2001க்கு பிறகு செயலலிதா ஆட்சிக் காலத்தில் தஞ்சையில் இடம்பெயர்ந்து வாழும் இன மக்களுக்காக மேலும் ஒரு உறைவிட பள்ளி தொடங்கப்பட்டது.
நரிக்குறவர், காணிக்காரர், குறும்பர் இன மக்களை மலைவாழ் பழங்குடியினர் இனத்தில் சேர்க்க பலமுறை வலியுறுத்தி யவர் கலைஞர் அவர்கள் தான்.
அதை ஒன்றிய அரசும் சட்டமாக நிறைவேற்றியுள்ளது. இந்த அரசாணை மூலம் அவர்கள் ஒன்றிய அரசின் 19% எஸ்சி /எஸ்டி ஒதுக்கீடில் ஒன்றிய அரசு பணிகளில் சேர முடியும்.

ஒரு சமூகம் ஒன்றிய அரசு வேலைக்கு செல்லவே சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆயிற்று.
இன்னும் எத்தனை சமூகங்கள் பள்ளிக்கூட வாசலையே மிதிக்காமல் இருக்கின்றனவோ?
வெறும் அரசு ஆணைகளால் மட்டும் அவர்களின் அவலம் தீர்த்து விடாது.
அவர்களுக்கு எதிரான அடக்கு முறைகளை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
சமூக நீதிக்களமான தமிழ்நாட்டிலேயே அடக்குமுறைகள் இன்னும் நீடித்திருக்கக் காரணம் புழுத்துப் போன ஜாதிப் பெருமையை கிளறி விட்டுக் கொண்டே இருக்கும் ஸநாதனிகள் தான். ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் ஜாதி வேறுபாடு இன்னும் மூர்க்கமாக திணிக்கப்படுகிறது.
ஜாதி அடிப்படையில் மட்டுமின்றி மத அடிப்படையிலும் சிறுபான்மையினர் ஒடுக்கப்படும் அந்த இடங்களிலும் அவர்கள் தலை நிமிர்ந்து வாழச் செய்ய வேண்டியது சமூக நீதி அரசின் கடமை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *