– குடந்தை கருணா
ஓராண்டு காலம் தொடர்ந்து போராடி, மோடி அரசு கொண்டு வந்த விவசாயிகள் நலன்களுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதில் வெற்றி பெற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகளுக்காக மீண்டும் களத்தில் இறங்கத் தயாராகிவிட்டனர்.
சம்யுக்த கிசான் மோர்ச்சா (அரசியல் சாராத) ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் டல்வால் மற்றும் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் சர்வான் சிங் பாந்தர் ஆகியோர் ஒன்றிய உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பியூஷ் கோயல், விவசாய அமைச்சர் அர்ஜுன் முண்டா மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இருந்து வெளியே வந்த தேல்வால், “கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எங்களின் போராட்டம் தொடரும்”, என்றார்.
சண்டிகரில் ஒன்றிய அரசுடன் நடந்த மாரத்தான் பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில், விவசாயிகளின் இரண்டு பெரிய அமைப்புகளான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய இரண்டும், தங்களது கோரிக்கைகளுக்காக பிப்ரவரி 13 (செவ்வாய்க்கிழமை) ‘டில்லி நோக்கி அணி வகுப்போம்’ என்ற முழக்கத்தைக் கையில் எடுத் துள்ளன.
இதற்கிடையில், அய்க்கிய கிசான் மோர்ச்சா பிப்ரவரி 16-ஆம் தேதி ஒரு நாள் கிராமப்புற வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு விடுத்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, டில்லியின் எல்லையில் தங்கிப் போராடிய விவசாயிகளின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் மோடி அரசு, விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) விலை ஒப்பந்த உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவற்றை ரத்து செய்தது.
இந்தச் சட்டங்களின்படி, பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்கும் விதியை அரசாங்கம் ரத்து செய்யும் என்றும், அது விவசாயம் கார்ப் பரேட்மயமாவதை ஊக்குவிக்கும் என்றும் விவசாயிகள் அஞ்சினார்கள். அப்படி நடந்தால், பெரு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும் என்றும் கூறினர்.
மோடி அரசின் உத்தரவாதம் காற்றோடு போயாச்சு: இந்த விவசாயச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை திரும்பப்பெற்றனர். அப்போது அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதாக அரசு உறுதியளித்தது. அவர்களது கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றுவதாகவும் உறுதிமொழி அளிக்கப்பட்டது.
தற்போது அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்க விவசாயிகள் தயாராகி வரு கின்றனர். பிப்ரவரி 13-ஆம் தேதி ‘டில்லி சலோ’ என்ற முழக்கத்துடன் கூடிய போராட்டம் அதன் ஒரு பகுதியாகும்.
விவசாயிகளின் தற்போதைய கோரிக்கைகள்:
· அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உறுதி செய்யும் சட்டம்,
· சுவாமிநாதன் கமிஷன் ஃபார்முலா மூலம் பயிர் விலை நிர்ணயம்,
· 2021 அக்டோபரில் உத்தரப்பிரதேசம் லக்கிம் பூர்- கெரியில் விவசாயிகள் மீது வாகனம் ஏற்றி கொன்றதில் அவரது மகன் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியை நீக்குதல்,
· லக்கிம்பூர்-கேரி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வேலையும், காயமடைந்தவர் களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும்.
· மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை நாட்களின் எண்ணிக்கை 200 ஆக இருக்க வேண்டும்.
· 2021 ஆண்டு முழுவதும் நடந்த போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவும். வேண்டும்,
ஆகியவை கோரிக்கைகளில் அடங்கும்.
சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி விவசாயிகளுக்கு பயிர் விலை வழங்கப்படும் என்பது மிகப்பெரிய வாக்குறுதி. விவசாயிகள் சுற்றுச்சூழல் மாசுபாடு சட்டங்களிலிருந்து விடுவிக்கப்படுவர் என்று அரசாங்கம் கூறியதாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தலை வர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறியுள்ளார். ஆனால் இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்கிறார் தலேவால்.
எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவித்த அரசு, அவரது பெயரில் அமைக்கப்பட்ட குழு வின் அறிக்கையை அமல்படுத்தாதது முரணானது என்றார் தேலேவால். “விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்க வேண்டாம் என்று அவர் பரிந்துரைத் திருந்தார், ஆனால் அரசாங்கம் அதைத்தான் செய்ய முயற்சிக்கிறது,” என்பதையும் சுட்டிக் காட்டினார் தேலேவால்.
முந்தைய போராட்டம் திடீரென முடிவுக்கு வரவில்லை என்று விவசாயிகள் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருபவர்கள் கூறுகிறார்கள். அரசாங்கம் அப்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விவசாயிகள் இப்போது அழுத்தம் கொடுக்க முடிவெடுத்திருக்கின்றனர்.
விவசாயிகள் உரிமை ஆர்வலரும் பத்திரிகையாளருமான மந்தீப் பூனியா அதுபற்றிக் கூறுகையில், “நான்கு மாதங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று விவசாயிகள் கருதுகின்றனர். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை உருவாக்க இதுவே சரியான தருணம் என்று கருதுகின்றனர்,” என்றார்.
விவசாயிகள் இயக்கத்தில் பங்கேற்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கப்படுவதாக தலேவல் மற்றும் பூனியா இருவரும் தெரிவித்தனர். காவல்துறை வாகனங்கள் கிராமங்களுக்குச் சென்று மக்களை எச்சரிப்பது போன்ற காணொலிகளும் வெளியாகி யுள்ளன. விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என விவசாயிகள் எச்சரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தலேவால் பிபிசியிடம், “அரியாணாவில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கெடுக்கக் கூடாது என்று காவல்துறை வாகனங்கள் அறிவிக்கின்றன. வீடுகளில் எச்சரிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. மக்களிடம் வங்கிக் கணக்குகள் மற்றும் நிலங்கள் குறித்த பதிவுகள் கேட்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு டீசல் வழங்க வேண்டாம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் கூறப்பட்டுள்ளது. விவசாயிகள் டிராக்டர்களுடன் வெளியே சென்றால் பறிமுதல் செய்யப்படும், அவர்களின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பறிமுதல் செய்யப்படும், என்று எச்சரிக்கப்படுகிறது,” என்றார்.
“உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று பிரதமர் மோடி கூறுகிறார், மறுபுறம் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் அச் சுறுத்தப்படுகிறார்கள். நாங்கள் புதிய கோரிக்கை களுடன் வரவில்லை. பழைய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்கிறோம்,” என்றார் அவர்.
பஞ்சாபிலிருந்து அரியானா வழியாக டில்லிக்கு செல்லும் சாலை வழிகள் பலத்த படைகள் குவிக்கப் பட்டு தடை செய்யப்பட்டிருந்த நிலையில், அழைப்பை ஏற்று தென்னிந்தியாவில் இருந்து பயணம் செய்த விவசாயிகள் குழு ஒன்று போபாலில் நிறுத்தப்பட்டது.
எப்பொழுதும் போல் பஞ்சாபில் இருந்து விவசாயிகள் தடுப்புகளை அகற்றுவதற்காக கிரேன்களுடன் தயாராகி வருகின்றனர். அரியானா மற்றும் சண்டிகரில் உள்ள காவல்துறை தடை உத்தரவுகளைப் பிறப் பித்துள்ளது.
விவசாயிகள் போராட்டம் வெற்றி பெறுமா? மோடி அரசு வழக்கம் போல், உத்தரவாதம் என்ற பெயரில், பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, விவசாயிகளை ஏமாற்றுமா? பார்ப்போம்.
(பிபிசி தமிழ் உள்ளிட்ட பிற இதழ்களில் இருந்து தொகுத்தவை)