புவனேசுவரம், பிப். 16- தமிழ்நாட்டில் உடல் உறுப்புக் கொடையாளின் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு அறிவித்தபடி நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டைப்பின்பற்றி ஒடிசா மாநிலமும் தற்போது உடல் உறுப்புக் கொடை யாளர்களுக்கு அரசு மரியாதை அளிக் கப்படும் என்று அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உடல் உறுப்பு கொடையளிப்பவர்களின் இறுதி நிகழ் வில் முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் நேற்று (15.2.2024)அறிவித்து உள்ளார்.
மேலும், நிகழ்வுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசே செய்து, உடலின் மேல் மூவர்ணக் கொடி வைத்து 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், உடல் உறுப்புக் கொடை செய்தவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி யில் இருந்து ரூ. 5 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கூறுகையில், “மூளைச் சாவு அடைந்தவர்களின் உறுப்பை கொடையளிக்க முன்வரும் குடும்பத்தி னரின் தைரியம் மற்றும் தியாகத்தால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகிறது” என்றார்.
ஏற்கெனவே ஒடிசா அரசு உடல் கொடை மாற்று அமைப்பை நிறுவி, கடந்த 2020 முதல் உடல் கொடை செய்பவர்களுக்கு சூரஜ் விருதை வழங்கி வருகின்றது.
ஒடிசாவை சேர்ந்த சூரஜ் என்ற இளைஞர் விபத்தில் மூளைச் சாவு அடைந்த நிலையில், உடல் உறுப்புகளை அவரது குடும்ப உறுப்பினர்கள் கொடையளிக்க முன்வந்ததால் 6 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது.