தமிழ்நாடு மீனவர்கள் கிள்ளுக் கீரையா?

viduthalai
3 Min Read

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படை யினரது தொடர் தாக்குதலைக் கண்டித்தும், அதன்மீது எந்தவித அசைவையும் காட்டாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும் கடந்த 11ஆம் தேதியன்று இராமேசுவரத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இலங்கைக் கடற்படையின் தாக்குதல் ஒருபுறம், கடல் கொள்ளையர்கள் தாக்குதல் மற்றொருபுறம் என்று தமிழ்நாட்டு மீனவர்கள் ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்கும் மிகப் பெரிய பரிதாப நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மாநில அரசு நேரடியாகத் தலையிடும் அதிகாரம் இல்லாத நிலையில், ஒன்றிய அரசு தலையிடக் கோரி முதலமைச்சரால் கடிதம் மூலமும், நேரடியாகச் சந்திப்பின் மூலமும் வலியுறுத்தத் தான் முடியும்.
ஆனால், ஒன்றிய பிஜேபி அரசோ, அரசியல் கண்ணோட் டத்தோடு, தமிழ்நாடு மீனவர்கள் தானே தாக்கப்படுகின்றனர் என்ற அலட்சியத்தோடு பாராமுகம் காட்டி வருகின்றது.

2014-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்து, பாஜக ஆட்சி அமைந்ததற்குப் பின்னால்தான் அடக்குமுறைகள் இன்னும் அதிகம் ஆகியிருக்கிறது. கைது, தாக்குதல், சிறைச்சாலைகள் என்பதைத் தாண்டி, மீனவர்களுடைய பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகளை இலங்கை அரசாங்கம் பறித்துச் செல்வது அதிகரித்த வண்ணம் உள்ளது.
2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பாம்பனில் பா.ஜ.க. சார்பில்“கடல் தாமரை’என்ற போராட்டம் நடத்தப் பட்டது. அப்போது, சுஷ்மா சுவராஜ் வந்திருந்தார். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று உறுதி யளித்தார்.
“இராமநாதபுரத்தில் 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நரேந் திரமோடி, “தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் துன்புறுத்தப்படுவதும் – கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் நாள்தோறும் நடந்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் அரசின் பலவீனம்தான் காரணம்” என்று சொன்னார்.
“தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இருவர்களி டையிலான மோதலே காரணமாகும்” என்றும் கூறினார்.

“மீனவர்கள் பாதுகாப்பாக வாழவேண்டும் என்றால், இந்தியாவில் வலுவான அரசு அமைய வேண்டும். மீனவர்கள் வாழ்வு சிறக்க நான் ஒரு சபதம் எடுக்கின்றேன்” என்று குமரிக்குச் சென்று, 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று பேசினார் மோடி.
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட உயிரிழக்க மாட்டார்கள்” என்றும் ‘வீரம்’ பேசினார்.
2015-ஆம் ஆண்டும் தாக்குதல் நடந்தது. 2016-ஆம் ஆண்டும் தாக்குதல் தொடர்ந்தது. 2017-தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, நம் மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
மோடி அரசு வந்ததும் தமிழ்நாட்டு மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 122 படகுகளையும் நாட்டுடைமை ஆக்கியது இலங்கை அரசு. இப்போதும் கைதும், பறிமுதலும் தொடரு கின்றன.

பாஜக ஆட்சியில் உள்ள 2014 – 2024 காலத்தில் 3137 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப் பட்டுள்ளனர். 2004 – 2013 கால கட்டத்தில் 2915 பேரும், வாஜ்பாய் ஆட்சியில் இருந்த 2003இல் 606 பேரும் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய மீனவர்கள் மீது 13 தாக்குதல்களை அண்டை நாடுகளின் கடற்படைகள் தொடுத்துள்ளன. அண்டை நாட்டுச் சிறைகளில் விடுவிக்கப்படாமல் தற்போது இருப்பவர்கள் 266 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டில் மட்டுமே ஒரு தாக்குதல், கைது கூட இல்லை எனவும் ஒன்றிய அரசு அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கொடூரமான சூழலில், இலங்கை அரசு பொருளாதார வீழ்ச்சிக்கு ஆட்பட்டுத் தத்தளித்துக் கொண்டு இருந்த – இருக்கின்ற கால கட்டத்தில் இந்திய அரசு இலங்கைக்கு தாராளமாக கோடிக் கணக்கில் நிதி உதவியைச் செய்து வருகிறது. அதைக் கூடக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலும் அவர்களின் வாழ்வாதாரமான படகுகளைக் கைப்பற்றி, நாட்டுடமை ஆக்கப்படும் என்கிற அளவுக்கு இலங்கை அரசு அத்துமீறிக் கொண்டு இருக்கிறது. இதற்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமாக வரும் தேர்தலில் மக்கள் பிஜேபிக்கு வாக்குச்சீட்டு ஆயுதத்தால் பாடம் கற்பிப்பார்கள் என்பதில் அய்யமில்லை. இதை வெறும் மீனவர்கள் பிரச்சினையாகக் கருதக் கூடாது – ஒட்டு மொத்த தமிழர்கள் மீதான தாக்குதலே என்பதைக் கவனத்தில் கொள்வோம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *